Wednesday, January 2, 2013

சாதனை மேல் சாதனை படைக்கும் தமிழக அரசு; வாழ்த்து சொல்வதா? நொந்து கொள்வதா?




தமிழக அரசு இந்த ஆண்டு புதிய சாதனை படைத்துள்ளது. அதற்காக அரசு மகிழ்ச்சியும் அடைந்துள்ளது.

அப்படிப்பட்ட சாதனை என்ன தெரியுமா?

இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திற்கு டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள விற்பனை 95 கோடி ரூபாயாம். கடந்த புத்தாண்டில் 70 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்ததாம். இந்த ஆண்டு கூடுதலாக 25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழக மக்களை கூடுதலாக குடிக்க வைத்ததற்கு பெருமைப் பட்டுக் கொள்ளும் அரசு இதுவாக மட்டுமே இருக்க முடியும். இலக்கை மிஞ்சிய பெருமிதம் வேறு இதிலே.

இதே போன்றதொரு விற்பனையை பொங்கல் பண்டிகைக் காலத்தில் வேறு எதிர்பார்க்கிறார்களாம்.

பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று சொல்கிற தமிழக முதல்வர், பாலியல் குற்றங்களுக்கு குடிபோதையும் ஒரு முக்கியக் காரணி என்பதை மறப்பது ஏனோ?

குற்றங்களை உருவாக்கும் சூழலை உருவாக்கி விட்டு கடுமையான தண்டனை விதிப்பது மிகப் பெரிய முரண்பாடு. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதில் தமிழக அரசுக்கோ, முதல்வருக்கோ உண்மையிலேயே விருப்பம் இருக்குமானால் மது விலக்கு பற்றி தீவிரமாக சிந்தித்து உறுதியாக முடிவெடுக்க வேண்டிய சரியான நேரம் இது.

ஒரு புறத்தில் மது பான விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து மறுபுறம் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பேன் என்று சொல்வது போலித்தனம், வெற்றுக் கூச்சல்.


1 comment: