Sunday, July 29, 2018

இயக்கத்திற்கு ஈர்த்த தலைவர் . . .

தீக்கதிர் நாளிதழின் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் இதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கல் எழுதும் "களப்பணியில் கம்யூனிஸ்டுகள்" தொடரில் எங்கள் முன்னோடித் தலைவர் தோழர் எஸ்.ராஜப்பா அவர்கள் பற்றி இன்று எழுதியுள்ளார். 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் நான் பார்த்த முதல் தலைவர் தோழர் ராஜப்பா. 

அவரது எண்பதாவது பிறந்த நாளை முன்னிட்டு இதே பக்கத்தில் மூன்றாண்டுகள் முன்பு எழுதியதை இங்கே மீள் பதிவு செய்துள்ளேன்.





16.04.1986, வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். அன்றுதான் எல்.ஐ.சி நிறுவனத்தில் பயிற்சி உதவியாளராக அடியெடுத்து வைக்கிறேன். மொத்தம் 125 பேர் அன்று பணியில் இணைகிறோம். சென்னை பாரி முனையில் உள்ள யுனைட்டெட் இந்தியா கட்டிடத்தில்தான் பதினைந்து நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. காலையில் நிர்வாகத்தின் அறிமுகக் கூட்டம். மாலை பயிற்சி வகுப்பு முடிந்ததும் சங்கத்தைப் பற்றிய ஒரு அறிமுகக் கூட்டம் உள்ளதாக மதியத்தில் ஒருவர் வந்து சொன்னார்.

மாலை ஐந்து மணிக்கு பயிற்சி வகுப்பு முடிகிறது. பத்து பதினைந்து பேர் வருகிறார்கள். அவர்களில் ஓரிருவர் நேர்முகத் தேர்வு நடக்கும் போது வாழ்த்து சொன்னவர்கள் என்பது நினைவில் இருந்தது. ஆனால் அவர்களின் பெயரெல்லாம் அப்போது தெரியாது. வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்த ஒருவர் பேச வருகிறார். அதற்குள்ளாக நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருவரிடம் கண்ணைக் காட்ட, அந்த நபர் அவசரம் அவசரமாக மைக்கை அங்கேயிருந்து அகற்றி எடுத்துப் போகிறார்.

வெள்ளை ஆடை அணிந்த அந்த மனிதர் பேசத் தொடங்குகிறார்.

“அந்த ஒலிபெருக்கியை அப்படியே வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று சொல்லியிருக்க முடியும். ஆனால் உங்கள் அத்தனை பேரையும் சென்றடையக் கூடிய சக்தி எங்கள் குரலுக்கு உண்டு” என்று பேசத் தொடங்குகிறார்.

அடுத்த நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் அவர் ஆற்றிய உரை இடியாய், பேரருவியாய், இனிய தென்றலாய், எல்லாமாமுமாக அமைந்திருந்தது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுருக்கமான வரலாறாக, இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்த வகுப்பாக அமைந்திருந்த அந்த உரை புதிய வாசலுக்கு என்னை அழைத்துச் சென்றது. தொழிற்சங்க இயக்கத்திற்குள் என்னையும் இணைத்துக் கொள்ள அடித்தளமாய் அமைந்திருந்தது.

அந்த வெள்ளை ஆடை மனிதர் அன்றைய தென் மண்டல இணைச்செயலாளர், பின்பு தென் மண்டலப் பொதுச்செயலாளராக, தலைவராக, அகில இந்திய துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ராஜப்பா.

எல்.ஐ.சி யிலிருந்து ஓய்வு பெற்று இருபதாண்டுகள் ஓடி விட்டாலும் அவரது தொழிற்சங்கப் பணி இன்னும் தொடர்கிறது. சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனை ஊழியர்களை அணி திரட்டி சங்கம் அமைத்துள்ளார். காஸ்மோபாலிடன் கிளப் போன்ற கிளப்கள், காபி டே போன்ற நிறுவன ஊழியர்களை தொழிற்சங்கத்தின் அணி வகுக்கும் பணியைச் செய்தவர். ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களை திரட்டும் பணியில் இப்போதும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருப்பவர். எப்போதுமே உற்சாகமாகவும் புத்துணர்வோடும் இருப்பவர். அவரது உற்சாகம் நமது சோர்வை போக்கி விடும்.

என்றுமே அவர் ஒரு வழிகாட்டி.

அர்ப்பணிப்பு மிக்க உழைப்பிற்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு உதாரணம் தோழர் எஸ்.ராஜப்பா.  

தோழர் ராஜப்பா பற்றி தோழர் ஜி.ஆர் எழுதியதை அடுத்த பதிவில் பகிர்கிறேன். 

1 comment:

  1. வாழும் உதாரணங்களைத் தரும் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete