சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, October 31, 2025
அந்த பயம் இருக்கனும் சங்கி
தமிழர்களை இழிவு படுத்தும் மோடியை துரத்துவோம்
ஒடிஷா மாநில சட்டமன்ற தேர்தலின் போது தமிழர்களை திருடர்கள் என்று இழிவுபடுத்திய மோடி அதே நச்சை இப்போது பீகாரிலும் கக்கியுள்ளார்.
இரண்டாண்டுகள் முன்பாக பீகாரிகள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சங்கிகள் ஒரு போலி வீடியோ மூலமாக பொய்ப்பிரச்சாரம் செய்ய, அந்த பொய்யர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இப்போது அதே பொய்யை மோடி கட்டவிழ்த்துட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து தமிழர்களை பொய் சொல்லி இழிவுபடுத்தும் மோடி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டுக்குள் வந்து தமிழ் மொழி, திருக்குறள் என்றெல்லாம் வேஷம் போடும் மோடியை இனி தமிழ்நாட்டுக்குள்ளேயே அனுமதிக்கக் கூடாது.
மோடியே வெளியேறு என்று உரக்க குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமையும் ஆகும்.
உரக்கச்சொல்வோம்
GO BACK MODI
Wednesday, October 29, 2025
நீதிபதியின் கேள்விக்கு பதிலென்ன ஜட்ஜய்யா?
பூவு போல விழுந்திருப்பாரோ விஜய்?
கீழேயுள்ள செய்தியை படியுங்கள்...
அதனை படித்தவுடன் வில்லாதி வில்லன் திரைப்படத்தின் ஒரு காட்சிதான் நினைவுக்கு வந்தது.
விஜய் இப்படியெல்லாம் காலில் விழுந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். வேண்டுமானால் மோடி, அமித்ஷா கால்களில்
23ம் புலிகேசி போல விழலாம்...
Tuesday, October 28, 2025
தெரு நாய்கள் -உச்ச நீதிமன்றம் - மாநில அரசுகள்
"தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் அளித்த வழிகாட்டுதல்களை அமலாக்கியது தொடர்பாக ஒவ்வொரு மாநில அரசும் பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் உத்தரவிட்டும் எட்டு வார அவகாசம் அளித்தும் மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தவிர வேறெந்த மாநிலங்களும் தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பிரமாண வாக்குமூலம் அளிக்கவில்லை. டெல்லி மாநகராட்சி கொடுத்த பிரமாண வாக்குமூலம் என்பது போதுமானதல்ல. நாங்கள் மாநில அரசைத்தான் கேட்டோம்.
எனவே வரும் 03.11.2025 அன்று மேற்கு வங்கம், ஆந்திரா தவிர மற்ற அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் காலை பத்து மணிக்கு எங்கள் முன்பாக ஆஜராக வேண்டும்."
இது நேற்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அமர்வு பிறப்பித்த உத்தரவாகும்.
ஆக இந்த உத்தரவு தெளிவுபடுத்துவது ஒரு விஷயத்தைத்தான்.
தெரு நாய்கள் கடித்து எத்தனை பேர் இறந்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அதனை எச்.ராசாவின் உயர் நீதிமன்றமாக கருதி அலட்சியப்படுத்துவோம் என்று மாநில அரசுகள் இருக்கின்றன.
முதன் முதலில் தெருநாய்ப் பிரச்சினை வந்த போதே எழுத நினைத்தேன். ஆனால் அப்போது ஏனோ இயலவில்லை.
இன்று நிகழ்ந்த ஒரு சம்பவம் எழுத வைக்கிறது. அது பற்றி தனியாக எழுதுகிறேன்.
தெருநாய் பிரச்சினை என்பது பல்வேறு வருடங்களாக பல்கி பெருகியுள்ளது. ஏதாவது பெரு நகரத்தில் இறப்பு நேர்கிற போது பெரிய சர்ச்சையாக வருகிறதே தவிர மற்ற சமயங்களில் பேசு பொருளாக இருப்பதில்லை.
வேலூரில் ஒவ்வொரு தெருவிலும் குறைந்த பட்சம் பத்து நாய்களுக்கு மேல் இருக்கும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் பாதசாரிகளும் உயிரை கையில் பிடித்த படி அச்சத்துடனே பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் துரத்துவதால் ஏற்படும் விபத்துக்களுக்கு அளவே இல்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட எங்கள் நிறுவன அதிகாரி ஒருவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டை புதுப்பித்த பொறியாளர் கூட நாய் குறுக்கே வந்ததால் ப்ரேக் போட்டு கீழே விழுந்து முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்து இன்னும் நடக்க முடியாமல் தவிக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருக்கும். நானெல்லாம் பல வருடங்களாக இரவு பத்து மணிக்கு மேல் இரு சக்கர வாகனத்தை தொடவே மாட்டேன்.
நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது எதிர்காலத்தில் தெரு நாய்ப் பெருக்கத்தை தவிர்க்கலாம். ஆனால் இப்போது உள்ளவற்றை, அதனால் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்?
குடும்பக் கட்டுப்பாடு செய்வதால் அவற்றின் வெறித்தனமும் போவோர் வருவோரை துரத்துவதும் மாறிப் போய் விடப் போகிறதா என்ன?
முன்பு போல தெரு நாய்களை பிடித்து கொல்வது வேண்டுமானால் கொடூரமானதாக இருக்கலாம். ஆனால் அவற்றை பிடித்து தனியானதொரு இடத்தில் அடைக்கலாமே! அது செலவுதான். ஆனால் அத்தியாவசியமான செலவுதான். மக்களின் பாதுகாப்புக்கான செலவுதான். தெருநாய் புரவலர்கள் இதை எதிர்த்தால் அவர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கட்டும்.
தெருநாய் புரவலர்கள் தெரு நாய்களுக்கு பொது வெளியில் உணவளித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் உதாசீனம் செய்யப்படுகிறது. இதனை அமலாக்கினாலே கொஞ்சம் பிரச்சினை தீரும்.
எங்கள் வீட்டு வாசலில் ஒரு ஒரவலன் இரண்டு ஐந்து ரூபாய் டைகர் பிஸ்கெட் வாங்கி அதை உடைத்து உடைத்து போட்டுக் கொண்டிருப்பான், அவனிடம் ஒரு முறை சண்டை போட்டேன். "இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா? " என்று அவன் கேட்க, "தெரு நாய்க்கு பிஸ்கெட் போட இது உங்கப்பன் வீட்டு ரோடா?" என்று திருப்பி கேட்டதற்கு பின்னே அடங்கினான். இப்போதும் அவன் சைக்கிளில் செல்லும் போது அவன் பின்னே பத்து நாய்களாவது துரத்திக் கொண்டே ஓடும். அவை ஒரு நாள் அவனை கடித்தால்தான் புத்தி வரும். இது எல்லா தெரு நாய் புரவலர்களுக்கும்தான்.
தெரு நாய்களை அரசு தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதனை மாநில அரசுகள் செய்வதை உச்ச நீதிமன்றம்தான் உறுதி செய்ய வேண்டும்.
பிகு: மேலே உள்ள படம் 05.10.2025 அன்று காலை 04.47 மணிக்கு என் வீட்டு வாசலில் எடுத்தது. அன்று ஒரு வேளையாக சென்னை செல்லப் புறப்பட்டு கதவை திறக்கும் வேளையில் இத்தனை தெரு நாய்கள். கூடவே மாடுகளும்.
Monday, October 27, 2025
தோழர் ஏகாம்பரம் - மிகச் சிறந்த வழிகாட்டி
நேற்றைய இரவு துயரமான இரவாக முடிந்தது.
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர் என்.ஏகாம்பரம் நேற்று இரவு இயற்கை எய்தினார். அவருடனான நினைவுகள் மனதில் அலை அலையாய் மோதிக் கொண்டிருந்தது.
அவரை நான் முதன் முதலில் அறிந்தது 12.06.1988 அன்று நடைபெற்ற வேலூர் கோட்டத்தின் அமைப்பு மாநாட்டில்தான்.
வேலூர் கோட்டத்தின் இணைச்செயலாளராக அந்த மாநாட்டில்தான் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகே அவருடனான பரிச்சயம் தொடங்கி பின்னாளில் வேலூர் கோட்ட அலுவலகத்திற்கு மாறுதலில் வந்த பிறகு அது நெருக்கமாக மாறியது.
எனக்கு திருமணம் நிச்சயமான சூழலில் அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த நெய்வேலிக்கு கும்பகோணம் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவிக்கு மாறுதல் கிடைக்காது என்ற நிலையில் என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருந்த எனக்கு "வேலூருக்கு இருவரும் வாருங்கள்" என்ற ஆலோசனையை அவர்தான் வழங்கினார்.
தோழர் ஏகாம்பரம், எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு முதலில் பணி நியமனம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவர். பணியில் சேர்ந்த போதே சங்கத்திலும் சேர்ந்தவர். சங்கத்தின் உறுப்பினர்களை, தலைவர்களை நிர்வாகம் வேட்டையாடிக் கொண்டிருந்த நேரம் அது. எந்த அச்சமும் இல்லாமல் சங்கத்தில் இணைந்தது மட்டுமன்றி செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர்.
பணியில் சேர்ந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் பயிற்சி வகுப்பே நடத்தினார்கள் என்பார். அந்த பயிற்சி வகுப்பில் அவரோடு பங்கேற்றவர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம். அப்போதே தென் மண்டல இணைச்செயலாளராக இருந்த தோழர் என்.எம்.எஸ், பயிற்சி வகுப்பின் தேநீர் இடைவேளையின் போதும் மதிய உணவு இடைவேளையின் போதும் மாநாட்டு அறிக்கையை எழுதிக் கொண்டிருப்பார், அவர் மிகப் பெரிய உயரத்துக்குச் செல்வார் என்று அப்போதே தெரிந்தது என தோழர் என்.எம்.எஸ் அவர்களைப் பற்றி தோழர் ஏகாம்பரம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.
ஊழியர்கள் பலன் பற்றிய அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் அலுவலகத்தில் செய்த பணியும் "ஓய்வுக்கால பலன்களை பட்டுவாடா செய்தல், பதவி உயர்வு பெறுவோருக்கான ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்தல்" ஊழியர்களுக்கு அதிகபட்ச பலன் கிடைப்பதையும் அவை உரிய காலத்தில் கிடைப்பதையும் உறுதி செய்தவர்.
ஊழியர்களுக்கான பணியிட மாறுதல்களின் போது அதிகபட்ச மாறுதல்கள் கிடைப்பதற்கான சூட்சுமங்கள் அறிந்தவர். அவர் உருவாக்கிய ராஜபாட்டை இன்றும் பல தோழர்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கிறது.
பணி ஓய்வு என்பது அவரது சங்க உணர்வுகளுக்குக் கிடையாது. நுகர்வோர் குறியீட்டு எண் என்ன என்பதை ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து ஒவ்வொரு மூன்று மாதமும் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு வரும் என்பதை கணக்கிட்டு தகவல் சொல்வார். அவர் எனக்கு இறுதியாக வாட்ஸப்பில் அனுப்பிய செய்தி கூட அகவிலைப்படி உயர்வு பற்றித்தான்.
அந்த ஆர்வம்தான் கடந்தாண்டு "அகவிலைப்படி- தோற்றமும் முன்னேற்றங்களும், ஒர் வரலாற்றுப் பார்வை" என்ற நூலை அவரது 86 வது வயதில் எழுத வைத்தது. அந்த நூல் வெறும் அகவிலைப்படியோடு நிற்கவில்லை. ஆட்சியாளர்களின் கொள்கைகள் உழைக்கும் மக்களை எப்படித்தாக்கும் என்பதை விளக்கும் நூலாகவும் இருந்தது. திண்டிவனத்தில் நடைபெற்ற கோட்டச்சங்க மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்டார்.
அவர் நிஜமாகவே "எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்"தான். கர்னாடக இசையில் ஆர்வம் உள்ளவர்கள். ராகங்களின் அழகை விளக்கக் கூடியவர். ஆபேரி ராகத்தின் அழகை "நகுமோ" கீர்த்தனையில்தான் உணர முடியும் என்பார். பல கர்னாடக இசை காணொளிகளை அனுப்பி அந்த ராகங்களின் சிறப்பையும் சேர்த்து சொல்வார்.
மார்க்சியத்தின் மீதும் மதச்சார்பின்மை கொள்கையின் மீதும் அசையாத நம்பிக்கை கொண்டவர். மத உணர்வுகளை அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்பவர்களை அம்பலப்படுத்த தயங்காதவர். இன்றைய ஆட்சியாளர்கள் பற்றி அவர்களை ஆதரிக்கும் உறவினர்களுக்கு இவர் அனுப்பிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கொள்கைக்காக யாரிடமும் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கறாராக இருப்பவர் என்பதை அந்த செய்திகளே சொல்லும்.
வயது வித்தியாசம் இல்லாமல் பழகக் கூடியவர். அனைவரிடமும் தோழமை உணர்வை வெளிப்படுத்துபவர்.
பல சந்தர்ப்பங்களில் நான் அவருடைய ஆலோசனையை கேட்டுப் பெற்றுள்ளேன். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டுமென எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் முன்மொழிந்த போது அந்த பொறுப்பை ஏற்று நம்மால் செயல்பட முடியுமா என்று மலைப்பு ஏற்பட்ட போது அவரிடம் ஆலோசித்தேன். நம்பிக்கையும் தைரியமும் உற்சாகமும் கொடுத்தார்.
பணி ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆன பின்பும் சங்கத்தின் தகவல்களை கேட்டு தெரிந்து கொள்வார், எல்.ஐ.சி நிறுவனத்தின் சுற்றறிக்கைகளை அனுப்பச் சொல்லி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.
அவர் என்னை செல்லமாக கடிந்து கொண்ட ஒரு நிகழ்வும் உண்டு.
1990ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. நான்கு நாட்கள் தென் மண்டல மாநாடு நடந்தது. ஐந்தாவது நாள் தென் மத்திய மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் அமைப்பு மாநாடு. மாநாட்டு அறிக்கையில் ஒரு வார்த்தை சொல்ல வந்த முக்கியக் கருத்தை எவ்வாறு சிதைக்கிறது என்று எங்கள் கோட்ட பிரதிநிதிகள் விவாதிக்கையில் சுட்டிக்காட்டினார். அவர் சொன்ன கருத்தை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கையில் தோழர் ஜகதீசன் சுட்டிக் காண்பிக்க அதனை அறிக்கை மீதான விவாதத்திற்கு தொகுப்புரை வழங்குகையில் அந்த வார்த்தையை மாற்றுவதாக அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா குறிப்பிட்டார்.
தென் மண்டல மாநாடு முடிந்த நாளன்று ஏதாவது தெலுங்குப் படம் பார்ப்போம் என்று கிளம்பினோம். அவரையும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றோம். எதுவும் தெரியாமல் ஒரு திரை அரங்கில் நுழைந்தோம். கடைசியில் அந்த படம் மிக மோசமான முறையில் சொதப்பலாக எடுக்கப் பட்டிருந்த 16 வது வயதினிலே படத்தின் ரீமேக், "என் தூக்கத்தை கெடுத்து இப்படி ஒரு படத்துக்கு போய் கூட்டிட்டு போனீங்களே" எறு கேட்டதுதான் அந்த நிகழ்வு.
