Tuesday, January 29, 2013

நல்லதை சொன்னா கேட்கவே மாட்டாங்களா?





டெல்லி பாலியல் வன் கொடுமை அராஜகத்திற்கு பிறகு, இது போன்ற மோசமான சம்பவங்கள் நிகழாமல் இருக்க நீதியரசர் வர்மா தலைமையில் ஒரு குழு அமைத்தது.

உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக

மன்னிக்கவும்,

இந்திய ஜனநாயகத்திலேயே முதல் முறையாக ஒரு குழு நியமிக்கப் பட்ட முப்பது நாட்களுக்குள்ளாகவே ஆய்வு செய்து அறிக்கை அளித்த பெருமை வர்மா குழுவிற்குத்தான் உண்டு. பல்வேறு தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அளித்துள்ள அறுநூறு பக்க அறிக்கையில் முக்கியமான பல பரிந்துரைகள் உள்ளது.

தண்டனைக் காலத்தை அதிகரிப்பது தொடங்கி பல ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளது. உண்மையிலேயே அற்புதமான பணியை வர்மா குழு செய்துள்ளது. அவகாசம் கிடைக்கும் போது அத்தனையையும் எழுத முயற்சிக்கிறேன்.

இரண்டு ஆலோசனைகளை மட்டும் ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் அவசரம் அவசரமாக அறிவிக்கிறார்.

என்ன அவை?

ராணுவ சிறப்புச் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் நிற்க ஐந்தாண்டு கால தடை விதிக்கப்பட வேண்டும்.

இது இரண்டும் சாத்தியமில்லை என்று சட்ட அமைச்சர் சொல்கிறார். அதன் பொருள் என்ன?

மற்றவர்கள் தவறிழைத்தால் தண்டனை கொடுப்போம். ராணுவ வீரரோ
மக்கள் பிரதிநிதியோ தவறு செய்தால் பாதுகாப்போம் என்பதுதானே?
இந்த லட்சணத்தில் இவர்கள் மற்ற பரிந்துரைகளை மட்டும் எங்கே அமுலாக்கப் போகிறார்கள்?

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பெண்களேதான் பாதுகாப்பு. அரசு அதற்கு பொறுப்பல்ல. அவர்களுக்கு வேறு எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கிறது, இந்தியாவை விற்பது உட்பட.

1 comment: