Friday, January 27, 2012

தனியாரிடம் செல்லவுள்ள தண்ணீர் வளம்




இந்த தேசத்தின் அனைத்து இயற்கை வளங்களில் பெரும் பகுதியை தனியார்வசம் ஒப்படைத்துள்ள மத்தியரசு இப்போது தண்ணீர் வளத்தையும் ஒட்டு மொத்தமாக தனியாரிடம் தாரை வார்க்க முடிவு செய்துள்ளது.

மத்தியரசு உருவாக்கியுள்ள தேசியத் தண்ணீர் கொள்கை மிகமிக மோசமானது, அபாயகரமானது. அரசு கொள்கை வரைவு ஒன்றை தயார் செய்து சுற்றுக்கு விட்டுள்ளது. அதன்படி குடிநீர் மற்றும் பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் பொறுப்பை அரசுகள் கைகழுவி விடும். அவை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதுதான் அந்த கொள்கையின் முக்கிய அம்சம்.

இதனால் நதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் எல்லாமே தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். பாதுகாக்கப் பட்ட குடிநீர் தேவை என்று எப்படி இப்போது மக்கள் மினரல் வாட்டர் பாட்டில்களையும் கேன்களையும்  பணம் கொடுத்து வாங்குகின்றார்களோ, அது போல அனைத்து தேவைகளுக்கான தண்ணீருக்கும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.

விதைக்கும், உரத்திற்கும்,பூச்சிக்கொல்லிக்கும்,இதர செலவினங்களுக்கும் பணம் இல்லாமல் சிரமப்படும் விவசாயி, பாசனத்திற்கான தண்ணீருக்கும் பணம் கொடுக்க வேண்டுமென்றால் எங்கே செல்வான்? இதன் விளைவுகள் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதிக்காதா? ஆனால் உலக வங்கி கட்டளை மத்தியரசை ஆட்டி வைக்கிறது.

பொலிவியா நாட்டில்    கோசமாம்பா நகரில்  நீர் நிர்வாகம் பெக்டெல் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் நிகழ்த்திய கொடுமைகளால் வெகுண்டெழுந்த பொலிவிய மக்களின் போராட்டம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைத்தது. இவா மொரேல்ஸ் தலைமையில் இடதுசாரி ஆட்சி மலர அடிப்படையாகவும் அந்த போராட்டம் அமைந்தது. அப்படிப்பட்ட சூழலை நாம் இந்தியாவிலும் உருவாக்க வேண்டும். 

2 comments:

  1. பயனுள்ள பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. மிக மோசமான நிலை உருவாகும்.

    ReplyDelete