கதவடைப்புப் போராட்டத்தின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டோம். அந்த நூலிற்கு ஒரு வாழ்த்துச் செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டோம். மகிழ்வோடு இசைந்து உடனடியாக அனுப்பி வைத்தார். அச்சிடும் பணியின் இறுதிக்கட்டத்தில் தொலைபேசி செய்து வேலூர் கிளையின் அனுபவத்தைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை எழுத விரும்புகிறேன். உங்களால் அதனை இணைக்க முடியுமா என்று கேட்க அது எங்களுக்கான நல்வாய்ப்பு என்று சொல்ல மறுநாளே அருமையான ஆங்கிலத்தில் அனுப்பி வைத்தார். அவரின் சங்க உணர்வுக்கு அது ஒரு சான்று.
கடந்த ஜூலை இறுதியில் 70 பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்ட ஒரு நோட்டை கொடுத்தனுப்பியிருந்தார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முக்கியப் போராட்டங்கள் பற்றி எழுதியிருந்தார். அதனை ஒரு நூலாக்கும் பணிகள் துவங்கும் முன்பே அவர் மறைந்து விட்டார். அந்த பணியை முடித்து உரிய காலத்தில் வெளியிட வேண்டும்.
இறுதி மூச்சு வரை சங்கத்தின் மீது கொண்ட பற்று மாறாமல் தான் அறிந்தவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று உழைத்தவர் தோழர் ஏகாம்பரம். அவர் வாழ்வே மற்றவருக்கான உதாரணம்.
நீங்கள் உயர்த்திப்பிடித்த தீபத்தை தொடர்ந்து பாதுகாப்போம் என்று உறுதியேற்று செயல்படுவதே அவருக்கான சிறந்த அஞ்சலி.
செவ்வணக்கம் தோழர் ஏகாம்பரம்
சில முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கீழே . . .
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வைரவிழாவை முன்னிட்டு வேலூர் கோட்டம் வெளியிட்ட நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசிய போது எடுக்கப்பட்ட படங்கள்.
வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டு மாநாட்டின் போது வெளியிடப்பட்ட வேலூர் கோட்ட 25 ஆண்டுகள் வரலாறு நூலின் முதல் பிரதியை பெற்ற போது.
அவர் எழுதிய "அகவிலைப்படி, தோற்றமும் முன்னேற்றங்களும், ஓர் வரலாற்றுப் பார்வை" நூலை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா வெளியிட்ட போது . . .
Saturday, October 25, 2025
மாட்டுக்கார வேலனும் ஆட்டுக்காரனும்
முழு காணோளியை போட்டு ஆட்டுக்காரனுக்கு விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை. அதுவும் அந்த இந்து தமிழ் திசை வெளியிட்ட காணொளியில் பகிரப்பட்ட எஸ்.பி.பி பாட்டு ஆட்டுக்காரனுக்கு ஓவர் ஹைப் கொடுப்பதால் உருவான எரிச்சலாலும் அதனை பகிரவில்லை.
Thursday, October 23, 2025
சங்கிகளோடு போட்டியிடும் விஜயினர்
காக்க வைத்த எம்.ஜி.ஆர்
கரூர் நெரிசல் மரணங்கள் எழுத வைத்த இன்னொரு ஒரு அனுபவப் பதிவு.
எட்டாவது வரை காரைக்குடியில் படித்துக் கொண்டிருந்த நான் ஒன்பதாவது முதல் பனிரெண்டாவது வரை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். எட்டாம் வகுப்பில் பார்டரில் பாஸ் செய்ததால் என் அக்கா ஆசிரியராக வேலை பார்த்த பள்ளியில் அவரது கண்காணிப்பில் படித்தாலாவது தேறுவேன் என்ற நம்பிக்கையில் அங்கே வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன் என்பதுதான் அக்மார்க் உண்மை.
1978 ல் திருக்காட்டுப்பள்ளி வாசம் தொடங்கியது. ஒன்பதாவது முழுப் பரிட்சை முடிந்து விடுமுறைக்கு காரைக்குடி (என் பெற்றோர் அப்போது அங்கேதான் இருந்தார்கள் ) சென்று பத்தாவது வகுப்பு பள்ளி திறக்கும் நாளில் திருக்காட்டுப்பள்ளி வந்தால் ஊரே பரபரப்பாக இருந்தது.
ஆம்.
திருக்காட்டுப்பள்ளி, இடைத்தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது.
ஆம்.
1979 ஜூன் மாதம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.டி.சோமசுந்தரம் (பின்னாளில் உதிர்ந்த ரோமம் என்று புகழ் பெற்றவர்) தமிழக அமைச்சரானதால் ராஜினாமா செய்ய இடைத்தேர்தல் வந்தது.
1977 பொதுத்தேர்தலில் உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதியில் தோற்றுப் போன திருமதி இந்திரா காந்தி மீண்டும் மக்களவைக்குச் செல்ல தஞ்சை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். அவர் போட்டியிடப் போகிறார் என்றுதான் பத்திரிக்கைக்கள் எழுதின. அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து கலைஞர் போட்டியிடுவார் என்றும் எழுதினர். ஆனால் இவை இரண்டுமே நடக்கவில்லை. இந்திரா போட்டியிட அதிமுக ஆதரவு தரக்கூடாது என்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் மிரட்டியதால்தான் எம்.ஜி.ஆர் பின் வாங்கினார் என்றும் பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் எம்.ஜி.ஆர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார்.
காங்கிரஸ் சார்பில் சிங்கார வடிவேலு என்பவரும் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கமும் (இந்நாள் கல்வி அமைச்சர் அன்பில் மஹேஷ் பொய்யாமொழியின் தாத்தா) போட்டியிட்டனர்.
நான் விடுமுறை முடிந்து திருக்காட்டுப்பள்ளி வரும் முன்பே அந்த சிறு ஊருக்கு மூன்று முக்கியத் தலைவர்கள் வந்து போயிருந்தனர்.
அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அன்றைய முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோருடைய கூட்டங்கள் காவிரியில் ( நதியில் தண்ணீர் இல்லை) நடந்திருந்தது.
அதற்குப் பிறகு நடந்த கூட்டம் நடிகர் திலகம் சிவாஜி கணெசனின் கூட்டம். அந்த கூட்டம் தினசரி மார்க்கெட்டை ஒட்டிய ஒரு திடலில் நடந்தது. தஞ்சாவூர் தொகுதிக்கு திமுக சம்பந்தமே இல்லாத திருச்சிக்காரரை நிறுத்தியுள்ளது என்று அவர் குற்றம் சுமத்தினார். ஒரு வேளை இந்திரா அம்மையார் நின்றிருந்தால் ????
தேர்தல் நாளுக்கு ஒரு நான்கு நாட்கள் முன்பாக எம்.ஜி.ஆர் திருக்காட்டுப்பள்ளி வரப் போவதாக காரில் மைக் கட்டி கிராமம் கிராமமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இரவு எட்டு மணிக்கு அவர் வருவார் என்று சொல்லப்பட்டது.
எந்த மைதானத்திலோ, காவிரியிலோ எம்.ஜி.ஆர் பேசவில்லை. மூன்று சாலைகள் சந்திக்கும் ஒரு முனையில் அவர் ஜீப்பில் நின்றபடியே பேசுவார் என்று சொல்லப்பட்டது. ஆறு மணிக்கெல்லாம் அந்த இடம் நிரம்பி வழிந்தது. பக்கத்தில் இருந்த ஒரு பள்ளி நண்பனின் கடையில் பாதுகாப்பாக இடம் பிடித்திருந்தேன்.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. தலைவர் வந்து கொண்டே இருக்கிறார் என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் வருவதாகத் தெரியவில்லை. பதினோரு மணி வாக்கில் அறிவிப்பு வந்தது. வரும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் தலைவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பேசச் சொல்வதால் தாமதமாகிறது. அதனால் வேறு வழியில்லாமல் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்படுகிறது, நாளை எட்டு மணிக்கு இதே இடத்தில் மீண்டும் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர். மக்களும் அமைதியாகக் கலைந்தனர்.
மறு நாளும் ஆறு ,மணிக்கெல்லாம் மக்கள் குவிந்து விட்டனர். ஆனால் இந்த முறை எட்டரை மணிக்கெல்லாம் எம்.ஜி.ஆர் வந்து விட்டார். அவர் பேசியதை எல்லாம் எங்கே மக்கள் கேட்டார்கள்! ஒரே ஆரவாரம்தான், பார்த்தாலே பரவசமடைந்த மக்கள் அவரிடம் காண்பித்த பிரியமே தேர்தல் திசை வழியை சொன்னது.
முதல் நாள் வராமல் காக்க வைத்தமைக்கு அவர் வருத்தம் தெரிவித்தார் என்பது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. "தலைவா, தலைவா" என்று அப்போது மக்கள் எழுப்பிய ஆரவாரமே அவர் வருத்தமெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் சொல்லாமல் சொன்னார்கள் என்பதன் அர்த்தம்.
41 பேர் இறந்ததற்கு தான் தாமதமாக வந்ததுதான் முக்கியக் காரணம் என்பதை இன்னமும் ஒப்புக் கொள்ளாமல் சதிக் கோட்பாடு எழுதும் விஜய் தன்னை எம்.ஜி.ஆர் என்று நினைத்துக் கொள்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.
பிகு: அந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிங்காரவடிவேலுதான் வெற்றி பெற்றார். வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்தது.
மோடி, ட்ரம்ப் பொய்யன் யார்?

கடந்த செவ்வாயன்று ட்ரம்ப் மோடியை தொலைபேசியில் அழைத்து தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளார்.
அந்த தொலைபேசி பேச்சு பற்றி ட்ரம்ப் சொன்னது
"நாங்கள் இருவரும் ஏராளமான விஷயங்கள் பற்றி பேசினோம். ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசினாலும் கூட வர்த்தக பேரங்களில்தான் அவர் அதிக கவனம் செலுத்தினார். ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, பாகிஸ்தானுடன் போர் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினோம்"
இது ட்ரம்ப் கூறியது.
அதுவும் எங்கே? யாரிடம்?
வெள்ளை மாளிகையில் அமெரிக்க வாழ் இந்திய கோடீஸ்வரர்களுக்கு அளித்த தீபாவளி விருந்தின் போது.
ரஷ்யாவிலிருந்தான எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்துக் கொண்டு விட்டது என்று இந்த வாரத்தில் மட்டும் நான்கு முறை ட்ரம்ப் கூறினாலும் இந்தியா அது பற்றி வாய் திறக்கவேயில்லை என்று ஆங்கில இந்து நாளிதழ் சொல்கிறது.
மோடி என்ன சொல்கிறார்?
தீபங்களின் திருவிழாவான இன்று நம் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளும் உலகெங்கும் நம்பிக்கை தீபம் ஏற்றுவதை தொடர்ந்து அனைத்து வடிவிலுமான தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டு நிற்போம்"
இதிலே யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்?
இரண்டு பேர் சொல்வதும் உண்மையாக இருக்கலாம். இரண்டு பேர் சொல்வதும் பொய்யாகவும் இருக்கலாம்.
ஏனென்றால் அடிப்படையில் இருவருமே பொய்யர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள், சந்தர்ப்பவாதிகள், மோசடிப்பேர்வழிகள்.
இரண்டு நாட்டு மக்களைக் குழப்ப இருவருமே பேசி வைத்துக் கொண்டு கூட பொய் சொல்லியிருக்கலாம்.
ட்ரம்ப் சொல்வதெல்லாம் பொய் என்று சொல்லும் தைரியம் மோடிக்கு வராத வரை ட்ரம்ப் சொல்வதுதான் உண்மை என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
சரி அப்படி மோடி சொல்லி விட்டால், மோடி உண்மையை பேசுகிறார் என்று ஒப்புக் கொள்வீர்களா என யாராவது அனாமதேயம் கேட்கலாம்.
அப்படி மோடி தைரியமாக சொல்லட்டும்.
அதற்குப் பிறகு நீங்கள் பார்ப்பீர்கள் "பேய்க்கும் பேய்க்கும் சண்டை"
Tuesday, October 21, 2025
ராஜீவ் கூட்ட்டத்தில் சுருண்ட கதை . . .
விஜயின் கரூர் கூட்டத்தில் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த நாள் முதல் எழுத நினைத்த என் சொந்த அனுபவம் இது.
1984 ல் இந்திரா காந்தி கொல்லப்பட்டு ராஜீவ் காந்தி பிரதமராகிறார். தன் தாயின் மரணத்தால் உருவான அனுதாபத்தை அறுவடை செய்ய மக்களவையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கிறார்.
அத்தேர்தலுக்காக நாடெங்கிலும் பிரச்சாரம் செய்கிறார். அப்போது நாங்கள் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் இருந்தோம். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கான பிரச்சாரத்திற்காக நெய்வேலி வருகிறார். முதல் நாள் மாலையில்தான் ஆட்டோவில் அறிவிப்பு செய்கிறார்கள்.
மதுரையில் படித்துக் கொண்டிருந்தாலும் ஐந்தாவது செமஸ்டர் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தேன்.
ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு புறப்பட்டேன். ராஜீவ் காந்தி மீது பெரிய நாட்டம் எல்லாம் ஒன்றும் கிடையாது. அந்த காலகட்டத்தில் பிடித்த தலைவர் ராமகிருஷ்ண ஹெக்டேதான். இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண்சிங் ( நான் பார்த்த போது அவர் பிரதமர் இல்லை) ஆகிய மூன்று பிரதமர்களை பார்த்துள்ளேன். அந்த பட்டியலில் ஒன்று கூடுவதை வைத்து கல்லூரியில் பீற்றிக் கொள்வதுதான் நோக்கம்.
மந்தாரகுப்பம் சுரேஷ்குமார் பேலஸ் தியேட்டர் (பெயர் சரியாக நினைவில் இல்லை, சந்தோஷ்குமார் பேலஸாகக் கூட இருந்திருக்கலாம்) பக்கத்தில் கூட்டம் என்று சொன்னார்கள். சைக்கிளில் போனால் அங்கே கூட்டம் நடப்பதற்கான எந்த சுவடும் இல்லை. இன்னும் கொஞ்ச தூரம் போனால் கூட்டம் நடக்கும் இடம் வரும் என்றார்கள்.
காலை பத்தரை மணி இருக்கும். மிகக் கடுமையான வெய்யில். சைக்கிளை மிதிக்கிறேன், மிதிக்கிறேன், மிதித்துக் கொண்டே இருக்கிறேன். வானில் ஹெலிகாப்டர் செல்லும் சப்தம். சைக்கிளை மிதிக்கும் வேகம் அதிகரிக்கிறது.
கிட்டத்தட்ட ஏழெட்டு கிலோ மீட்டர் சென்ற பின்பு கூட்டம் நடக்கும் இடம் வந்தது. அந்த ஹெலிகாப்டரில் வந்தது ராஜீவ் காந்தி இல்லை. அந்த பொட்டல் மைதானம் சென்றதும் சைக்கிளை நிறுத்தி விட்டு அப்படியே கட்டாந்தரையில் சுருண்டேன். படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. தொண்டை தாகத்தில் வரண்டது. ஆனாலும் எழுந்திருக்க முடியவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் சோர்வில் படுத்துக் கொண்டே இருந்தேன்.
அதன் பிறகு எழுந்து பார்த்தால் பக்கத்தில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்தது. கைகளில் தண்ணீரை பிடித்து குடித்தேன். கொஞ்சம் தெம்பு வந்தது. நீண்ட நேரம் காக்க வைக்காமல் ராஜீவ் காந்தியும் வந்து விட்டார். அவருடைய பேச்சு அவ்வளவு சுகமில்லை. தமிழாக்கம் செய்த ப.சிதம்பரம் தன் சொந்த சரக்கையும் சேர்த்து சமாளித்தார் என்பது வேறு கதை.
