Thursday, February 14, 2019

அம்பானிக்காக அழிக்க வேண்டாம் மோடி . . .



ஒரு பத்து நாளுக்கு முன்பாக ஒரு நாள் காலையில் வேலூர் மாநகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அமைப்பாளரும் பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் சி.ஞானசேகரன் தொலைபேசியில் அழைத்து பி.எஸ்.என்.எல் ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள், அந்த போராட்டத்தை வாழ்த்த வாருங்கள் என்று சொன்னார்.

என்ன கோரிக்கைக்காக போராட்டம் என்று கேட்ட போது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

மூன்று மாதமாக ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. அதனால் அவர்கள் குடும்பத்தோடு தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள் என்று சொன்னார் அவர்.

ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் இப்படிப்பட்ட நிலையா என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

நிறுவனம் செலுத்த வேண்டிய தொகைகளைக் கட்டுவதற்காக ஊழியர்கள் வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்த செய்தியை படித்தது நினைவுக்கு வந்தது.

வேலூர் மாவட்டத்திலேயே கூட மின்சாரக் கட்டணம் கட்ட முடியாமல் மின் இணைப்பை துண்டிக்கும் அளவிற்கு மோசமான நிலைமை உருவானது என்பதை தர்ணாவின் போது அறிந்து கொண்டேன்.

ஏன் இப்படிப்பட்ட நெருக்கடி பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு?
இதிலிருந்து  அவர்கள் வெளியே வர வாய்ப்பே கிடையாதா?

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூடி விடலாமா என்று ஆலோசிக்கிறதாம் மோடி அரசு.

பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தை  துவக்க காலம் முதற்கொண்டே சீரழிப்பது மத்தியரசுகளே.

தனியார் நிறுவனங்கள் எல்லாம் கடை விரித்து கால் ஊன்றி கொள்ளை அடிக்கத் தொடங்கி வளமாய் கொழிக்கும் நாள் வரை அலைபேசி சேவைக்கு அனுமதி தரவில்லை.

விரிவாக்கத்திற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டார்கள்.

தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்த மறுத்து முரண்டு பிடித்த போது தலையிடாமல் வேடிக்கை பார்த்து மத்தியரசு.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் இப்போதும் நஷ்டங்களை குறைத்து தலை நிமிர முடியும்.

அதற்கு ஊழியர்கள் அரசிடம் கேட்பதை கொடுக்க முடியாத அளவிற்கு அவை ஒன்றும் வானத்து நட்சத்திரங்கள் இல்லை.

4 ஜி அலைக்கறை ஒதுக்கிட வேண்டும்.

பி.எஸ்.என்.எல் வசம் உள்ள நிலங்களை  பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை வேண்டும்.

நிதி நிலைமையை சரி செய்ய வங்கிகளிடம் கடன் வாங்க அனுமதி வழங்க வேண்டும்.

அதானி ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் வாங்க ஸ்டேட் வங்கியை கடன் கொடுக்கச் சொல்ல தரகராய் தலையிட்ட மோடி, அரசு நிறுவனம் கடன் பெற முடியாமல் தவிக்க வைக்கிறார்.

4 ஜி அலைக்கற்றை சேவையும் அளிக்காமல் (தொலை தொடர்பு அமைச்சர் அளித்த உறுதிமொழிக்கு மாறாக)  தடையாய் நிற்கிறார்.

மோடியின் முதலாளி அம்பானியின் ஜியோ மேலும் மேலும் லாபத்தில் கொழிக்க வேண்டுமென்றால் பி.எஸ்.என்.எல் முடமாக வேண்டும். அதனால்தான் அதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இழுத்து மூட முயற்சிக்கிறார்.

அம்பானிக்காக  பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அழிக்க வேண்டாம் மோடி.

2 comments:

  1. அரசு நிறுவனத்தில் வேலை பார்த்த ஜி.எம். தான் (பிஎஸ்.என்.எல்) கலாநிதி மாறன் கம்பெனிக்கு அரசு லைன்களைத் தாரை வார்த்தார். இப்படிப்பட்ட ஊழல் அதிகாரிகள் இருக்கும்போது, சேவைக் குறைபாட்டை ஒரு கலையாகவே செய்யும்போது, பி.எஸ்.என்.எல் போவதைப் பற்றி யார் கவலைப்படுவார்கள்?

    நீங்கள் அந்த நிறுவனத்தில் உள்ள ஊழியர்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். சரிதான். ஆனால் சேவைக் குறைபாடு இருக்கும் நிறுவனத்தில் ஊழியர்களுக்குப் பொறுப்பு இல்லையா?

    ReplyDelete
  2. மோடி செய்வது சரியல்ல ..
    ஆனாலும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் செய்யும் பொறுப்பற்ற செயல்களுக்கு அளவே இல்லை.
    என்னுடைய பிராட்பேண்ட் வேலை செய்யாமல் பல முறை ஆர் கே நகர் அலுவலகத்துக்கு சென்று
    பல ஊழியர்களை பார்த்து சொல்லியும் 10 நாட்களாக ஒரு முன்னேற்றமும் இல்லை.
    உங்கள் வீட்டில் படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்க இவ்வாறு நடந்தால் ஏற்பீர்களா.
    எப்போது சென்றாலும் கேன்டீனில் உள்ளதாக சொல்வார்கள். வெளியே போட்டிகள் நிறைந்து உள்ள நிலையில் இப்படி பொறுப்பற்று நடந்தால் எப்படி.

    ReplyDelete