Tuesday, January 19, 2021

வரலாற்று தினத்தை மறவோமே!

 


இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் இன்றைய நாள் ஒரு முக்கியமான நாள். 

பாலிசிதாரர்கள் பணத்தை சூறையாடி வந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நாள். ஆயுள் இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்படுவதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள்.

எல்.ஐ.சி எனும் மகத்தான நிறுவனத்தின் துவக்கத்திற்கு அடிப்படையாக இருந்தது இந்த முடிவு.

ஆயுள் இன்சூரன்ஸை சாமானிய மக்களுக்கும் விரிவு படுத்துவது,

பாலிசிதாரர்கள் பணத்திற்கு பாதுகாப்பும் உரிய வருவாயும் தருவது.

மக்கள் பணம், மக்களுக்கே என்ற அடிப்படையில் எல்.ஐ.சி மூலம் திரட்டப்படும் நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்கு முதலீடு செய்வது

என்ற உயரிய நோக்கங்களோடு துவக்கப்பட்ட எல்.ஐ.சி அந்த நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் ஆல மரம் போல தேசமெங்கும் தன் விழுதுகளை பரப்பி எளிய மக்களுக்கு நிழல் அளித்துக் கொண்டிருக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் மீண்டும் தனியாரை அனுமதிக்க நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆசைப்பட்டார்கள். வாஜ்பாய் அந்த செயலை செய்து முடித்தார்.

அன்னியர்களின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் செயலை செய்த மோடி, இன்று எல்.ஐ.சி நிறுவனத்தையே தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளார்.

முப்பது லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து கொண்ட ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்ற ஆட்சியாளர்களின் முடிவு, மக்களின் பெரும் சொத்தை தனியாரின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவது என்பதே ஆகும்.

இன்சூரன்ஸ் துறை தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு எல்.ஐ.சி தோன்றுவதற்கு ஐந்தாண்டுகள் முன்பே உதயமாகி, இன்றும் எல்.ஐ.சி யின் காவல் அரணாக திகழும் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அரசின் முடிவை முறியடிப்பது என்ற உறுதியோடு போராட்டப்ப்பாதையில் நடை போடுகிறது.

நிச்சயம் நாங்கள் வெல்வோம். எங்களின் வெற்றி இந்தியாவின் வெற்றி, மக்களின் வெற்றி.



No comments:

Post a Comment