Monday, May 28, 2018

கிரிக்கெட் வெற்றி தூத்துக்குடி துயரைத் துடைக்காது




ஐ.பி.எல் விளையாட்டுப் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதன் மூலம் தூத்துக்குடி துயரத்திற்கு ஒரு ஆறுதல் கிடைத்துள்ளது என்ற ரீதியில் பல பதிவுகளை பார்க்க முடிந்தது. இந்த ஆறுதல் உரைகளை ஆரம்பித்து வைத்தவர் ஜல்லிக்கட்டு போராளியாக காண்பித்துக் கொண்டு பின்பு ஆட்சியாளர்கள் மீதான விசுவாசத்தை காண்பித்த காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. விளம்பர இடைவேளை போல தூத்துக்குடியை பயன்படுத்திக் கொண்டவரும் இவரே.

தூத்துக்குடி சம்பவத்தினால் உண்மையாகவே மனம் பாதிக்கப்பட்ட சிலர் அவ்வாறு கூறுவதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தூத்துக்குடி பற்றி கொஞ்சம் கூட கவலை கொள்ளாமல் “அது எங்கேயோ துபாய் பக்கம், அபுதாபி பக்கம் இருக்கு” என்று இருந்தவர்களும் அதையே சொல்வது எரிச்சலூட்டுகிறது.

தூத்துக்குடி பிரச்சினையிலிருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

தோனிக்கு அடிக்கும் விசிலில் ஸ்டெரிலைட்டை மூடு எனும் முழக்கங்களை  மூழ்கடிக்கப் பார்க்கிறார்கள்.

வாட்ஸனின் சாதனையில் துப்பாக்கிச்சூட்டின் வாதையை மறைக்க முயல்கிறார்கள்.

சி.எஸ்.கே என்பது  தமிழகத்தின் அணி அல்ல. இந்தியா சிமெண்ட்ஸ் முதலாளி சீனிவாசனின் அணி.  அதனை ஆதரிப்பதாக இருந்தால் ஆதரித்துக் கொள்ளுங்கள். ஆனால் அதோடு தேசப்பற்று, மாநிலப் பற்று, மாநகரப் பற்று ஆகியவற்றை இணைக்காதீர்கள்.

அந்த அணி வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியை கொண்டாட வேண்டும் என்று நினைப்பவர்கள், கொண்டாடுங்கள், பட்டாசு வெடியுங்கள், விசில் அடியுங்கள். அது முழுக்க முழுக்க உங்கள் விருப்பம்.

ஆனால் அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் தூத்துக்குடி துயரத்தை இணைக்காதீர்கள்.  துயரத்தில் தவிப்பவர்களுக்கு கிடைத்த இளைப்பாறுதல் என்றெல்லாம் வர்ணிக்காதீர்கள்.

தூத்துக்குடி கொடுமை என்பது  அரசு பயங்கரவாதம். கார்ப்பரேட் நிறுவனத்தின் அடிமையாகிப் போன ஆட்சியாளர்கள், தன் மக்கள் மீது தொடுத்த பெரும் தாக்குதல்.

அந்த துயரத்தை, வலியை ஒரு கிரிக்கெட் வெற்றியால் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு கூட குறைத்து விட முடியாது.

தூத்துக்குடியில் நடந்தது  வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக எளிய மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டம். அதனுடன் முதலாளிகளின் சூதாட்ட விளையாட்டை ஒப்பிடுவது துப்பாக்கிச் சூடு ஏற்படுத்திய வலியை விட இன்னும் கடுமையாக உள்ளது...

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete