Friday, October 16, 2020

அறம்னா தெரியுமா ஆஜானே?



புளிச்ச மாவு ஜெயமோகனுக்கு யாரையாவது வம்புக்கு இழுத்து திட்டு வாங்கிக் கொள்ளவில்லையென்றால்  தூக்கம் வராது போல.

பொதுவாக இறந்து போனவர்களின் சடலத்தை தோண்டி எடுத்து இழிவு படுத்துவதுதான் அவர் வழக்கம்.

அவரது முன்னாள் குருநாதர் சுந்தர.ராமசாமியை கொஞ்ச நாள் முன்பாகத்தான் தொடர் வசை பாடிக் கொண்டிருந்தார். இப்போது அவர் மீது திடீர் பாசம் வந்து விட்டது போல. அவரது சிறுகதை ஒன்றுக்கு தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர் வினையால்தான் இறந்து போனார் என்ற அவதூறை கிளப்பியுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன், ஜெயமோகனுக்கு ஒரு கண்டனக் கடிதம் அனுப்பி உள்ளார். அவரது பதிவை நீக்குவதுதான் அறம் என்றும் சுட்டிக் காட்டி உள்ளார். அக்கடிதத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆனால் என்ன ஜெயமோகனின் கதையில் அவர் உபதேசிக்கும் அறத்தை அந்த மனிதன் எந்நாளும் பின்பற்றியது கிடையாது. மூளை முழுக்க திமிரும் ஆணவமும் பொய்மையும் மட்டுமே நிரம்பியுள்ள மனிதனல்லவா!



அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்கள் வலைத்தளத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள்மீதான் வழக்கின் தீர்ப்பு பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

அதில் நான் பொறுப்பு வகிக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றியும் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா
Aadhavan Dheetchanya
மீது கொலைப்பழி சுமத்தும் விதமாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஆழ்ந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரிய பதிவுகள் இவை.

வசுமித்ர என்பவர் மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வன்கொடுமை வழக்குத் தொடர்ந்ததாக எழுதியிருக்கிறீர்கள். இது முற்றிலும் பொய்யான தகவல்.

25 ஆண்டுகளுக்கு மேலாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளனாக இயங்கிவருபவன் என்கிற முறையில் நான் கூற விரும்புகிறேன். சங்கம் துவக்கிய நாள் முதல் இன்றுவரை யார்மீதும் எங்கள் சங்கம் அப்படி வழக்குத் தொடுத்ததே இல்லை. ஆகவே உங்கள் பதிவில் உள்ள எங்கள் சங்கம் பற்றிய தவறான பதிவை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பிள்ளைகெடுத்தாள் விளை என்கிற சுந்தரராமசாமி அவர்களின் கதை பற்றி குமுதத்தில் சொன்ன ஒரு கருத்துதான் அது. அதற்குப்பிறகு அவரும் அதுபற்றி வேறு எங்கும் பேசியதுமில்லை எழுதியதுமில்லை.

”ஆதவன் தீட்சண்யா வகையறாக்களால் வேட்டையாடப்பட்ட போது” என்கிற கடுமையான கண்டனத்துக்குரிய வார்த்தைகளில் அதை வளர்த்தெடுக்கிறீர்கள்.இந்தப்பதிவையும் நீக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

சுந்தரராமசாமி அவர்கள் மீது பெரும் மதிப்புக்கொண்ட நானும் அவரோடும் கண்ணனோடும் தொடர்பில் இருப்பவன் தான். ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்காகத்தான் பயந்து போய் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார் அவர் சாவுக்கே இவர் கருத்துத்தான் காரணம் என்று கொலைப்பழி சுமத்தும் அளவுக்கு எழுதியிருப்பது மிக மிகக் கடுமையான வார்த்தைகள்.

பொதுவெளியில் இப்படி எங்கள் அமைப்பையும் அதன் பொறுப்பாளரையும் அவதூறு செய்வதை ஏற்க முடியாது. ஆகவே உடனடியாக இந்தப் பதிவுகளையெல்லாம் நீக்கவேண்டும். அதுதான் அறம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்,

ச.தமிழ்ச்செல்வன்

மதிப்புறு தலைவர்

No comments:

Post a Comment