Sunday, December 27, 2015

கரகாட்டக்காரன் வண்டியில் ஒரு பயணம்

வர்க்கப் போரில் உயிர் நீத்த நாற்பத்தி நான்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்தாண்டும் வெண்மணி சென்றோம். வெண்மணிக்கு செல்வதற்கு முன்பு  வழக்கம் போல திருவாரூரில் வெண்மணி சங்கமக் கருத்தரங்கமும் நடைபெற்றது. 










அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.திருநாவுக்கரசு உணர்ச்சி மிகு உரை ஒன்றை நிகழ்த்தினார். தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வும் பணியும்" என்ற நூலை எங்கள் அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். வெள்ளம் நிவாரணம் குறித்த பணிகளை எங்களது தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன், அவருக்கே உரித்தான பாணியில் நெகிழ்ச்சியோடு விவரித்தார். கடலூரில் நடைபெற்று வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக எங்கள் கடலூர் கிளைச் செயலாளர் தோழர் கே.பி.சுகுமாறன் கௌரவிக்கப்பட்டது எங்களுக்கு ஒரு பெருமை.

வெண்மணி வளைவிலிருந்து எங்கள் சங்கத் தோழர்கள் ஊர்வலமாக வெண்மணி நினைவகம் வரை செல்வோம். எனக்கு காலில் அடிபட்டதில் இருந்து ஊர்வலத்தில் நடப்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி கிளையில் பணியாற்றுகிற காந்தி என்ற தோழர் (முன்பு வேலூரில் பணியாற்றியவர்) பைக்கில் என்னை அழைத்துச் செல்வார். இந்த ஆண்டு அவர் ஊரில் இல்லாததால் நடந்தே சென்றேன். கொஞ்சம் அதிகமாக நடந்தால் நரம்பு இழுத்துக் கொண்டு பொறுக்க முடியாத வலியைத் தரும். ஆனால் அப்படி எதுவும் இந்த முறை நடக்கவில்லை.





வெள்ளத்தின் பாதிப்பு வெண்மணிக்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையை பாதிக்கவில்லை என்பது சிறப்பான ஒன்று. உழைக்கும் வர்க்க உணர்வுள்ள தோழர்களை எந்த பிரச்சினையும் பாதிக்காது என்பதற்கான உதாரணம் இது.

வெண்மணி அனுபவம் எப்போதும் போல எழுச்சியை அளித்தது. எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து செயல்பட ஊக்கம் அளித்தது. 

ஆனால் இந்த முறை வெண்மணி பயணத்தில் நாங்கள் சென்ற வேன் படுத்திய பாடு இருக்கிறதே, அதுதான் இந்த பயணத்தைப் பற்றி நினைத்தால் இனி நினைவிற்கு வரும் போல.

நீண்ட தூர வேன் பயணத்தில்தான் பார்க்காத சில திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தொலைக்காட்சி ரிப்பேர் என்பது முதல் சோதனை. கையில் எடுத்துச் சென்ற புத்தகத்தை படிக்க முடிந்தது என்றாலும் அது சூரியன் மறையும் வரையில்தான். அதற்குப் பிறகு தான் எனக்கு போரடித்தது என்றால் மற்ற தோழர்களுக்கோ பயணம் தொடங்கிய நிமிடத்தில் இருந்தே. 

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் வேன் நின்றது. கியர் லாக்காகி விட்டது என்று ஓட்டுனர் காரணமும் சொன்னார். நல்ல வேளையாக அருகிலேயே ஒரு மெக்கானிக் கடை இருந்தது. ஆனால் வாகனம் சரியாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது.  

அதன் விளைவு என்னவென்றால் மயிலாடுதுறையில் நல்ல ஹோட்டல் எது என்று விசாரித்து அமர்ந்து ஆர்டர் கொடுத்தால் பாதிப் பேருக்கு மட்டுமேயான மாவு இருக்கிறது என்ற சொல்ல மற்றவர்கள் பக்கத்தில் இன்னொரு உணவகத்துக்குப் போய் சாப்பிட்டு வர காலை பதினோரு மணிக்கு வேலூரில் புறப்பட்டவர்கள், இரவு பதினொன்றரைக்கு திருவாரூர் போய்ச் சேர்ந்தோம். 

