Saturday, November 11, 2023

ஓயாத உருட்டுக்கள்.

 மூன்று வருடம் முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன். ஏனென்றால் ராஜராஜனிடமிருந்து தோழர் ஹோசிமின் வீரத்தை கற்றுக் கொண்டதென்ற கட்டுக்கதை மீண்டும் சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பி அதை உண்மை என நம்ப வைக்கும் முயற்சியை சங்கிகள் கைவிடவே மாட்டார்கள் போல. 

 இதுதான் ஹோசிமின் சமாதியில் ராஜராஜ சோழன் பற்றி எழுதியது என்று ஏன் இன்னும் போட்டோஷாப் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.

 

முன்னே சிவாஜி, இப்போ ராஜராஜன்



கீழே உள்ள செய்தியை  முதலில் படியுங்கள் . . .

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 
நம் சந்ததிக்கு.... .... 

படித்ததில் பிடித்தது

இது போன்ற செய்தியை இதற்கு முன்பாக படித்தது போன்ற நினைவு இருக்கிறதா?

இந்த செய்தியை படித்துள்ளேன். ஆனால் ராஜ ராஜ சோழனுக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜியின் கொரில்லா போர் தந்திரம்தான் என் வெற்றிக்கு காரணம் என்றல்லவா படித்திருக்கிறேன் என்றுதானே சொல்கிறீர்கள்!

ஆமாம். மூன்று வருடத்திற்கு முன்பாக இதே கதை சத்ரபதி சிவாஜி பெயரில் உலாவிக் கொண்டிருந்த்து. அதில் எக்ஸ்ட்ரா பிட்டாக அந்த வெளியுறவு அமைச்சர் ஒரு பெண் என்றும் சேர்த்திருந்தார்கள். இதெல்லாம் டுபாக்கூர் செய்தி என்றும் தோழர் ஹோ சி மின் சமாதியில் அப்படி சத்ரபதி சிவாஜி பற்றியெல்லாம் எதுவும் எழுதப்படவில்லை, வியட்னாம் வெளியுறவு அமைச்சராக எந்த காலத்திலும் ஒரு பெண் இருந்ததில்லை என்றும் வியட்னாம் அரசு தெளிவு படுத்தி விட்டது.

இப்போது அதே கதை ராஜ ராஜ சோழனைப் பற்றி உலவத் தொடங்கி உள்ளது. 

ஹோ சி மின் மார்க்ஸையும் லெனினையும் மாவோவையும் படித்துள்ளார் என்று தகவல் இருக்கிறது. சிவாஜி பற்றியோ ராஜராஜன் பற்றியோ அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. தெரியாவிட்டாலும் அது பெரிய விஷயமில்லை. 

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.

சத்ரபதி சிவாஜிக்கோ, ராஜ ராஜ சோழனுக்கோ இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் மூலம் பெருமை சேர்க்க அவர்கள் என்ன மோடியா? 

அவர்கள் ஏற்கனவே வரலாற்று நாயகர்கள்தானே! 

பிகு ; வரலாற்று நாயகர்களை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் அல்லவா! அதனால்தான் அந்த கதாபாத்திரங்களாக அவர் தோன்றியதை பயன்படுத்திக் கொண்டேன்.

பிகு 2 

தோழர் ஹோசிமின் உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்படவில்லை. மாறாக தோழர் லெனின் உடல் போல ஹனாய் நகரில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 

ஹனாய் நகரத்தில் உள்ள அவர் சிலையும் நினைவகமும் பாதுகாக்கப்பட்டுள்ள அவர் உடலும்  கீழே உள்ள புகைப்படங்களில் ...




1 comment: