Tuesday, November 20, 2018

நட்புக்கும் அவர்கள்தான் . . .





பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடும் "காப்பீட்டு ஊழியர்'  மாத இதழின் நவம்பர் 2018 இதழில் பிரசுரமான எனது கட்டுரை


பொதுவுடமைக்கு மட்டும் இலக்கணம் படைத்தவர்கள் அல்ல . . .

அது ஒரு வறுமையான காலம். செல்லும் இடங்களிலெல்லாம் புரட்சியின் விதைகளை தூவிச்செல்கிறார் என்பதால் பல நாடுகளில் ஆட்சியாளர்கள் மார்க்ஸை தங்களுடைய எல்லைக்கு அப்பால் துரத்திக் கொண்டிருந்த நேரம். 1844 ல்  பாரீஸில் தங்கியிருந்த மார்க்ஸை முதல் முறையாக ஏங்கல்ஸ் சந்திக்கிறார். ஒரு செல்வந்தர் குடும்பத்தின் வாரிசாக இருந்தும் அந்த படோடபங்கள் மீது நாட்டமற்று பாட்டாளிகள் படும் துயரத்தின் மீது கவலை கொண்ட மனிதரான ஏங்கல்ஸ் பிறந்ததும் கூட மார்க்ஸ் பிறந்த அதே ரைன்லாந்து மாநிலத்தில்தான்.

முதல் சந்திப்பு

“தத்துவத்தின் வறுமை’ என்ற நூலை அப்போதுதான் மார்க்ஸ் எழுதியிருந்தார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் குடும்ப வணிகத்தை பார்த்துக் கொண்டிருந்த ஏங்கல்ஸ் தொழிலாளர்கள்தான் துயரப்படும் வர்க்கம் என்பதை முதன் முதலில் சொன்ன “இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர்கள் நிலை” என்ற நூலை எழுதி இருந்தார். இருவரின் சந்திப்பு உலக பாட்டாளி வர்க்கத்தின் வாழ்நிலையை புரட்டிப் போடக்கூடிய தத்துவங்களை உருவாக்கப் போகிறவர்களின் சந்திப்பு என்பதை அவர்கள் கூட அப்போது உணர்ந்திருக்கவில்லை.

முதல் நூல்

முதல் சந்திப்புக்குப் பிறகு தொடர்ச்சியாக தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருந்த மார்க்ஸூம் ஏங்கெல்ஸும் இணைந்து 1945 ல் உருவாக்கிய முதல் நூல் “புனிதக் குடும்பம்” பாட்டாளி வர்க்கத்தை கருத்துமுதல் வாதக் கண்ணோட்டத்தில் கடுமையாக விமர்சித்து வந்த ஹெகலியவாதிகளுக்கு அவர்கள் அளித்த பதிலே இந்த நூல். “ஆபத்தான விமர்சனத்தைக் குறித்த விமர்சனம்’ (Critique of Critical Critique.)  என்று முதலில் பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த நூல் பாட்டாளி வர்க்கத்தை பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் விளக்கியது. முதலாளித்துவத்திற்கு சவக்குழி தோண்டும் வல்லமை பாட்டாளி வர்க்கத்திற்கே உள்ளது என்பதை முதன் முதலில் சொன்னதும் கூட இந்த நூலே.  

வெளியேற்றப்பட்டவரும் வெளியேறியவரும்

பிரெஷ்ய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மார்க்ஸ் பிரான்ஸை விட்டு வெளியேற்றப்படுகிறார். அவர் பாரீஸிலிருந்து பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸல்ஸ் நகருக்குச் செல்கிறார். அதே நேரம் ஏங்கெல்ஸும் தனது வீட்டிலிருந்து வெளியேறி ப்ரஸ்ஸல்ஸ் செல்கிறார். அந்த நகரின் நூலகங்கள் அவர்களின் அறிவுத் தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. இருவரும் இங்கிலாந்து செல்கிறார்கள். மான்செஸ்டர் நூலகங்களில் பொழுதைச் செலவழித்து பின் லண்டன் செல்கின்றனர்.