மீண்டும் அதே வெய்யிலில் சைக்கிளை மிதித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். அப்படியே ஒரு பெஞ்சில் படுத்தேன். மதியம் சாப்பிடக் கூட எழுந்திருக்கவில்லை. மாலையில் உடல் கேஸ் அடுப்பு போல கொதித்தது. மந்தாரக்குப்பத்தில் உள்ள மருத்துவரிடம் இரண்டு மூன்று நாள் சென்றும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் அவர் என்.எல்.சி பொது மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டார்.
அங்கே டைபாய்டு என்று கண்டறிந்து உள் நோயாளியாக சேர்ந்து ஒரு வாரம் இருந்தேன். கடைசி செமஸ்டரில் இப்படியாகி விட்டதே என்று என் அப்பா திட்டினாரே தவிர, எதற்காக ராஜீவ் காந்தி கூட்டத்திற்கு போனாய் என்று அவர் திட்டவேயில்லை. இந்திரா காந்தி, எம்,ஜி.ஆர், கலைஞர், மொரார்ஜி தேசாய், சோ ஆகியோருடைய கூட்டங்களுக்கு 1977 ல் அழைத்துச் சென்றவரே அவர்தானே. அரசியலை பின்பற்றத் தொடங்கியது அந்த காலகட்டத்திலிருந்தேதான்.
அதனால்தான் , அந்த நாற்பத்தி எட்டு வருட அனுபவத்திலிருந்து சொல்ல முடிகிறது. த.வெ,க போன்ற பொறுப்பற்ற கட்சி எதுவுமில்லை.
Monday, October 20, 2025
தீவிளிக்கு தீவிளிக்கு ஒரே படம்தானா மோடி ????
எட்டு மணியாச்சுன்னா எப்படி வெள்ளைச்சாமி, சின்ராசு, வெள்ளியங்கிரி ஆகியோர் பாட ஆரம்பித்து விடுவார்களோ, அது போல தீபாவளி வந்து விட்டால் மோடி போட்டோஷூட்டுக்கு பாதுகாப்புப் படை வீரர்களை பார்க்க போய் விடுவார்.
வழக்கமான காஸ்ட்யூமை விட பாதுகாப்புப் படை அதிகாரியின் காஸ்ட்யூம் கொஞ்சம் கெத்தாக இருப்பதால் தன் நடவடிக்கையோ, ஆட்சித்தரமோ, நாணயமோ கெத்தாக இல்லையென்றாலும் போடும் வேஷமாவது கெத்தாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கறாராக இருக்கிறார்.
நேற்றும் கூட ஒரு போர்க்கப்பலுக்கு போய் வேடிக்கை பார்த்துள்ளார்.
வருஷா வருஷம் ஒரே படம்னா போரடிக்குது மோடி. நீங்க ஏன் ஒரு தடவை விமானத்துல போய் பாராசூட்டுல குதிக்கக்கூடாது. போட்டா எல்லாம் செம ட்ரெண்டியா இருக்கும்ல !!!
பிகு: இரண்டு போட்டோ அவர் பக்கத்திலிருந்து எடுத்து சேமித்தேன். இவரோட அற்ப ஆசைக்கு நாம வேற விளம்பரம் கொடுக்கனுமா என்று இங்கே பகிரவில்லை.
முன்னுதாரணமாய் விராத் கோலி . . .
பாகிஸ்தான் வீரரின் ஷூ லேஸை விராத் கோலி கட்டி விடுகிறார். பார்க்க எவ்வளவு நெகிழ்ச்சியாக இருக்கிறது.
Sunday, October 19, 2025
அசிங்கமா போச்சா ஆட்டுக்காரா ????
கீழேயுள்ள காணொளியைப் பார்த்து ரசித்து சிரியுங்கள்.
கோவையில் ஏதோ கல்லூரியில் வானதி அம்மையார் பேசியுள்ளார்.
ஏன் சிரிக்கறீங்க என்று அவர்கள் கேட்காவிட்டால் ஆட்டுக்காரன் பெயரைச் சொல்லும் போது சிரிப்பொலி எழுந்ததே தெரிந்திருக்காது. அப்படி கேட்டதன் மூலம் ஆட்டுக்காரனை அழகாக அசிங்கப்படுத்தியது அம்மையார்தான்.
அடுத்து இன்னொன்று . . .
மாணவர்கள், ஸ்டாலின், கலைஞர், அம்பேத்கர், திருமாவளவன், ராகுல் காந்தி, இந்திரா காந்தி, தந்தை பெரியார் என்று சொன்னார்களே தவிர மோடி பெயரை சொல்லவில்லை.
ஆட்டுக்காரன் பெயரைக் கூட சொன்னார்களே தவிர மோடியின் பெயரையே, ஏன் இவர்கள் பெயரையோ கூட சொல்லவில்லை.
அப்படியென்றால் உண்மையில் அசிங்கப்பட்டது ஆட்டுக்காரன் மட்டுமல்ல, மோடியும் வானதி அம்மையாரும் கூடத்தான்.
Saturday, October 18, 2025
அமித் நிதீஷ் குரங்குக்குளியல்கள்
சிவசேனா கட்சியை உடைத்து பாஜக காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டேவிடமிருந்து அடுத்த தேர்தலுக்குப் பின்பு முதல்வர் பதவியை பறித்து துணை முதல்வராக பதவி இறக்கம் செய்தது பாஜக.
மகா கூட்டணி அரசை கவிழ்த்து பாஜக வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார் நிதீஷ் குமார். பீகார் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் "முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்வோம்" என்று அமித்ஷா நேற்று சொன்னதன் அர்த்தம் என்ன?
நிதீஷ்குமார் முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல முதல்வரும் கூட கிடையாது என்பதுதான் அதன் அர்த்தம்.
தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் நான் திருட்டுத்தனமும் அயோக்கியத்தனமும் செய்வேன், நீ நோகாமல் முதல்வராவதா என்பதுதான் அமித்தின் எண்ணம்.
யார் முதல்வர் என்று சொல்லாமல் 1980 ல் திமுகவும் காங்கிரஸும் சரிசமமாக சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒருவர் காலை இன்னொருவர் இழுக்க மொத்தத்தில் தோற்றுப் போனதுதான் நினைவுக்கு வருகிறது.
நிதீஷை முதல்வரிலிருந்து தூக்கினால் மோடி தூக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இது நடக்காமல் இருக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது.
பாஜக-நிதீஷ் கூட்டணி பீகாரில் தோற்றுப் போக வேண்டும். அப்போது யார் முதல்வர் என்ற பிரச்சினை வராதல்லவா!
ஆகவே மோடியே பீகாரில் குறைவாக பொய் சொல்லவும்,,,,
Friday, October 17, 2025
சங்கிக் கழுதைகளுக்கு கம்யூனிஸ்ட் வாசம் தெரியாது
மயிலை ரமா எனும் ஜாதி வெறி பிடித்த ஆணவமிக்க, பாஜக மகளிர் அணிப் பொறுப்பாளர் ஒருவரின் மோசமான பதிவொன்றை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் அவர் பக்கத்தைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது அவரின் ஒரு பழைய, மிகக் கேவலமான, அசிங்கமான பதிவு ஒன்றை பார்த்தேன்.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியிருந்ததை அந்தம்மா நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு அவருடைய கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். நானும் சூடாகவே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.
வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயகர் சங்கமும் நடத்திய மகத்தான போராட்டத்தின் தளபதி அவர்.
பழங்குடி மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களும் அதிலே அவர் காண்பித்த உறுதியும்தான் அவரை மாநிலச் செயலாளராக உயர்த்தியுள்ளது.
அப்படிப்பட்ட தோழர் சண்முகத்தைப் பற்றி பேச அல்ல நினைக்கக் கூட இந்த பெண்மணிக்கு அருகதை கிடையாது.
மகளி அணிப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் அவரின் பதிவுகள் எல்லாமே ஜாதி வெறி எனும் நச்சில் தோய்த்தெடுக்கப்பட்டவைதான்.
தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் திரைக் கலைஞருமான திருமதி பாத்திமா பாபு இவரை ஒருமுறை கழுவி கழுவி ஊற்றினார்.
இவர் மட்டுமல்ல பாஜகவில் உள்ள எல்லோருமே ஜாதிய மேட்டிமை புத்தியுடன் செயல்படுபவர்கள்தான்.
இவர்களுக்கு கம்யூனிஸ்டுகளின் போராட்டமோ, தியாகமோ, மக்கள் மீது கொண்டுள்ள நேசமோ தெரியாது, புரியாது.
அப்படி புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!
Thursday, October 16, 2025
வேஷம் போட்ட "ரஸ்தோகி" கைது
நேற்று ஆங்கில இந்து இதழில் வெளியான செய்தி இது.
பீகாரைச் சேர்ந்த "ஹேமந்த் ரஸ்தோகி" என்ற நபர், டி.டி.இ போல வேஷம் போட்டு அஸ்ஸாமைச் சேர்ந்த அலி என்ற நபரிடம் டிக்கெட் வாங்கித் தருவதாகச் சொல்லி 7500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
பணம் கொடுத்து விட்டு அலி டிக்கெட்டுக்காக காத்த்த்த்த்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். ரஸ்தோகியும் வரவில்லை, டிக்கெட்டும் வரவில்லை.
ஏமாந்து விட்டோம் என்று தெரிந்து போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் அந்த மோசடிப் பேர்வழியை கண்டு பிடித்து பணத்தை மீட்டுக் கொடுத்து விட்டார்கள்.
இந்த சம்பவம் நடந்தது காட்பாடி ரயில் நிலையத்தில். . . .
பீகாரைச் சேர்ந்த ஒருவன் அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டில் வைத்து ஏமாற்றியுள்ளான்.
பிகு: தலைப்பில் பெயரைப் பார்த்து வேறு யாரோ என்றுதானே நினைத்தீர்கள் 😛😛😛😛😛
தீபாவளிக்கு முன்னோட்டமாக "அவல் லட்டு"
சமையல் பதிவு போட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேலாகி விட்டதால் இந்த பதிவு, நேற்று செய்தது.
பணி ஓய்வில் வீட்டில் இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது. திட்டமிட்டதை செய்து விட்டு எந்த சுவடும் தெரியாமல் சமையலறையை சுத்தம் செய்து வைப்பதற்கான நேரம் இருக்கிறது.
இந்த பதிவு இன்னொரு செய்தியும் சொல்கிறது. ஒரு இனிப்பு செய்யும் அளவிற்கு உடல் நிலை தேறியுள்ளது. இரு சக்கர வாகனத்தை ஓட்ட மருத்துவர் அனுமதி கொடுத்தால் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் செல்லும் போது என்ன சொல்கிறார் என்று.
சரி,
இப்போது சமையலறைக்கு செல்வோம்.
முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.
அதே வாணலியில் வெள்ளை (லேசான) அவலை நன்றாக வறுத்துக் கொண்டேன்.
பிறகு துறுவிய தேங்காயையும் வறுத்துக் கொண்டேன்.
வறுத்த அவலை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன்.
கொஞ்சம் வெல்லத்தை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன். அதிலெயே வறுத்த தேங்காயையும் போட்டு சுற்றி அதனை பொடித்து வைத்த அவலோடு கலந்து கொண்டேன். சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடான நெய் நாலு ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் கலந்து கைகளில் பிடித்து எடுத்தால் அவல் லட்டு தயார்.
சுவை எப்படி?
என்னுடைய சிக்னேச்சர் டிஷ்ஷான "அவல் புட்டு" எப்படி இருக்குமோ அதே சூப்பர் சுவை.
அவல் புட்டு செய்வது எப்படி?
கீழேயுள்ள இணைப்பில் பாருங்கள்.
அதுதான் என்னுடைய முதல் சமையல் பதிவும் கூட . . .
அவல் புட்டு சுவையாய் செய்வது எப்படி? ஒரு ஆணின் சமையல் குறிப்பு
Wednesday, October 15, 2025
அசிங்கப்பட்டது இந்திய கிரிக்கெட்தான்
அசிங்கத்துக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது இந்தியாவின் துரதிர்ஷ்டமான நரேந்திர மோடிதான்.
ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தானை வென்றது. அந்த வெற்றியை ட்ரம்ப் நிறுத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கிற ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு தான் ஒரு பொறுப்பற்ற போர் வெறியன் என்பதை நிரூபித்துக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணியின் தலைவராக இருந்த சூரியகுமார் யாதவ் மறுத்து விட்டார்.
பாகிஸ்தானியர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று சொல்லியுள்ளார்கள், பாஜக சங்கி கவுதம் கம்பீர் பயிற்சியாளராக உள்ள வீரர்கள் இப்படிப்பட்ட நிலை எடுத்ததை தேச பக்தி என்று கூட முட்டாள்தனமாக வர்ணிக்கிறார்கள் மூடச்சங்கிகள்.
பாகிஸ்தானியரிடமிருந்து கோப்பையை பெறுவது தேச பக்தி என்றால் பாகிஸ்தானோடு விளையாடுவதை தேசத்துரோகம் என்றுதான் அழைக்க வேண்டும்.
இவ்வளவு தேசப்பற்று உள்ளதாக காண்பித்துக் கொள்ளும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே!
பாகிஸ்தானுடன் விளையாடினால் நெறய டிக்கெட் விற்கும், நெறய ஸ்பான்ஸர் கிடைக்கும், டிவி களுக்கும் நெறய விளம்பரம் கிடைக்கும். பாகிஸ்தானுடன் விளையாடினால் கோடி கோடியாய் துட்டு கிடைக்கும். கொலை செய்வதற்காக பெறப்பட்ட கூலிப் பணத்தில் ரத்தக்கறை இருக்காதல்லவா! அது போல துட்டுக்கு முன்பு தேசப்பற்று எல்லாம் ஜூம்லா.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று நிலை எடுத்து இந்திய கிரிக்கெட்டை அசிங்கப்படுத்தி உள்ளார்கள் இந்திய அணி வீரர்களும் அவர்களின் பின் புலத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியமும்.
நியாயப்படி பார்த்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
ஆனால்
அது நடக்காது.
அமித்ஷா மகன் ஜெய்ஷா சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கையில் அது சாத்தியமற்றது.
எதுவாக இருப்பினும்
நடந்த சம்பவம் இந்தியாவிற்கு இழிவுதான்.
பிகு 1 : எழுதி பல நாளாகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள் இந்த பிரச்சினையை பின்னுக்கு தள்ளி விட்டது.
பிகு 2 : இன்னும் இரண்டு கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது.
போதைப் பொருள் கடத்திய ஆறு நாள் முதல்வர்
ரவி நாயக் எனும் கோவா மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் ரவி நாயக் இறந்து போனார் என்பதை ட்விட்டரில் மோடி எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்.
பல கட்சிகளுக்கு தாவிய பெருமை கொண்ட ரவி நாயக் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார்.
கோவாவிற்லு மாநில அந்தஸ்து கிடைத்த பின்பு 1989 ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குள் ஏழு முறை முதலமைச்சர்கள் மாறியுள்ளனர். இரண்டு பேர் இரண்டு முறை முதலமைச்சராகியுள்ளனர்.
கடத்தலை குடும்பத் தொழிலாகக் கொண்ட ரவி நாயக் முதல் முறை முதல்வரான போது இரண்டு வருடங்கள் முதலமைச்சராக இருந்துள்ளார். இவரைக் கவிழ்த்து விட்டு வில்ஃப்ரெட் டிசோஸா என்பவர் 319 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.
வில்ஃப்ரெட் டிசோஸா வை கவிழ்த்து விட்டு மீண்டும் ரவி நாயக்கே முதலமைச்சராகிறார்.
முதலமைச்சரானாலும் குடும்பத் தொழிலை கைவிடக் கூடாது என்று போதைப் பொருட்களை கடத்த வேலு நாயக்கர் போல அவரே கடலுக்குள் செல்கிறார். கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் போலீஸ் அவரை கைது செய்கிறது.
அதனால் ஆறே நாட்களில் அவரது முதலமைச்சர் பதவி பறி போகிறது.
அதனால் எல்லாம் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகவில்லை.
பதவி பெறுவதற்காக பல கட்சிகளை பார்த்து விட்டு இறுதியாக பாஜக சென்று வாஷ்ங் மெஷின் துணையோடு உத்தமராகி விட்டார்.
ரவி நாயக்கும் அவரது மகள் ராய் நாயக்கும் போதைப் பொருட்கள் கடத்துவதாக குற்றம் சுமத்தி அவரை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கூச்சல் போட்ட பாஜகவே ரவி நாயக் பல எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு கூண்டோடு பாஜக தாவிய பின்பு அமைச்சராக்கியது.
மோடி உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தது இந்த மனிதனுக்குத்தான்.
அதானால்தான் கவுண்டர் மகான் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா" என்று சொல்லியுள்ளார்.
Tuesday, October 14, 2025
தூக்கிலிருந்து விடுதலை - யார் குற்றம்????
உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளித்தது. கரூர் வழக்கைச் சொல்லவில்லை. இது வேறு வழக்கு.
ஹாசினி என்ற ஒரு சிறுமியை பாலியன் வன் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்பவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
அந்த சம்பவம் நிகழ்ந்த காலகட்டம் நினைவில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களை அதிரச் செய்த சம்பவம் அது. சி.சி டி வி காட்சிகள் மூலமாக அதே அடுக்கு மாளிகைக்குடியிருப்பில் இருந்த தஷ்வந்த்தான் குற்றவாளி என தெரிந்து கைது செய்யப்பட்டு விட்டான்.
பிணையில் வெளிவந்தவன் தன்னுடைய அம்மாவை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான். பின் அவனை மும்பையில் கைது செய்தார்கள்.
மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து தூக்கு தண்டனை கொடுத்தது. உயர் நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியது.
இப்போது அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.
போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.
தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத்துக்கு ஆதாரங்கள் போதாது என்றால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது? உயர் நீதிமன்றம் உறுதி செய்தது?
மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டதா?
அப்படி அளிக்கப்படவில்லையென்றால் அது யார் குற்றம்?
ஒரு வேளை அந்த ஆதாரங்கள் சரியில்லை என்றால் அதை நம்பி தூக்கு தண்டனை கொடுத்த மாவட்ட நீதிமன்றமும் உறுதி செய்த உயர் நீதிமன்றமும் தவறிழைத்ததா? அது யார் குற்றம்?
அம்மாவை கொன்ற வழக்கில் அப்பா பிறழ் சாட்சியானதால் அந்த வழக்கிலிருந்து அவர் தப்பித்து விட்டார். அது போல பிறழ் சாட்சிகள் யாராவது இந்த வழக்கிலும் உண்டா?
தஷ்வந்த் குற்றவாளி இல்லையென்றால் ஹாசினிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் காரணம்? அந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளி யார்?
பிகு: எழுதி நாலு நாள் ஆன பதிவுதான். இன்னும் கொஞ்சம் பழைய பதிவுகள் கூட இருக்கிறது. அவையும் வரும். . .
Monday, October 13, 2025
நீதி வெல்லும் விஜய் ?????
கரூர் நெரிசல் மரண வழக்கை பாஜகவின் பங்காளியான சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த விசாரணையை குஜராத்தில் குடும்பத்தினர் கண் முன்னே கூட்டு பாலியல் வன் புணர்ச்சிக்கு உள்ளாகி குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரையும் கொலையாளிகளால் இழந்த பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகளை முன் கூட்டியே விடுதலை செய்த கருணையாளர் அஜய் ரஸ்தோகி மேற்பார்வை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட எரிச்சலூட்டியது எது தெரியுமா?
"நீதி வெல்லும்" என்று விஜய் சொன்னது.
41 பேர் மரணத்துக்கு காரணமானோம் என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் மணிப்பூருக்கு போகாத மோடி போல பனையூர் வீட்டில் பதுங்கி இருந்து கொண்டு இப்படி திமிரோடு பேசுவது மிகப் பெரிய எரிச்சலாக உள்ளது.
தம்பி விஜய், உன்னுடைய நிதியோ, அல்லது உன் பங்காளி பாஜகவோ இல்லாமல் நிஜமாகவே நீதி வென்றால் அது உனக்குத்தான் பிரச்சினை. உனக்குத்தான் அசிங்கம்.
இது கூட தெரியாமல் அறிக்கை விடும் நீ, உன் ரசிகர்கள் போலவே நீயும் தற்குறிதான்.
முழுசாவே சினிமாக்கு போயிடுங்க சு.கோ
நாடாளுமன்றத்துக்குப் போன சுரேஷ் கோபி மந்திரி பதவியை ராஜினாமா செய்யப் போகிறாராம். அதற்கான காரணம் என்ன சொல்லியுள்ளார்.
சினிமாவில் நடிக்காததால் வருமானம் நின்று விட்டதால் பணம் வேண்டும் என்பதற்காக மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் அதற்கு தடையாக உள்ளதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக சொல்லியுள்ளார்.
நல்லது.
நீங்கள் அமைச்சராக இருந்து எதுவும் கிழிக்கவில்லை. மோடியே எதுவும் கிழிக்காத போது உங்களால் மட்டும் என்ன கிழிக்க முடியும்!
என்ன சினிமாவில் நடிக்கப் போய் விட்டால் நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கும் போக முடியாது. அண்புமணிக்கு போட்டியாக உங்கள் வருகைப் பதிவும் இருக்கும்.
அதனால் எம்.பி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்.
திருச்சூருக்கு ஒரு நல்ல எம்.பி கிடைக்கலாம்,
Sunday, October 12, 2025
"அழிவு"க்கான நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் விருது இந்த ஆண்டு தனக்கே தரப்படும் என்று டொனால்ட் ட்ரம்பு வாயில் உமிழ்நீர் வழிய காத்துக் கொண்டிருந்தார். ட்ரம்ப் அளவு இல்லையென்றால் கூட மோடி கூட ஒரு சபலத்தில் காத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் விருது கானல் நீராக மாறியது.
போலந்து கம்யூனிச ஆட்சிக்கு எதிராக கலவரம் செய்த "லெக் வாலேசா"
சோவியத் யூனியனை சிதைத்த "மிகையில் கோர்ப்பசேவ்"
மக்கள் சீனத்துக்கு எதிராக திபெத்தியர்களை உசுப்பேற்றிய "தலாய் லாமா"
ஆகியோரின் வரிசையில்
ட்ரம்பின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த வெனிசுலா நாட்டு மரியா கொரினா மச்சோடாவுக்கு கிடைத்துள்ளது.
கொரினா என்பது என்னவோ கொரோனா போலவே தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்பது வேறு விஷயம்.
மரியாவுக்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது?
வெனிசுலாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க போராடி வருவதற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறாராம்.
அப்படியென்ன வெனிசுலாவில் ஜனநாயகம் பாழாகி விட்டது? இவர் போராடி அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க?
முதலாளித்துவ கட்டமைப்பு கொண்ட வெனிசுலாவில் சோஷலிஸ்ட் கட்சி 1998 ல் தோழர் ஹூயுகோ சாவேஸ் தலைமையில் ஆட்சி அமைக்கிறது. அதன் பின்பு வெனிசுலாவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது. அமெரிக்க நிறுவனங்கள் தேச உடமையாக்கப்படுகிறது. அதனால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் வருகிறது.
இது பொறுக்குமா முதலாளித்துவத்திற்கு?
ஒரு கியூபாவையே சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கா எப்படி இன்னொரு சோஷலிச நாட்டை ஏற்றுக் கொள்ளும்?
