Saturday, May 26, 2018

மோடியின் "மகா பலி"


எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன்  எழுதி இன்றைய தீக்கதிர் நாளிதழில் பிரசுரமான முக்கியமான கட்டுரை. 

அவசியம் முழுமையாக படியுங்கள்


நாலு வருசமா நல்ல காலம் பொறக்கலே!






நான்கு ஆண்டு நரேந்திர மோடி ஆட்சிபற்றிய வித்தியாசமான பரிசீலனையை இந்து பிசினஸ் லைன் (மே 28,2018) இதழில் “மார்க்கெட் வாட்ச்” பகுதியில் பிரியா கன்காரா என்ற செய்தியாளர் செய்துள்ளார். நரேந்திர மோடியின் புகழ்பெற்ற ‘நல்ல காலம் பிறக்கும்” (அச்சே தின்) என்கிற வாக்குறுதி எப்படி தில்லி பங்குச் சந்தையில் பிரதிபலித்துள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு தந்துள்ளார்.

கொடி பறக்குமா? இறங்குமா?

தில்லி பங்குச் சந்தையின் மூன்று குறியீடுகள் - அதாவது டாப் - 50 நிறுவனங்கள், நடுத்தர நிறுவனங்கள், சிறு முதலீட்டு நிறுவனங்களில் எவ்வாறுபங்கு விலைகள், ஏற்றம் இருந்துள்ளது என்பதைக்காட்டுகிறது.

குறியீடுகள்                  26.5.2014     24.5.2018     வருவாய் (சதம்)
நிப்டி 50                                7359              10514                 42.87
நிப்டி மிட் கேப்                3207              18428               474.61
நிப்டி ஸ்மால் கேப்      2403                7698                220.34


தில்லி பங்குச் சந்தையின் இக்குறியீடுகளே, மும்பை சென்செக்ஸ் உள்ளிட்ட குறியீடுகளே நிறுவனங்களின் உண்மையான இலாபகரமான செயல்பாட்டை உணர்த்துவதில்லை என்பது தனிக்கதை. பங்குச் சந்தையின் கொடிகட்டி பறந்த நிறுவனங்கள் பின்னர் குறுகிய காலத்திற்குள்ளாக அரைக் கம்பத்திற்கு கொடியை இறக்கிய அனுபவங்களும் உண்டு. மேற்கூறிய புள்ளி விபரங்கள் நான்காண்டு பங்குச் சந்தையின் வணிக செயல்பாட்டைக் காண்பிக்கின்றன. ஆனால் துறை வாரியாக இச் செயல்பாட்டைப் பரிசீலித்தால்தான் யாருக்கு பறக்கிற கொடி? யாருக்கு இறங்குகிற கொடி என்பது தெளிவாகும்.யாருக்கு நல்ல காலம்?பங்குச் சந்தை ஏற்ற, இறக்கங்களை செய்தியாளர் பிரியா கன்சாரா தனியார் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதிச் சேவைகள், பொதுத்துறைகள், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் என அக்குவேறாக ஆணி வேறாகப் பிரித்து அலசியுள்ளார். இதில் தனியார் வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், நிதிச்சேவைகளின் குறியீடுகள் ஏறுமுகமாகவும், பொதுத்துறைகளின் குறியீடுகள் இறங்குமுகமாகவும் இருந்துள்ளதை எடுத்துக்காட்டியுள்ளார் இதோ அப்பட்டியல்:

துறைவாரியாக மே 26,2014       மே24,2018  ஏற்ற இறக்கம் (சதவீதம்)
தனியார் வங்கி           7487              14792                        97.56
பன்னாட்டு
நிறுவனங்கள்              7113               14024                       97.16
நிதிச் சேவைகள்        6137               10782                       75.68
பொதுத்துறை
நிறுவனங்கள்              3670               3661                       (-)0.24
மத்திய பொதுத்துறை
நிறுவனங்கள்              2573               2273                      (-)11.69
பொதுத்துறை
வங்கிகள்                       38.69             29.46                         (-)23.85
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்
                                              2573              2273                         (-)11.69
பொதுத்துறை வங்கிகள் 
                                              38.69             29.46                         (-)23.85

யாருக்கு பிளஸ், யாருக்கு மைனஸ் என்பதை இப்பட்டியல் விளக்குகிறது.

இவற்றில் பொதுத்துறை வங்கி பங்கு விலைகளின் பெரும்சரிவுக்கு வராக்கடன்களே காரணம், நான்கு ஆண்டுகளில் 24 சதவீதம் வீழ்ச்சி. திவால்சட்டங்கள், மறுமுதலீடுகள் ஆகியவற்றையெல்லாம் கடந்தும் வராக்கடன் பிரச்சனை தீர்க்கப்படாமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. மொத்தக்கடன்களில் செயல்படா சொத்துக்கள் எனப்படும் வராக்கடன் விகிதம் 2010-2017 க்கு இடைப் பட்ட காலத்தில் 2.96 சதவீதமாக இருந்தது. 