அமைப்பினை உருவாக்கும் பணி

தொழிலாளர் புரட்சியை உருவாக்க அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்து பல நாடுகளிலும் அமைப்புக்களை உருவாக்கும் பணியை இருவரும் செய்யத் தொடங்கினர். இங்கிலாந்தில் இருந்த அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் பணியை ஏங்கெல்ஸ் செய்தாரென்றால் பிரான்ஸிலும் ஜெர்மனியிலுமிருந்த அமைப்புக்களை ஒன்றினைக்கும் பணியை மார்க்ஸ் செய்தார்.

கம்யூனிஸ்ட் லீக் உருவாகிறது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட

இச்சூழலில்தான் 1847 ல் லண்டனில் செயல்பட்டு வந்த் நீதியாளர் சங்கம், மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் தங்கள் அமைப்பில் இணைய வேண்டுமென்றும் தங்கள் சங்கத்தின் புதிய வேலைத்திட்டத்தையும் கூட உருவாக்கித் தர வேண்டுமென்றும் கோருகிறது. அதனை ஏற்று அந்த சங்கத்தின் காங்கிரஸில் ஏங்கெல்ஸ் பங்கேற்கிறார். நிதிப் பிரச்சினை காரணமாக அப்போது மார்க்ஸால் அக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஏங்கெல்ஸ் கலந்து கொள்கிறார். அந்த கூட்டத்தில்தான் அமைப்பின் பெயர் “கம்யூனிஸ்ட் லீக்” என மாறுகிறது.

கம்யூனிஸ்ட் லீகின் வேலைத்திட்டமாகத்தான் 1848 ல்  மார்க்ஸும் ஏங்கெல்ஸும் தயாரித்ததுதான் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை”. இன்றளவும் உலகத்து உழைப்பாளி மக்களுக்கு வழிகாட்டி போராட்டத்திற்கு உற்சாகமளிப்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத் தவிர வேறெதுமில்லாத தொழிலாளர்கள்  அடுத்த எழுபது ஆண்டுகளிலேயே மண்ணுலக சொர்க்கமாக சோவியத் யூனியனைப் படைத்தார்கள்.

1848, 1849 ஆகிய ஆண்டுகளில் ஐரோப்பாவில் பல இடங்களில் நடைபெறும் புரட்சிகளை மார்க்ஸும் ஏங்கெல்ஸும் ஆதரிக்கிறார்கள், உற்சாகப்படுத்துகின்றார்கள், தொழிலாளர்கள் மத்தியில் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்வதற்காக “புதிய ரைன்லாந்து கெஜட்’ என்ற பத்திரிக்கையை மார்க்ஸ் துவக்குகிறார். ஏங்கெல்ஸ் அதிலே கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி பொருளாதார உதவிகளையும் செய்கிறார்.

நண்பனுக்காக

உலகத்தின் மக்களின் வறுமைக்கான காரணம்  என்னவென்று ஆராய்ந்து அதைப் போக்குவதற்கான அருமருந்தை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை 1850 ல் மார்க்ஸ் துவங்குகிறார். ஆம், அதுதான் “மூலதனம்” எழுதும் பணி. உலக மக்களின் வறுமை பற்றி கவலைப்பட்ட மார்க்ஸ் அப்போது மிக மோசமான வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தார் என்பது ஒரு முரண் நகை.

அப்போது ஏங்கெல்ஸிற்கும் சில பொருளாதார நெருக்கடிகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் மார்க்ஸின் ஆய்வு எந்த தடங்கலாலும் பாதிக்கப்படாமல் பொருளாதார உதவி செய்வதற்காகவே மான்செஸ்டரில் இருந்த குடும்ப வணிகத்தை கவனிக்கத் தொடங்கினார். “நாய் வர்த்தகம்” என்று அதனை வெறுப்போடு வர்ணித்தாலும் நண்பனின் மகத்தான பணிக்காக அதிலே இருபது வருடம் ஈடுப்பட்டார். அது மட்டுமா,

நியுயார்க் டெய்லி டிரிப்யூனல் பத்திரிக்கைக்கு மார்க்ஸின் பெயரில் கட்டுரைகளை எழுதியனுப்பி, அதற்கான தொகையையும் கிடைக்கச் செய்திருந்தார். 