ஒரு கலகத்தைத் தூண்டி அதிபர் மாளிகையை கைப்பற்றியது. தோழர் சாவெஸை கைது செய்து ஒரு முதலாளியை ஜனாதிபதி என்றும் அறிவித்தார்கள்.
எல்லாம் இரண்டே நாட்கள்தான் . . .
மக்கள் வீதியில் இறங்கினார்கள். போராடினார்கள், கலகம் செய்தவர்கள் ஓடிப் போனார்கள். தோழர் சாவேஸ் மீண்டும் கம்பீரமாக ஆட்சிக்கு வந்தார். இறக்கும் வரையில் அவர்தான் ஜனாதிபதியாக இருந்தார். அவருக்கு அமெரிக்கா கொடுத்த நச்சுதான் அவரது நோய்க்குக் காரணம் என்ற சந்தேகம் இன்னும் மக்களிடம் உள்ளது.
தோழர் சாவேஸை தொடர்ந்து தோழர் நிக்கோலஸ் மதுரா ஆட்சிக்கு வந்தார். அவரது ஆட்சியை கவிழ்க்கவும் வெனிசுலா முதலாளிகள் அமெரிக்க ஆதரவோடு தொடர்ச்சியாக பல சதிகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். அந்த சதிக்கூட்டத்தின் தலைவிதான் மரியா கொரோனா மச்சோடா.
மக்கள் நல சோஷலிச அரசுக்கு எதிராக சதிச்செயல்களில் ஈடுபடுவதற்கு அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊக்கப்பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு, அதனை அழிவுக்கான நோபல் பரிசு என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தம்.
Saturday, October 11, 2025
அப்போ நீ ........ இல்லையா விஜய்?
அன்று விஜய் பேசிய வீர வஜனங்கள் இப்போது அவருக்கு எதிராகவே திரும்புவது மிகவும் சுவாரஸ்யம்.
இதோ இந்த காணொளியை பாருங்கள்.
41 பேர் இறந்தபின் ஓடிப்போன விஜய் தான் வீரன், அரசன், தலைவன் என எதுவும் இல்லை, வெறும் கோழை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் விஜய். . .
Friday, October 10, 2025
தலையில்லா விஷ்ணு சிலையும் ராஜராஜசோழன் சிலையும்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கவாய் மீது சனாதன வக்கீல் ராகேஷ் கிஷோர் காலணி வீசியதற்கு காரணம் கஜுராஹோ விஷ்ணு சிலை வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான்.
மத்தியப் பிரதேசத்தின் முக்கிய தொல்லியல் தளமான, பல நூற்றாண்டுகள் பழமையான கஜுராஹோவில் உள்ள ஒரு விஷ்ணுவின் சிலையில் தலை இல்லை. அந்த தலை யாரால் எப்போது துண்டிக்கப்பட்டது என்ற விபரங்கள் எல்லாம் இல்லை. பல நூறு ஆண்டுகளாக தலையில்லாமலே விஷ்ணு அருள் பாலித்து வருகின்றார்.
இந்த சிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுக்கிறார். தொல்லியல் விதிகள் படி அது சாத்தியமில்லை என்று தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் வழக்கை தள்ளுபடி செய்கிறார். "என்னுடைய கைகளில் ஏதுமில்லை. நீங்கள்தான் உண்மையான பக்தர் அல்லவா! அதனால் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளுங்களேன்" என்று குறிப்பிடுகிறார்.
இந்த தீர்ப்பின் மூலம் திரு கவாய், சனாதன தர்மத்தை இழிவு படுத்தி விட்டார் என்று சங்கிகள் கூச்சலிட்டனர். ஒரு வெறியன் அந்த வெறுப்பை தன் காலணி மூலம் காண்பித்து விட்டான். இந்த செயலுக்கு நீதிபதியின் சமூகப் பின்னணியும் ஒரு காரணம் என்பதை முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
இந்த பதிவின் நோக்கமே வேறு.
தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் எந்த ஒரு சிறு மாறுதலைக் கூட அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு உதாரணங்கள் இருக்கிறது என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.
எழுபதுகளில் கலைஞர் முதல்வராக இருக்கையில் தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு சிலை உருவாக்கி அதனை பெரிய கோவிலுக்குள் அமைக்க விரும்பினார். ஆனால் தொல்லியல் துறையோ பெரிய கோயிலுக்குள் புதிய கட்டுமானம் எதையும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டது. கோயிலைக் கட்டிய ராஜராஜனாவது மண்ணாவது என்று பிடிவாதமாக இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை தலையிடச் சொன்னார். ஆனால் ஒன்றும் கதைக்காகவில்லை.
கோயிலைக் கட்டும் தொழிலாளர்கள், கோயில் கட்டுமானப் பணி முடிந்து கும்பாபிஷேகமும் முடிந்த பின் எப்படி கருவரைக்கு வெளியே தள்ளப் படுவானோ (முந்தைய காலங்களில் கோயில் மதில்களுக்கு வெளியே) அது போன்றதொரு நிலைதான் ராஜராஜசோழன் சிலைக்கும் ஏற்பட்டது.
தொல்லியல்துறை விதிகள் காரணமாக பெரிய கோயில் மதில்களுக்கு வெளியே சிவகங்கைப் பூங்காவுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிறார் ராஜராஜசோழன்.
வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவரான ஜலகண்டேஸ்வரர் லிங்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோட்டைக்கு வெளியே சத்துவாச்சாரி பகுதியில் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கே வழிபாடு நடக்கவில்லை. "சாமி இல்லாத கோயில்" என்ற புகழ் வேலூருக்கு அதனால்தான் வந்தது.
அதே போல் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக சிறிய மசூதி ஒன்றும் இருந்தது. அங்கேயும் வழிபாட்டை பிரிட்டிஷ் ஆட்சி தடை செய்திருந்தது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என்று இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்பும் கேட்டும் கூட பிரிட்டிஷ் தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. விடுதலைக்குப் பின்பு இந்திய தொல்லியல்துறையும் அதே நிலையை எடுத்தது.
1981 ல் அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் கங்கப்பா ஒத்துழைப்போடு சிலர் ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை ரகசியமாக நிர்மாணித்தார்கள். அப்போது முதல் அங்கே வழிபாடு தொடங்கியது. பாபர் மசூதியை இடிப்பதற்கான பயிற்சியாக இந்த ரகசிய நடவடிக்கை அமைந்திருந்தது என்று கூட ஒரு கூட்டத்தில் கேட்ட நினைவு இருக்கிறது.
கோயில் போல மசூதியிலும் வழிபாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
2007 ஆ 2008 ஆ என்று நினைவில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரம்மாண்டமான தர்ணா போராட்டத்தை வேலூரில் நடத்தியது. மதுரை மக்களவை உறுப்பினராக இருந்த தோழர் பி.மோகன் அதிலே கலந்து கொண்டார். அவர் மக்களவையிலும் இந்த பிரச்சினையை எழுப்பினார். மதுரை எம்.பி க்கு வேலூரில் என்ன வேலை என்று அடுத்த வாரமே வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டம் போட்டு பேச சென்னையிலிருந்து ராம.கோபாலனை அழைத்திருந்தார்கள்.
மக்களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டாலும் தீர்வு வரவில்லை. தொல்லியல்துறை தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்து விட்டது.
தலையில்லா விஷ்ணு சிலை விஷயத்திலும் தொல்லியல் துறை மாறாது என்பது அதன் விதிகளில் உள்ளது. அதனால்தான் தீர்ப்பு அந்த அடிப்படையில் அமைந்தது.
மாற்றத்திற்கு வாய்ப்பில்லாத நெகிழ்வுத்தன்மை இல்லாதது தொல்லியல்துறை விதிகள். சனாதனமும் அதுதான்.
ஆகவே தீர்ப்புக்கு எதிராக இவர்கள் பொங்க வேண்டியது சனாதனத்திற்கு எதிராகத்தான். . .







































