சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள பேய்கள் இந்தியாவுக்கு வரும் போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமல்லவா!
அடுத்தவன் காசை அடிக்க ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ரஞ்சித்தின் ‘PayNow’-க்கு ஒரு 100 வெள்ளி பணம் வந்தது. Notification-ஐப் பார்த்ததும் செயலிக்குள் சென்று யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்க்க முயன்றார். முகம் தெரியாத ஒருவர் அனுப்பியது போல இருந்தது. தவறுதலாக வந்திருக்கலாம்; திருப்பி அனுப்ப வழி இருக்கிறதா? என்று நினைத்தபடி, அடுத்த வேலைகளில் மூழ்கினார்.
மூன்று நாட்களுக்கு பின்னர் ஒரு அழைப்பு வந்தது. “உங்களுக்கு பணம் வந்ததா?” என்று ஒருவர் கேட்டார். ரஞ்சித் “ஆமாம்” என்றதும், “உடனே அதை திருப்பி அனுப்புங்கள்; வட்டியுடன் 150 வெள்ளி அனுப்ப வேண்டும்” என்று மிரட்டல் கலந்த குரலில் கேட்டான். வம்பு எதற்கு என்று ரஞ்சித் 150 வெள்ளி அனுப்பிவிட்டார். அன்றைய அலுவலகப் பணி சுமையில் இதற்கு நேரமிருந்ததே இல்லை.
ஒரு மாதம் கழித்து, மீண்டும் இதேபோல் அவரது அலைபேசி சினுங்கியது. இந்த முறை 1000 வெள்ளி பணம் வந்திருந்தது. ரஞ்சித் வங்கி செயலியில் பார்த்துவிட்டு மீண்டும் அவரது அன்றாட, ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போனார்.
இரண்டு–மூன்று நாட்களுக்கு பிறகு அழைப்பு வந்தது. ஆனால் இந்த முறை பெரிய மீன் வந்து வலையில் அகப்பட்டது. அழைப்பு வந்ததும் ரஞ்சித் அந்த எண்ணை உடனே எல்லா வழிகளிலும் BLOCK செய்து விட்டார். பணம் அனுப்பியவன் பதறிப் போனான்; ஒரு ஆயிரம் அனுப்பிவிட்டு “1500… 2000…” என்று பெரிய திட்டம் போட்டவன், “அடேய், இது என்னடா முதலுக்கே மோசமாகிவிட்டது!” என்று திகைத்து நின்றான்.
ரஞ்சித், 100 வெள்ளி வந்த நாளிலேயே முழுக் கதையையும் எழுதி காவல்துறைக்கு புகார் செய்திருந்தார். இன்றும் அதே ஆயிரம் வந்ததும் உடனடியாக மறுபடியும் புகார் செய்து முடித்தார். “உங்கள் சேவையில் நாங்கள், இதனை முழுமையாக நாங்களே டீல் செய்கிறோம்” என்று காவல்துறை உறுதி அளித்தது.
காவல்துறைக்கு சொன்னால் போதும், இனி நிம்மதி கிடைக்கும் என்று ரஞ்சித் நினைக்கவில்லை. இந்த scammers இதைத் தாண்டியும் வருவார்கள் என்று அவர் நிச்சயமாக அறிந்திருந்தார். தான்ன் வேலை செய்யும் நிறுவனத்திலும் HR department-க்கும் முன்கூட்டியே இரு சம்பவங்களையும், காவல்துறை புகாரையும் முழுமையாக விளக்கிவிட்டார். Expect for a call என்று மனநிலையை தயார் செய்துவிட்டார்.
வேலையிடம் பாதுகாக்கப்பட்டது. ஆனாலும் “அவன் இன்னும் என்ன செய்வான்?” என்று ரஞ்சித் காத்திருந்தார். ஆனால் அந்த கும்பல் ரஞ்சித் எதிர்பார்க்காத கோணத்தில் அடித்தது.
ரஞ்சித் குடியிருந்த வீடு ஒரு சீனரின் வீடு. அந்த scammer நேரடியாக வீட்டின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, “உன் வீட்டில் இருக்கும் ரஞ்சித் எனக்கு பணம் தர வேண்டும்; அவனிடம் இருந்து எனக்கு பணம் பெற்று கொடு. இல்லையெனில் அவனை வீட்டிலிருந்து துரத்திவிடு!” என்று கத்தியிருக்கிறான்.
ரஞ்சித் வழக்கம் போல் தனது முழுக் கதையையும், தெளிந்த தொணியில் உரிமையாளரிடம் விளக்கினார். “இது அவனுக்கும் எனக்கும் நடக்கும் விஷயம். நீ தேவையில்லாமல் இதில் தலையிட வேண்டாம். நான் மாதம் வாடகையை சரியாகத் தருகிறேனா? அதுவே நமக்குள்ள டீல்.” என்று சொன்னார்.
சில நாட்கள் அமைதி நிலவியது, ஆனால் அமைதிக்குப் பின்னர் புயல் வரும் தானே. இந்த முறை அந்த சீன வீட்டு உரிமையாளரை வேறு வழியில் மிரட்டினான். “இங்கே பாரு சொல்றதைக் கேட்கலைனா, உடனடியாக ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேயை அனுப்பி, அந்த வீட்டில் நிரந்தரமாக பேயை குடி வைப்பேன்!” என்று மிரட்டல் விடுத்தான்.
சீன நாட்டுப்புறக் கதைகளில் பல வகையான பேய்கள், அரக்கர்கள் இடம் பெறுகின்றனர். நாட்டுப்புறக்கதைகளில் மட்டும் அல்லாமல் நவீன இலக்கியம், திரைப்படங்கள் வரை அவற்றின் செல்வாக்கு இன்றும் உள்ளது.
பேய்கள் இறந்தவர்களின் ஆவி வடிவம். அதிகம் தீங்கு விளைவிப்பவை என்றும் தூண்டினால் உயிரோடு உள்ளவர்களுக்கு கேடு செய்யும் என்றும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை சீனத்தில் மட்டும் அல்ல; முழு கிழக்கு ஆசிய புராணங்களிலும் பாய்ந்து நிற்கிறது.
சிங்கப்பூரில் சீனர்கள் கடைப்பிடிக்கும் பேய் நம்பிக்கைகள் பெரும்பாலும் Hungry Ghost Festival-ஐ அடிப்படையாகக் கொண்டவை. ஏழாவது சந்திர மாதத்தில் ஆவிகள் பூமியில் சுற்றும் என நம்பப்படுகின்றது. அந்த மாதத்தில் இரவு வெளியே செல்வது, நீச்சல் அடிப்பது, விசில் அடிப்பது போன்றவை தவிர்க்கப்படுகின்றன. திருமணம், வீடு மாறுதல், புதிய வியாபாரம் தொடங்குதல் போன்ற முக்கிய நிகழ்வுகளும் தவிர்க்கப்படுகின்றன. கண்ணாடி முன் யாரும் உறங்குவதில்லை. துவைத்த ஆடைகளை இரவு வெளியே உலர விட்டால், மேன்மை தாங்கிய ஆவிகள் அந்த ஆடைகளை “அணிந்து கொள்வார்கள்” என்றும் நம்பப்படுகிறது.
பேய்களுக்கு தெருக்களில், பூங்காக்களில் வைக்கப்படும் படையல்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. எங்கள் கவிஞர்கள் வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தாலே கவிதை எழுத துவங்கிவிடுவார்கள்; ஆனால் இங்கே வண்ணத்துப்பூச்சிகளையும் ஆவி வடிவமாகவே நினைக்கிறார்கள். வண்ணத்துப் பூச்சிகளின் உடலை ஆவிகள் தற்காலிகமாகப் பயன்படுத்துவர் என நம்புகிறார்கள்.
சீனர்கள் இறந்தவர்களை மதித்து வழிபட்டால் குடும்பத்துக்கு பாதுகாப்பும் அதிர்ஷ்டமும் வரும் என்று நம்புகிறார்கள். இறந்தவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்று திடமாக நம்புகிறார்கள். அதற்கு பல ஊடகங்கள் வைத்துள்ளார்கள். சீனா, தைவான், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெறும் வருடாந்திர பேய் திருவிழாவில் தூபம், காகிதப் பணம், உணவு போன்றவை அர்ப்பணிக்கப்படுகின்றன.
இந்த நாடுகள் முழுவதும் நான் பயணிக்கும் நேரம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் குடியிருப்பு பகுதிகளிலும் ஒரு அண்டா மாதிரியான பாத்திரத்தில் காகிதம் எரிக்கப்படுவதை பார்த்தேன். ஒரு நாள் நண்பர் சுரேஷிடம் இது என்னடா தம்பி என்று கேட்டேன், அவன் போகிற போக்கில் “அண்ணே செத்த முன்னோருக்கு செலவுக்கு துட்டு அனுப்புறாயிங்கண்ணே” என்றான். இதை இவன் ஜாலியா சொல்றானா, உண்மையத்தான் சொல்றானா என்று அன்றைக்கு குழம்பினேன், ஆனால் ரஞ்சித்தின் பேய் அதை நமக்கு உறுதிப்படுத்திக் கொடுத்தது.
இவ்வளவு பேய் விசயங்கள் இருந்தால் வீட்டு ஓனர் பயப்படாமல் என்ன செய்வார்! அவர் பேய் கதைகளின் பயத்துடனேயே ரஞ்சித்திடம் வந்தார். ரஞ்சித், “பேசி முடிச்சிட்டீங்களா, ஓகே வாட்சப்பில் பேய் வரட்டும். வந்தால் அதோடே நான் வாழ்கிறேன். நான் வீட்டை காலி செய்யும் நாளில் ஒரு பேய் ஓட்டுகிறவனை வைத்து அதை ஓட்டிவிட்டு தான் போவேன்!” என்று தன் திரைக்கதையை முடித்தார்.
ரஞ்சித்தின் WhatsApp-க்கு பேய் வந்துவிட்டதா? அல்லது இனி மேல் தான் வரப்போகிறதா? தெரியவில்லை. அவர் அடிக்கடி பயணம் செய்யும் தாய்லாந்து, வியட்னாம், லாவோஸ் என அந்த பேய்கள் தவறாக சிங்கப்பூரை விட்டு வேறு எங்கும் டவுன்லோடு ஆகிவிட்டதா என்றும் தெரியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் பேய்கள் வேறு நாட்டில் சுற்றினால் அதுவும் தண்டனைக்குரிய குற்றம்.
ஆனால் இன்னும் ரஞ்சித் அவரது WhatsApp-ல் அந்த ‘ஆயிரம் வெள்ளி பேயின்’ வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம்.
“இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, இங்க பல கம்பெனிகளில் பேய் ஓட்டுகிற ஒருவரை நிரந்தர் ஊழியராக வைத்துள்ளார்கள்” என்றான் “அடேய் என்னடா சொல்ற” என்றேன்….

No comments:
Post a Comment