ஏங்கெல்ஸ் மட்டும் இல்லாதிருந்தால் மார்க்ஸால் “மூலதனம்’ நூலை முடித்திருக்கவே முடியாது. வறுமையின் கொடுமையில் மூழ்கி இருந்திருப்பார் என்ற லெனின் கூற்றிலிருந்தே மார்க்ஸிற்கு எந்த அளவு பாதுகாப்பு அரணாக ஏங்கெல்ஸ் இருந்தார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

1864 ல் பல நாட்டு தொழிற்சங்கங்கங்கள், தொழிலாளர் கட்சிகள் ஆகியவற்றை இணைத்து “முதல் அகிலம்” என்று அழைக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கப்படுகிறது. அந்த அமைப்பின் பொறுப்பாளர்களாக, அதனை வழி நடத்துபவர்களாக மார்க்ஸும் ஏங்கெல்ஸும் செயல்பட்டனர்.

அஞ்சலி உரை

மூலதனம் நூல் எழுதும் பணி முடிவுற்றது. முதல் பாகம் அச்சுப்பிரதியாக வெளி வந்தது. இந்த நிலைமையில்தான் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்த மார்க்ஸ் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த படியே 1883 மார்ச் மாதம் 14 ம் நாள் சிந்திப்பதை நிரந்தரமாக நிறுத்தி இருந்தார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு லண்டன் ஹைகேட் மயானத்தில் மார்க்ஸை அடக்கம் செய்கிற போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரையானது மிகவும் முக்கியமானது, அவர்கள் நட்பின் ஆழத்தை எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது.

“இதோ இந்த மார்ச் 14 ம் தேதி மதியம் 3 மணிக்கு இவர் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்த போது இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே வராத தூக்கத்தில் நாற்காலியிலேயே உறங்கிப் போயிருந்தார்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்திற்கும் வரலாற்று விஞ்ஞானத்திற்கும் அளவிட முடியாத இழப்பை உருவாக்கியுள்ளது. இந்த மகத்தான மனிதருடைய பிரிவால் ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் விரைவிலெயே உணர்வோம்.

உயிரியல் இயற்கையில் வளர்ச்சி விதியினை டார்வின் கண்டுபிடித்தது போல மனித சமூக வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.  அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன்பு உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், வசிக்க வீடு ஆகிவற்றை மனிதன் பெற வேண்டும் என்ற எளிய உண்மையை மட்டும் இவர் உலகிற்கு சொல்லவில்லை. முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும் அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதுதான் மிகவும் முக்கியம். அவர் உபரி மதிப்பை கண்டுபிடித்தது அவரது வாழ்நாள் சாதனை.

மார்க்ஸ் ஒரு புரட்சிக்காரர். முதலாளித்துவ சமூகத்தை ஒழிப்பதற்கு, அது உருவாக்கியிருக்கிற நிறுவனங்களை ஒழிப்பதற்கு நவீன பாட்டாளி வர்க்கத்தின் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படி செய்த முதல் நபர் அவரே. போராட்டமே அவர் உயிர். அவரைப் போல  உணர்ச்சிகரமாக, வெற்றிகரமாக போராடுவதற்கு யாராலும் முடியாது. அவர் வேறு எதையாவது செய்யாதிருந்தால் கூட, சர்வதேச தொழிலாளர் சங்கத்தை நிறுவியது ஒன்று போதும், அவரது பெருமையைச் சொல்ல.

