Wednesday, January 30, 2019

இப்போது இன்னும் பொருத்தமாய் . . .

இன்னும் வெறியோடு அலையும் தோட்டா



ஒரு முதியவரின்
உடல் துளைத்து
உதிரம் குடித்தும்
இன்னும் வெறியடங்காத
அந்த தோட்டா
ரத்த ருசி சுவைக்க
இந்தியா முழுதும்
அலைந்து கொண்டே
இருக்கிறது.

அயோத்தியில் கடப்பாறையாக,
ஒரிசாவில் பெட்ரோல் கேனாக,
குஜராத்தில் சூலமாக,
முசாபர் நகரில் வீடியோவாக
விதம் விதமாய்
வடிவம் எடுத்தும்
இன்னும் தணியவில்லை
அதன் ரத்த தாகம்.

சவங்களின் மீது
சாம்ராஜ்யம் அமைக்க
தொடர்கிறது
தோட்டாவின் பயணம்.

அண்ணலின் சமாதியில்
மலர் வளையம் தேவையில்லை.
ரோஜா இதழ்களை
தூவிடவும் அவசியமில்லை.
சிலைக்கு மாலையிடும்
சடங்கையும் சற்றே
ஒதுக்கி வைத்து

வெறி கொண்ட தோட்டாவின்
பதவிக்கான பயணத்தை
முறியடித்து
அமைதிப் பூங்காவாய்
தேசத்தை மாற்றி விட்டு
பிறகு செலுத்துவோம்
நம் அஞ்சலியை.

பின் குறிப்பு :

மீள் பதிவுதான். 
2014 ம் ஆண்டு எழுதியது.
இன்றும் இக்கவிதை பொருத்தமாயும்
அவசியமாயும் இருப்பது இந்தியாவின் பெருந்துயரம்.

No comments:

Post a Comment