Tuesday, January 12, 2021

"செந்நெல்" படைப்பாளிக்கு செவ்வணக்கம்.

 


இன்று இரண்டு துயரங்கள்

தமுஎகச வின் நாகை மாவட்டத் தலைவர் தோழர் நா.காவியன் மறைந்தார் என்ற செய்தி முக நூல் வாயிலாக அறிந்து கொண்டேன். தந்தை பெரியார் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு முன்னுதாரணம் படைத்த் தோழருக்கு செவ்வணக்கம்.

அடுத்த அதிர்ச்சிச் செய்தியாக வந்தது எழுத்தாளர் தோழர் சோலை சுந்தரப் பெருமாள் அவர்களின் மறைவுச் செய்தி.

 வெண்மணி சம்பவம் குறித்து பல படைப்புக்கள் வந்துள்ளது. ஆனால் உண்மையை மட்டுமே பேசி கண் கலங்க வைத்த, வெண்மணி போராட்டத்தை கச்சிதமாக எடுத்துரைத்த ஒரே படைப்பு “செந்நெல்” மட்டுமே.

 நந்தனார் சரித்திரத்தை, அம்மக்களின் துயரத்தை, தில்லை வாழ் தீட்சிதர்களின் சதியை அழகியலோடு சொன்ன “மரக்கால்” நூலை மறைந்த எங்கள் சிதம்பரம் தோழர் சி.வெங்கடேசன் எனக்காக அவருடைய கையெழுத்தோடு வாங்கி அனுப்பினார். எங்கள் கோட்ட இதழ் “சங்கச்சுடர்” நூல் அறிமுகம் பகுதியில் அந்நூல் பற்றி எழுத அச்சகத்தில் தட்டச்சு செய்த கோபி படித்து விட்டு தருகிறேன் என்று வாங்கி திருப்பித் தராதது ஒரு வருத்தமே.

 தப்பாட்டம், பெருந்திணை, பால் கட்டு ஆகிய நூல்களும் விவசாயிகளின் பிரச்சினைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களையும் விவரிக்கும்.

 சங்கிகள் பிரச்சினை செய்த காரணத்தாலேயே கூடுதல் பக்கங்கள், கொஞ்சம் கூடுதல் விலை என்றாலும் “தாண்டவபுரம்” வாங்கினேன். பிரச்சினை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மட்டுமே சங்கிகள் அதனை எதிர்த்தார்கள் என்பது நூலை படித்த பின்பு புரிந்தது. அந்த நூல் குறித்து எழுதியதை பிறகு மீள் பதிவு செய்கிறேன்.

 முற்போக்குக் கருத்துக்களை தன் கலைப் படைப்புக்கள் மூலம் அளித்த தோழர் சோலை சுந்தரப் பெருமாள் அவர்களுக்கு செவ்வணக்கம்.

 

No comments:

Post a Comment