Thursday, July 19, 2018

வழக்கறிஞர்கள் – முரண்பாடுகள் – சென்னை – காஷ்மீர்




சென்னை அயனாவரத்தில் நடைபெற்றது மிகவும் கொடூரமான நிகழ்வு. மிருகங்கள் என்று அந்த கொடியவர்களைச் சொல்வது மிருகங்களுக்கு இழுக்கு. சக மனிதனை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமையை இவர்கள் உருவாக்கி விட்டார்கள்.

கிழவன் முதல் இளைஞன் வரை இணைந்து இந்த பட்டியலில் இருப்பது மனித மனம் வக்கிரமாகிக் கொண்டிருப்பதன் அடையாளம். தனக்கு என்ன நேர்கிறது என்பதை சொல்லத் தெரியாத ஒரு குழந்தையை தங்களின் வக்கிரத்திற்கு வடிகாலாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிற அந்த கொடூரர்கள் மிகக் கடுமையான தண்டனையை பெற வேண்டும்.

இப்பிரச்சினையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை உடன் இருந்து அலைந்து திரிந்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களே. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் கூட தயாராக இல்லாமல் “பீப் சாங்கிற்கு போராடிய மாதர் சங்கம் எங்கே?” என்று வழக்கமான தற்குறிகள் சிலர் பதிவு எழுதி அந்த கொடியவர்களுக்கும்  தங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று நிரூபித்துக் கொண்டார்கள்.

இந்த பிரச்சினையில் ஒரு நல்ல அம்சம் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த நிலைப்பாடு. இந்த காமுகர்களாக எந்த ஒரு வழக்கறிஞரும்  ஆஜராக மாட்டார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பாலியல் வன் கொடுமை வழக்குகளை நடத்த மாட்டோம் என்று ஒவ்வொரு வழக்கறிஞரும் முடிவு செய்தாலே இது போன்ற கொடுமைகளில் ஒரு 25 % ஆவது குறைந்து போகும்.

சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.

அதே நேரம்

காஷ்மீரில் குழந்தை ஆசிஃபா சிதைக்கப்பட்ட நிகழ்வில் காவல்துறை குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யச் சென்ற போது நீதிமன்றத்திற்குள் வர விடாமல் ரௌடித்தனம் செய்ததும் வழக்கறிஞர்கள் என்பதும் நினைவுக்கு வருகிறது. அவர்கள் காவிக் கூட்டம் என்பதும் “இது போன்ற சின்ன விஷயத்தை பெரிது செய்தால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவது குறைந்து போய் அன்னியச் செலாவணி பாதிக்கப்படும்” என்று சொன்னதும் காவிக் கூட்ட பிரமுகர்கள் என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கொடியவர்களால் தமிழகத்திற்கு தலைகுனிவு என்றாலும் வழக்கறிஞர்கள் ஆறுதல் தருகிறார்கள்.

காஷ்மீரில் குற்றவாளிகளால் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களாலும் அசிங்கமே. இருவருமே காவிகள் என்பதுதான் அதற்குக் காரணம். . .



5 comments:

  1. வழக்கறிஞர்கள் ஒற்றுமை எத்தனி நாள் இருக்கும்?

    ReplyDelete
  2. இந்த விடயத்தில் தமிழக வக்கீல்களை மெச்சினாலும்
    உண்மையில் தமிழக வக்கீல்களில் பெரும்பானமையானவர்கள் குற்றவாளி கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை ,

    ReplyDelete
    Replies
    1. அதை நானும் மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் நிலை பாராட்டத்தக்கது

      Delete
  3. சேவல் கொடியோன்July 20, 2018 at 2:58 PM

    அபாயகரமான ஒரு விடயத்துக்கு ஆதரவு தெரிவிக்கிண்றீர்கள் சார்

    "பாலியல் வன் கொடுமை வழக்குகளை நடத்த மாட்டோம் என்று ஒவ்வொரு வழக்கறிஞரும் முடிவு செய்தாலே இது போன்ற கொடுமைகளில் ஒரு 25 % ஆவது குறைந்து போகும்.
    "
    .
    நாளைக்கு எந்த அப்பாவி மீதும் வழக்கு தொடுக்கப்படடாலும் இதே நிலை தான் வரும்

    ReplyDelete
  4. //சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.//
    காஷ்மீரில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் நடந்து அநீதி செய்தார்கள், என்பதிற்காக சென்னை வழக்கறிஞர்களின் செயல்கள் சரியாகிவிட முடியாது.குற்றம் சாட்டபட்டவர்களுக்கு சென்னை வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என்று சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த நிலைப்பாடு ஒரு ஒரு நல்ல அம்சம் என்று நீங்க பாராட்டுவது வருத்ததமா இருந்தது. இதே வழக்கறிஞர்கள் தான் சிறுமி மீது வன்கொடுமையில் கைதானவர்கள் மீது நீதிமன்ற பகுதியில் வைத்தே தாக்குதல் நடத்தி கோமாளிதனமாக நாடகம் நடத்தியுள்ளனர்.
    இந்தியாவில் வழமை போலவே இப்போதும் ஆண்கள் அப்பாவிங்க செய்யும் பாலியல் கொடூர வன்முறைக்கு பெண்கள் தான் காரணம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் கவனித்தீர்களா.
    பீப் சாங்கிற்கு போராடிய மாதர் சங்கம் எங்கே? என்று கேட்பவர்களின் வருத்தமெல்லாம் தங்களது விருப்பத்துக்குரிய பாடல் பீப் சாங்கை கேட்க முடியாம பண்ணிவிட்டார்களே என்ற ஆத்திரம் தான்.

    ReplyDelete