Tuesday, August 30, 2011

சோனியா காந்தி, மன்மோகன்சிங் கவனத்திற்கு

 எங்கள் சங்க மாத இதழ் சங்கசுடருக்காக  எழுதியது

 


நூல்  அறிமுகம்

நூல்     :  நேரு  வழக்குகள்

ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்,

வெளியீடு : பாரதி புத்தகாலயம்
                      சென்னை - 18

விலை : ரூபாய்  90.00

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒன்பது முறை கைது
செய்யப்பட்டு  எட்டு வருடங்களுக்கு  மேல் சிறைவாசம்
அனுபவித்துள்ளார்.

எந்தெந்த வழக்குகளில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார்
என்ற விவரங்களை தெரிவிக்கும் நூல் இது. அந்த
காலகட்டத்தை அறிந்து கொள்ள உதவவும் வழிவகை
செய்கின்ற நூல் இது.

குறைந்த பட்சம் 12 நாட்கள் முதல் அதிகபட்சம் 1040 நாட்கள்
வரை மொத்தம் 3262 நாட்கள் அவர் சிறையில் இருந்துள்ளார்.
பிரசுரம் வினியோகம் செய்தது தொடங்கி, சட்டங்களை
மீறியது, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குச் சென்றது,
உணர்வுகளை தூண்டும் விதங்களில் கூட்டங்களில்
பேசியது போன்ற காரணங்களுக்காக அவர் கைது செய்யப்
பட்டுள்ளார்.

எந்த ஒரு வழக்கிலும் அவர் தனது விடுதலைக்காக
சொந்தமாகவோ அல்லது வேறு வழக்கறிஞர் கொண்டோ
வாதாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வழக்குகளில்
சட்டப்பிரிவுகள் தவறாக இருந்த போதிலும் கூட அதனை
தனது விடுதலைக்காக பயன்படுத்த விரும்பவில்லை.
மாறாக தனது நிலைப்பாட்டை, சுதந்திரப் போராட்டத்தை
நியாயப்படுத்தும் அறிக்கைகளை முன் வைக்கவே நேரு
நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொண்டார் என்று
பார்க்கிற போது அவர் மீதான மதிப்பு உயர்கின்றது.

அவர் நீதிமன்றத்தில் அளித்த ஒரு அறிக்கை பின்வருமாறு
அமைந்துள்ளது.

 "தன் மீது கொடுங்கோன்மை செலுத்தி
நசுக்கும் எந்த ஒரு அரசாங்கத்தையும் கவிழ்க்கும் உரிமை
மக்களுக்கு உண்டு. இந்த உரிமையைத்தான்  அன்று
இந்திய மக்கள் அன்று பிரகடனப்படுத்தினர். அந்த சபதம்
எடுத்த நாளிலிருந்து பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எந்த
இந்தியனும் மனப்பூர்வமாக பணிய மாட்டான். அந்த
ஆட்சியை அங்கீகரிக்க மாட்டான். இப்போராட்டம்
நடக்கும் போது  எங்களில் சிலர் எதிரியுடன் கூடிப்
பேசினால் அது அடிக்கும் கோலை முத்தமிடுவதாகும்.
தம்மைப் பிணைக்கும் சங்கிலிகளை ஆரத் தழுவதாகும்.

ஆனால் நாடு வேறு வழியைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது.
வெற்றி கிட்டும் வரை அப்பாதையிலேயே  தொடர்ந்து
செல்லும். சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும்
இடையே சமரசம் இருக்க முடியாது. உண்மைக்கும்
பொய்மைக்கும்  இடையே சமரசம் இருக்க முடியாது.
சுதந்திரத்தின் விலை உதிரமும் தியாகமும் தான்
என்பதை  நாங்கள் உணர்ந்திருக்கிறோம்."

இப்படிப்பட்ட தலைவர்களால் வழி நடத்தப்பட்ட
காங்கிரஸ் கட்சி இன்று எவ்வளவு பெரிய வீழ்ச்சியை
அடைந்துள்ளது. சுதந்திரத்தை  அமெரிக்காவின்
காலடியில் சமர்ப்பித்துள்ளது என்ற கோபத்தை
இந்த நூல்  உருவாக்குகின்றது.

நாம் மட்டுமல்ல, சோனியா, மன்மோகன்சிங்
வகையறாக்களும் படிக்க வேண்டிய  ஒரு
வரலாற்று ஆவணம்  இந்த நூல்.



2 comments:

  1. நல்ல பதிவு.
    அரிய விஷயங்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தலைப்பும்.பதிவின் கருவும் இப்போதைய காலகட்டத்துக்கு தேவையான ஒன்றுதான்.அப்படியே சிதம்பரம்ன்னு ஒருத்தர் உள்துறையில் இருப்பதாக கேள்வி.அவருக்கு நன்றாகவே தமிழ் தெரியும்.அவருக்கும் ஒரு பிரதி அனுப்புங்க.

    ReplyDelete