ஆனால்‘நல்ல கால’ நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில்- அதாவது 2015 - 2018க்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விகிதம் 7.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாமன அவதாரத்தில் மூன்றடி கேட்டது போல் வராக்கடனும் மும்மடங்கு உயர்ந்து “மகா பலி” கேட்கிறது.

இன்னொரு “ஷாக்”

பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகளும் பெருமளவு சரிந்துள்ளன. இந்த அதிர்ச்சிக்குகாரணம் மின்சாரத் துறையேயாகும். அரசு மின்சாரநிறுவனங்களின் பங்கு விலைகள் 30 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரை கூட வீழ்ச்சியடைந்துள்ளன. 

இப்பட்டியலில் கிராமிய மின்மயக்கழகம் (RURAL ELECTRIFICATION CORPORATION),, மின்சக்தி நிதிக்கழகம் (POWER FINANCE CORPORATION), இந்திய நிலக்கரி கழகம் (COAL INDIA) பாரத் மிகுமின் கழகம் (BHARAT HEAVY ELECTRICALS) ஆகியன அடங்கும்.அது மட்டுமின்றி எண்ணெய் ஆராய்ச்சி நிறுவனங்களும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம் (ONGC), , இந்திய எண்ணெய் கழகம் (OIL INDIA)   ஆகியன உண்டு. இவ்வளவுக்கும் “க்ரிசில்” மதிப்பீட்டு நிறுவனத்தின் கருத்துப்படி “மோடி அரசாங்கத்தின் அதிர்ஷ்டமே கச்சா எண்ணெய் விலைகள் உலகச் சந்தையில் சரிந்ததே. இதன்மூலம் சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது” என்பது ஆகும். ஆனால் இந்த “நல்ல காலமும்” மக்களுக்கு முழுமையாக அனுபவிக்க கிடைக்கவில்லை. 

ஒரு பக்கம் எண்ணெய் மானியம் மிச்சம் இன்னொரு புறம் குறைந்த விலையை எக்சைஸ் வரிகள் மூலம் குறையாமல் பார்த்துக் கொண்ட வஞ்சம். இது தவிர ஆதாரத் தொழில் வளர்ச்சி அடி வாங்கியுள்ளது. உலோகங்கள் 11 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ரியல் எஸ்டேட் வளர்ச்சியை பண மதிப்பு நீக்க நடவடிக்கை காவு வாங்கிவிட்டது.இப்படிச் சரிவுக் கதைகள் வெளிப்படுத்துகிற சோகம் என்னவெனில், மக்களின் வாழ்வோடு நேரடித் தொடர்புடைய அல்லது வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்கிற துறைகளெல்லாம் காயப்பட்டுள்ளன. எப்படி நல்ல காலம் பொறக்கும்?

கிடைத்ததைச் சுருட்டியவர்கள்

எப்படி தனியார் வங்கிகள், நிதிச் சேவைகளின் பங்கு விலைகள் மட்டும் ஏறுமுகமாய் இருந்துள்ளன? இதுவே உலகமயத்தின் பாரபட்சமான வளர்ச்சி. உள்நாட்டுச் சந்தை வளர்ச்சி நகரங்களை குறிப்பாக மாநகரங்களைச் சார்ந்ததாக இருப்பதுதான். வாகனங்கள், விரைவு வியாபார நுகர்வு பொருட்கள், பெரும் ஊடக நிறுவனங்கள் 60 சதவீதத்திலிருந்து 98 சதவீதம் வரை அமோக லாபம் பார்த்துள்ளன. கார்ப்பரேட் ஊடகங்கள் “நாலு வருசத்தை” கொண்டாடுவது ஏன் என்று தெரிகிறதா? இதன் சமூக விளைவுதான். உயர், நடுத்தர வர்க்கத்தினரிடம் இன்னும் வெளிப்படும் மோடி மோகம். இதன் மறு விளைவுதான் சாமானிய, நடுத்தர, கிராமப்புற மக்களிடம் எழுகிற மோடி கோபம்.நல்ல காலம் பொறந்ததுயாருக்கு என்பதுதான் கேள்வி.


(விவரங்களும், தகவல்களும் பிரியா கன்சாரா செய்தியிலிருந்து.. 

விமர்சனங்கள் கட்டுரையாளருடையது)

No comments:

Post a Comment