Sunday, August 25, 2013

அரசு ஊழியர்கள் என்றால் ஏன் இப்படி ஒரு இளக்காரம்?

எங்கள் சத்துவாச்சாரி பகுதி முழுமைக்குமாக ஆதார் அட்டை 
வழங்குவதற்கான முகாம் கடந்த ஒரு வாரமாக நடந்து 
கொண்டிருக்கிறது. 

ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து அந்தப் பணி முடிந்தது.
வரிசையில் காத்திருக்கும்போது அப்பப்பா எவ்வளவு
அனுபவங்கள்!

தங்களுக்கு மட்டுமே முக்கிய வேலைகள் உள்ளது, மற்ற
அனைவரும் வெட்டியானவர்கள், தங்களுக்கு முன்னுரிமை
அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களுக்கு
உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. தனியார்
வங்கிகளிலோ அல்லது நவநாகரீக மால்களில் பில்கள்
போடும்போதோ இந்த கனவான்கள்  எந்தவித முனகலும்
இல்லாமல் பொறுமை காப்பவர்கள் என்பது வேறு விஷயம்.

மக்கட்தொகை கணக்கெடுப்பின்போது கொடுக்கப்பட்ட 
ஒப்புதல் சீட்டு கொண்டு வர வேண்டும் என்பதை வெளியில்
கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தாலும் அது 
இல்லாமல் சட்டம் பேசியவர்கள் பலர்.

ஒரு கட்டத்தில்தான் நான் கொஞ்சம் பொறுமை
இழக்க வேண்டியிருந்தது.

கணிணியில் கொஞ்சம் சிக்கல் வந்து தாமதம் ஆன போது
" இந்த கவர்ன்மெண்ட் எம்ப்ளாயீசே இப்படித்தான். இந்த
வேலையெல்லாம் பிரைவேட்டிடம் கொடுத்துடனும் ".

அப்போதுதான் நான் சொன்னேன்

" இந்த பணியே தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸிங்
செய்யப்பட்டு தனியார்  நிறுவன ஊழியர்கள்தான் செய்து
கொண்டிருக்கிறார்கள். எல்லா பணிகளையும் தனியாரிடமும்
தரவும் முடியாது. தரவும் கூடாது"

பிறகு இன்னும் கொஞ்சம் விளக்கமும் தரவேண்டி இருந்தது.

" மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு பிரம்மாணடமான
பணி. இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் சென்று
ஒவ்வொரு இந்தியனையும் நேரடியாக சந்திக்கிற பணி.
அதன் பின்பு திரட்டப்படுகின்ற ஏராளமான தகவல்களை
தொகுக்க வேண்டும். இந்தியாவின் சமூக சூழல் பற்றி 
இந்த கணக்கெடுப்பில்தான் அறிய முடியும். அதன் அடிப்படையில்
அரசு திட்டங்களையும் உருவாக்க முடியும். இந்த சவாலான
பணியை ஒவ்வொரு பத்தாண்டிலும் அரசு ஊழியர்களும்
ஆசிரியர்களும்தான் திறம்பட செய்து கொண்டு வருகின்றார்கள்.
ஆகவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று
அரசு ஊழியர்கள் பற்றி  பேசாதீர்கள் " என்று சின்ன வகுப்பே
எடுத்த பின்பு 

தனியாருக்கு ஆதரவான அந்த குரல் ஓய்ந்தது.

அரசு ஊழியர்களின் பணியில் இன்னும் மேம்பாடு வேண்டுமா
என்றால் கண்டிப்பாக வேண்டும்.

ஆனால் அதற்கு நிர்வாக முறையில் கண்டிப்பாக சில
மாற்றங்கள் வேண்டும். நடைமுறைகளில் எளிமை வேண்டும்.
வெள்ளைக்காரன் பாணியில் பக்கம் பக்கமாய் குறிப்பு
எழுதும் பழக்கம் மாற வேண்டும். 

எத்தனை குறிப்புக்கள் எழுதினாலும் அதை மீறித்தானே
ஊழல்கள் நடந்து கொண்டிருக்கிறது!

பிறகு அந்த கோப்புக்களும் காணாமல் போகிறது?
 

2 comments:

  1. தங்களுக்கு மட்டுமே முக்கிய வேலைகள் உள்ளது, மற்ற
    அனைவரும் வெட்டியானவர்கள், தங்களுக்கு முன்னுரிமை
    அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெரும்பாலானவர்களுக்கு
    உள்ளது
    >>
    நிஜம்தான்

    ReplyDelete
  2. அவசரம் அவசரம் எங்கும் எதிலும் அவசரம் . டூ வீலருக்கு சைடு ஸ்டான்ட் கண்டுபிடித்ததில் இருந்தே அனைவருக்கும் அனைத்திலும் அவசரம் .

    ReplyDelete