Tuesday, February 19, 2019

வங்கிகளின் நஷ்டம் நிஜம்தானா?




அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஆற்றல் மிகு தலைவர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு

நேற்று 18.02.2019 அன்று ஒரு சிறப்புக்கருத்தரங்கை வேலூரில் ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) அமைப்பின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன்

“வங்கி இணைப்புக்கள் – பின்னே உள்ள சதிவலைகள்”

என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

வங்கிகள் நஷ்டம் என்று பொதுவாக ஊடகங்கள் சொல்வதைப் பற்றி அவர் விளக்கமாகவே பேசினார். அந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

“2014 முதல் 2019 வரையுள்ள காலகட்டத்தில் வங்கிகள் அனைத்து செலவினங்களும் போக ஈட்டிய லாபம் என்பது 5,90,000 கோடி ரூபாய். ஆனால் எண்பதாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

வாராக்கடன்களுக்காக  லாபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை என்பது 6,70,000 கோடி ரூபாய்.

ஆக வங்கிகள் லாபத்தை ஈட்டினாலும் வாராக்கடனை தள்ளுபடி செய்வதற்காக மத்தியரசின் நிர்ப்பந்தத்தால் ஒதுக்கீடு செய்யும் தொகை வங்கிகள் நஷ்டத்தில் இயங்க காரணமாகி விடுகிறது.

வாராக்கடனை வைத்துள்ளவர்கள் யார்?

ஐந்து கோடியும் அதற்கு மேலும் கடன் வாங்கியவர்களின் வாராக்கடன் மட்டும் 88 %.

வங்கிகளை பின்னுக்கு இழுப்பவர்கள் இப்படி அதிகமான தொகை கடனாக வாங்கியவர்கள்தான்.

கல்விக்கடன், விவசாயக்கடன் ஆகியவற்றில் கடன் வாங்கி வாராக்கடனாக மாற்றியுள்ளவர்கள் வெறும் 12 %.

நான் பணியாற்றுகிற டேனா வங்கியின் வாராக்கடன் விபரங்களை ஆய்வு செய்தோம்.

இங்கே வாராக்கடன் 16,000 கோடி ரூபாய்.

அதிலே இருநூறு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்கள் 13 பேர். அது 4,600 கோடி ரூபாய். ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வாங்கியவர்கள் 246 பேர். அந்த தொகை 9,500 கோடி ரூபாய்.  கிட்டத்தட்ட பதினான்காயிரம் கோடி ரூபாயை பாக்கி வைத்துள்ளது வெறும் 259 பேர். மீதமுள்ள வாராக்கடனான 1900 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளவர் எண்ணிக்கை 1,25,000.

வங்கிகளின் தலையில் பெரும் சுமையாக இருப்பது பெரு நிறுவனங்கள்தான்.

வாராக்கடனில் கிட்டத்தட்ட 25 % தொகையான 3,45,000 கோடி ரூபாயை வைத்திருப்பது பனிரெண்டு நிறுவனங்களே. இந்த பனிரெண்டு பெரிய நிறுவனங்களிடமிருந்து முறையாக வசூலித்தாலே வங்கிகளின் நஷ்டத்தை மாற்றிட முடியும்.

ஆனால் மத்தியரசு என்ன செய்கிறது?

வாராக்கடனை வசூலிக்க முயற்சிகள் எடுக்கிறதா?

அடுத்த பதிவில் பார்ப்போம் . . .


No comments:

Post a Comment