மார்க்ஸ் தன் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூரு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சாதிகார நாடுகளும் சரி, குடியாட்சி நாடுகளும் சரி அவரை தங்களது நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ, மார்க்ஸ் மீது அவதூறுகளை குவிப்பதில் போட்டியிட்டனர்.  இவற்றையெல்லாம் சாதாரண ஒட்டடை போல அவர் ஒதுக்கித் தள்ளினார்.

அவருக்கு பல எதிரிகள் இருந்திருக்கலாம். ஆனால் தனிப்பட்ட விரோதி என்று ஒருவர் கூட கிடையாது. சைபீரியாவின் சுரங்கங்கள் முதல் கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமான அவர் மறைந்த போது அவர்கள் கண்ணீர் சொரிந்தனர்.

மார்க்ஸின் பெயரும் எழுத்துக்களும் உலகில் எப்போதும் நிலைத்து நிற்கும்”

ஒரு ஒப்பீடு

1943 ல் காரல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதிய வெ.சாமிநாத சர்மா மார்க்ஸையும் ஏங்கெல்ஸையும் ஒப்பிடுகிறார். 

அவர் தனது நூலில்

“சுபாவத்தில் மார்க்ஸ் மகா முன் கோபி. ஏங்கெல்ஸ் வெகு நிதானஸ்தன். மார்க்ஸை நெருங்குகிற போது ஓர் அச்சம் உண்டாகும். ஏங்கெல்ஸை அணுகுகிற போது ஓர் அன்பு உண்டாகும். எதிர்க்கட்சியினரை மார்க்ஸ் போராடி வெல்வார், ஏங்கெல்ஸ் அன்பினால் அணைத்துக் கொண்டு விடுவார். மார்க்ஸ் பிறவித் தலைவன். ஏங்கெல்ஸ் பிறவித் தோழன்.

இருவரிடத்திலும் மனோ உறுதி, விடா முயற்சி இருந்தன. சலிக்காத உழைப்பாளிகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சமாளித்துக் கொள்வார்கள். ஏழைகளுக்கு இரங்கும் மனம் படைத்தவர்கள், எடுத்துக் கொண்ட செயலை முடிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். பொது நல விஷயத்தில் சொந்த மதிப்பை பாராட்டாதவர்கள். பிறருடைய குற்றங்குறைகளை கண்டிப்பதில் எப்படி தயவு தாட்சண்யம் இல்லாதவர்களோ அது போல தங்களுடைய குறைகளையும் எடுத்துச் சொல்வதற்கு தயங்காதவர்கள்.”

இந்த குணாம்சங்கள்தான் இருவரையும் இணைத்தது. மார்க்ஸ் மறைந்த பின்பு அவருடைய பணிகளை ஏங்கெல்ஸ் முன்னெடுத்துச் சென்றார். மூலதனம் நூலின் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் மார்க்ஸ் மறைந்த போது கையெழுத்துப் பிரதிகளாகவே இருந்தது. அதை வெளியிட்டவர் ஏங்கெல்ஸே. முதலாவது அகிலத்தின் பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து வந்தவர். தன் வாழ்வின் இறுதி நாள் வரை மார்க்ஸின் புகழை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் பொதுவுடமைக் கொள்கைக்கு மட்டும் இலக்கணம் படைக்கவில்லை. நட்புக்கும் தோழமைக்கும் கூட இலக்கணமாய் வாழ்ந்தவர்கள்.

-    வேலூர் சுரா

10 comments:

  1. Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவரை பாராட்டினால் சகித்துக் கொள்ள முடியாத உன் வக்கிர புத்தியை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறாய் அற்பனே

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
    5. சூப்பர் அனானிNovember 21, 2018 at 3:11 PM

      This comment has been removed by a blog administrator.

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. S.Raman, VelloreNovember 23, 2018 at 8:23 AM
      அனாமதேயமா ஒளிஞ்சு நிக்கற கோழையெல்லாம் துணிச்சல் பற்றி பேசக்கூடாது. நீ உன் ஒரிஜினல் அடையாளத்தோட வா. உன்னோட பொறுக்கிக் கூட்டணியில் யாரெல்லாம் இருக்காங்கன்னு சொல்றேன்

      Delete