Thursday, February 21, 2019

தாய்மொழி தினம் – வாழ்த்துக்களைத் தாண்டியும் . . .




யுனெஸ்கோவின் அறிவிப்பின் படி இன்று தாய்மொழி தினம்.

அனைவருக்கும் தாய்மொழி தின வாழ்த்துக்கள்.

என்னைப் போலவே தமிழ்மொழியை தாய்மொழியாய்க் கொண்டவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

வருடத்தில் ஒரு நாள் அனுசரிப்பதோ இல்லை வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதோ மட்டும் போதுமானதில்லை.

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணேன்”

என்ற பாரதி பாடலின் பெருமிதத்தோடும் நின்று போய் விட முடியாது.

தமிழை தாய்மொழியாகக் கொண்டாலும் தமிழ் படிக்க, எழுதத் தெரியாததை பெருமையாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் பள்ளிகளும் இந்த மாநிலத்தில் இருக்கிறது.

பனிரெண்டாம் வகுப்பு வரை ஒரு மொழிப்பாடமாகக் கூட தமிழை பயிலாமலேயே இருப்பதற்கான வாய்ப்பும் இங்கேதான் இருக்கிறது.

தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் இருப்பினும் இன்னும் நீதிமன்றத்தில் தமிழ் அதிகாரபூர்வமான அலுவல் மொழியாக மாறவில்லை.

தமிழ்வழிக் கல்வியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புக்களில் முன்னுரிமை என்பது இன்னும் கோரிக்கையாகவே உள்ளது.

திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைப்பதற்குக் கூட ஊக்கத் தொகை அறிவிக்க வேண்டியுள்ளது.

ஆனால் அதே நேரம் சத்தமில்லாமல் ஹிந்தி திணிப்பு என்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நெடுஞ்சாலை மைல் கற்களில் கூட தமிழை அகற்றி ஹிந்தியை திணிக்க நடந்த முயற்சிகளை மறந்து விட முடியுமா என்ன?

பல மத்தியரசு நிறுவனங்களில் ஹிந்தியை படிவங்களில், இணைய தளங்களில், மின்னஞ்சல்களில், ஆணைகளில், சுற்றறிக்கைகளில் என்று எத்தனையோ வடிவங்களில் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஹிந்தியின் பயன்பாடே இல்லாத இடங்களிலும் கூட இது நடைபெறுகிறது. அதற்காக தாராளமாக நிதியும் ஒதுக்கிறார்கள். திணிப்பு முறையாக நடைபெறுகிறதா என்று கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் கூட இருக்கிறது.

எங்கள் நிறுவனத்தில் இது போன்ற முயற்சிகளை எங்கள் சங்கம் கண்டித்திருக்கிறது. வருகைப்பதிவில் வாரம் ஒரு நாள் ஹிந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று சொல்லப்பட்ட போது அதை எதிர்த்து அந்த உத்தரவை திரும்பப் பெற வைத்தோம். அந்த உத்தரவுக்குப் பிறகு  வருகைப் பதிவேட்டில் நான் தமிழில் கையெழுத்திடத் தொடங்கினேன் என்பது வேறு விஷயம்.  

சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படுகிற தருணங்களில் ஒரு வணிக நிறுவனத்திற்கு இந்த பொறுப்புணர்வெல்லாம் அவசியமில்லை என்று சொல்பவர்களுக்குக் கூட ஹிந்தித் திணிப்பை தலை மேல் சுமப்பதும் ஒரு வணிக நிறுவனத்திற்கு அவசியமில்லை என்று சொல்லாமல் மௌனம் சாதிப்பதும் ஒரு வினோதம்.

தாய்மொழி தவிர வேற்று மொழிகளை பயில்வதில் தவறில்லை. அது அவரவர்களின் சுய விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர மற்றவர்கள் திணிப்பதாக இருக்கக் கூடாது. அப்படி திணிக்கிற வேலையை அரசுகள் ஒரு போதும் செய்யக் கூடாது.

தாய்மொழி தினத்தை கொண்டாடும் வேளையில் தமிழகத்தின் மீது நிகழ்த்தப்படும் ஹிந்தித் திணிப்பையும் எதிர்ப்பதுதான் சரியாக இருக்கும்.


1 comment:

  1. Yes.we should fight and save and place our Tamil language in heights.sorry for the english comments.you may publish or may not.just to share my views.

    ReplyDelete