Monday, January 9, 2012

நூறைத் தவறவிட்டதால் மகிழ்ச்சி – இது சச்சின் டெண்டுல்கர் கதையல்ல. கறுப்பு வெள்ளிக்கிழமைகளின் கதை!





இரண்டாண்டுகளுக்குப் பின் அமெரிக்கா சதத்தை தவற விட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை இது மிக மிக மகிழ்ச்சியான ஒரு செய்தி.

சச்சின் டெண்டுல்கர் இன்னும் நூறாவது நூறை அடிக்காமல் இருக்கிறாரே என்று  நாங்களெல்லாம் மனம் நொந்து போய் அடுத்த ஆட்டத்திலாவது அவர் அந்த சாதனையை புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு பட்டாசுக் கட்டுகளோடு நாங்களும் ஷாம்பெயின் பாட்டில்களோடு இந்திய அணியும் தவித்துக் கொண்டிருக்கிற போது சதம் அடிக்காமால் இருப்பது மகிழ்ச்சியான செய்தியா என அவர் ரசிகர்கள் என் மீது பாயலாம். (எவ்வளவு நீளமான வாக்கியம்! இதற்கு ஏதாவது விருது கிடைக்குமா? பாரத ரத்னா இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பத்மஸ்ரீ, கலைமாமணி ? )

அமெரிக்காவிற்கு இது மகிழ்ச்சியான செய்திதான்.

2008 ஆகஸ்டில் சர்வதேச பொருளாதார நெருக்கடி துவங்கியவுடன் அந்த நெருக்கடி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை அமெரிக்க வங்கிகள் திவாலாவதில் இருந்துதான் உணர முடிந்தது. தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று  திரைப்படம் ரிலீசாவது போல அமெரிக்காவில் வங்கிகள் திவாலாவது வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.

11.07..2008 ல் இன்டி மேக் என்ற வங்கி திவாலானதைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையுமே திகிலூட்டும் கறுப்பு வெள்ளிக்கிழமையாகவே அமைந்தது. சீட்டுக்கட்டுகள் போல வங்கிகள் மடமடவென்று சரிந்தன.

2008 ல்   30 வங்கிகள் திவாலாகியது.
2009 ல்  140 வங்கிகள் திவாலாகியது.
2010 ல்  161 வங்கிகள் திவாலாகியது.

வருடத்தில் இரண்டு, மூன்று வெள்ளிக்கிழமைகள் தவிர மற்ற வெள்ளிக்கிழமைகள் எல்லாமே வங்கிகளின் திவால்களை அறிவித்தன.

அப்படியென்றால் 2011 ல் வங்கிகள் திவாலாகவில்லையா என்று கேட்காதீர்கள். அதிகம் இல்லை ஜெண்டில்மேன் அன்ட் உமென், வெறும் 92 வங்கிகள் மட்டும்தான் திவாலானது. ஆக மூன்று இலக்க எண்ணிக்கையில் வங்கிகள் மூடப்படும் சோகத்தை 2011 சந்திக்கவில்லை.

இது மகிழ்ச்சிதானே!

மாற்றத்தை உருவாக்குவோம் என்ற முழக்கத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த பாரக் ஒபாமாவின் சீரிய நிர்வாகத்தில் வங்கிகளின் திவால் எண்ணிக்கை மூன்றிலக்கத்திலிருந்து இரண்டு இலக்கமாக குறைந்து விட்டதே!

இதை விட வேறு மகிழ்ச்சி வேண்டுமா என்ன?

1 comment:

  1. Enna sir ithu, meedi micham iruppade miga kuraivaan vangigal thanaaga irukkum. athunaala vaaraavaaram instalmentlea konjam konjamaa divala eduppathu enru avargalum oru scehme vechikittiruppanga. ithukku poyi alattikkalaamaa..

    ReplyDelete