Saturday, April 24, 2021

இன்றுதான் பாதுகாப்பு என்பதால் !!!!

 


 உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி போப்டே இன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். அவரது சில 'சாதனைகளை' மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆங்க்கில இந்துவின் நடுப்பக்கக் கட்டுரையில் பட்டியலிட்டிருக்கிறார். போப்டே நவம்பர் 2019இல் பதவியேற்றார்.

1. காஷ்மீர் வழக்கு: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தினை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப் படாமல் இருக்கின்றன.

2. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், அவற்றை அடக்குவதற்காக ஏவப்பட்ட அரச வன்முறை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஹாத்ராஸ் சம்பவத்தின் போது கைது செய்யப் பட்ட கேரளப் பத்திரிக்கையாளரின் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு விசாரணை மீண்டும் மீண்டும் தள்ளிப் போடப் பட்டுக் கொண்டிருக்கிறது.

3. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதியை பத்திரங்கள் மூலம் வழங்கலாம் என நிறைவேற்றப் பட்ட சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டார். ஏற்கெனவே அத்தகைய பத்திரங்கள் இருப்பதால் பிஜேபி அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை தடை செய்ய வேண்டியதில்லை என்று சொல்லி விட்டார்.

4. ரோஹிங்க்யா அகதிகளுக்குப் பாதுகாப்பு கோரும் மனு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

5. ஹேபியஸ் கார்பஸ் எனப்படும் ஆட்கொணர்வு மனுக்கள் பல மாதங்களுக்கு விசாரிக்கப் படாமல் நிராகரிக்கப் பட்டுவிட்டன. அல்லது உயர் நீதிமன்றங்களிடம் தள்ளி விடப்பட்டனர்.

6. கோவிட் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு நிவாரணம் அளிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என்று கூறிவிட்டார். 'அவர்களுக்கு உணவு கொடுக்கும் பட்சத்தில் எதற்கு பணம் கொடுக்க வேண்டும்?" என்றும் சொல்லி விட்டார்.

7. டெல்லியின் எல்லையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் நடக்கும் போராட்டம் தொடர்பான வழக்கில், பிரச்சினைகளை விசாரித்து மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை அமைத்தார். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிய வல்லுனர்களை அதில் உறுப்பினராக்கினார்.

8. நீதிபதிகள் நியமனஙக்ளும் தேக்க நிலையில் இருக்கிறது.
மிக்க நன்றி நியாயம்மாரே....

ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் நேற்றே பகிர்ந்து கொண்ட பதிவு.

 பணியில் இருக்கும் நீதிபதியை விமர்சித்த காரணத்திற்காக அவதூறு வழக்கு பாய்ந்து ஒரு ரூபாய் அபராதம் கட்டுவதிலிருந்து தப்பிக்கலாமே என்ற எச்சரிக்கை உணர்வுதான் இன்று பகிர்ந்து கொள்ள  காரணம்.

 பிரஷாந்த் பூஷண் பட்டியலைத் தாண்டி எனக்கு வேறு சிலவும் நினைவுக்கு வந்தது. பூரி ஜகன்னாதர் கோயில் தேர்த்திருவிழாவிற்கு  அனுமதி மறுத்த போது “இந்த பெருந்தொற்று காலத்தில் அனுமதி கொடுத்து மக்களை அங்கே வர வைத்தால் ஜகன்னாதரே என்னை மன்னிக்க மாட்டார்” என்று சொன்னவர் இரண்டு நாட்களிலேயே தீர்ப்பை மாற்றி விட்டு எங்களுக்கு மிரட்டல் வருகிறது என்றும் சொன்னார்.

 பாலியல் கொடுமை புரிந்த ஒருவனை நீ அந்த பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால் உன் தண்டனையை மாற்றுவதைப் பற்றி பரிசீலிக்கிறேன் என்று உச்ச நீதிமன்றத்தை ஆலமரத்தடி சொம்பு பஞ்சாயத்தாக மாற்றியவர்.

 இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி மீது ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி கொடுத்த புகார் பட்டியலை ஜஸ்ட் லைக் தட் நிராகரித்து அவர் இன்று தலைமை நீதிபதியாக வழி வகுத்தவர்.

 இதோ நேற்று கூட வேதாந்தாவின் பிரச்சாரகராக ஸ்டெரிலைட்டை திறக்கச் சொல்லி சாமி ஆடியுள்ளார்.

கடந்த வருடம் ஜனவரியில் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற  எங்கள் அகில இந்திய மாநாட்டை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு கோபால கௌடா துவக்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் மற்றும் குடியுரிமை மசோதா தொடர்பான வழக்குகளை விசாரிக்காமல் காலம் தாழ்த்தும் போக்கை கண்டித்த அவர் “இப்போதைய உச்ச நீதிமன்றத்தில் நான் அங்கம் வகிக்கவில்லை என்று மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டார்.

 எவ்வளவு வலி மிகுந்த வார்த்தைகள்!

 இப்படி பேச வைத்ததும் நம்ம பொப்டேதான்.

 ஆனாலும் சார், பாஜக பிரமுகரின் விலை உயர்ந்த பிரம்மாண்டமான பைக்கில் நீங்கள் கம்பீரமாக அமர்ந்த காட்சி சூப்பர்.

 சரி, உங்க அடுத்த போஸ்டிங் என்ன?

 கவர்னரா, வெளி நாட்டு தூதரா?  எம்.பி யா?

 

No comments:

Post a Comment