வரும் வழியில் பூம்புகார் செல்வதா இல்லை வேளாங்கண்ணி செல்வதா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த வண்டியைப் பார்த்து வெறுத்துப் போய் நல்லபடியாக வேலூர் போய்ச் சேர்ந்தால் சரி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் துயரம்.

வந்து கொண்டே இருந்தோம். இரவு உணவு திருக்கோயிலூரில் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மெஸ்ஸில் சாப்பிடலாம் என்று வந்தால் அது மூடப்பட்டு கிடந்தது.  மீண்டும் ஊருக்குள் வருவதற்குப் பதிலாக திருவண்ணாமலை போய் விடலாம் என்று முடிவு செய்தோம்.

நாங்கள் வரும் நேரத்தில் சுவையாகவும் தரமாகவும் குறைந்த  விலையோடும் வேனை பார்க் செய்யும் வசதியோடு  எந்த ஹோட்டல் திறந்திருக்கும்?  என்று ஒரு கேள்வி, சில துணைக் கேள்விகளோடு திருவண்ணாமலையில் வசிக்கிற போளூர் கிளைச் செயலாளர் தோழர் சங்கரிடம் கேட்க, அவர் ஒரு ஹோட்டல் பெயரைச் சொன்னது மட்டுமல்ல,  இருபது பேருக்கான உணவையும் எடுத்து வைக்கச் சொல்கிறேன் என்றும் தெம்பு கொடுத்தார். 

சரி பனிரெண்டு மணிக்குள் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே தடால் என்ற பெரும் சத்தத்தோடு மீண்டும் வேன் நின்றது. மீண்டும் அதே பிரச்சினை.

என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. மீண்டும் தோழர் சங்கருக்கே போன் செய்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு பார்சல் வாங்கி வரச் சொன்னேன். அதற்குள் முதல் கியரில் வேன் நகரத் தொடங்கியது. ஹோட்டலுக்கே வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் சொன்னேன். அவரும் அங்கே வந்து விட்டார். எங்கள் வேன் மெதுவாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. 

ஒரு இருபது நிமிடத்திற்குப் பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கண்டு ஹோட்டல் வாசலுக்கு வருகையில் தோழர் சங்கரிடமிருந்து வேன்.

எங்க இருக்கீங்க தோழர் என்று கேட்க வெறுப்போடு சொன்னேன்

"உங்க கண்ணு முன்னாடி கரகாட்டக்காரன் கார் மாதிரி ஒரு வேன் ஒண்ணு வருது பாருங்க, அதிலதான் வந்துக்கிட்டு இருக்கோம்"




பின் குறிப்பு : இத்தோடு கதை முடியவில்லை. ஓனர் வேலூரிலிருந்து ஒரு மெக்கானிக்கோடு காரில் வருவதால் உள்ளூர் மெகானிக் யாரும் வேண்டாம் என்று ஓட்டுனர் சொல்லி விட்டதால் அவர்கள் எப்போது வந்து, எப்போது சரி செய்து, எப்போது கிளம்புவது என்று யோசித்து பேருந்தில் வேலூர் செல்ல முடிவெடுத்தோம். அது வரை அந்த வழியாக சென்ற வேலூர் பேருந்துகள் காலியாகவே போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிற்கோ இடமே இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருந்த நிலையில் ஓடிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் காரில் வந்திருந்த தோழர் சங்கரே மூன்று ட்ரிப் அடித்து அனைவரையும் பேருந்து நிலையத்தில் சேர்க்க, ஒரு வழியாக நள்ளிரவு இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

மேலே உள்ள படத்தில் எங்கள் கோட்டத்தில் உள்ள தோழர்கள் இருக்க பின்னணியில் இருப்பதுதான் எங்களை பாடாய் படுத்திய அந்த வேன்.
 
 
 

 

2 comments:

  1. கவிழ்ந்து போச்சா? பொழைச்சுட்டீங்களா?

    ReplyDelete
  2. நாங்கள் உயிரோடு இருப்பதில் உனக்கு ஏன் இவ்வளவு வருத்தம்? அடுத்தவர் மரணத்தை விரும்பியவர்களைத்தான் மரணம் முதலில் சந்தித்திருக்கிறது. ஆகவே ஜாக்கிரதை

    ReplyDelete