Saturday, February 13, 2021

நாசர் கேட்ட கேள்விதான் சரி.

 கீழே உள்ள பதிவை எழுதி மூன்று நாட்களாகி விட்டது. மிகக் கடுமையான வாசகத்தை பயன்படுத்த வேண்டுமா என்ற யோசனையில் இருந்தேன். அந்த கடுமையான வார்த்தைக்கு மாற்றான பொருத்தமான வார்த்தை கிடைக்காததால் தயக்கமாக இருந்தேன். நேற்று மீண்டும்  கே.ஆர்.அதியமான் என்ற அந்த பொருளாதார வல்லுனர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மீதும் ஊழியர்கள் மீதும் விஷத்தை கக்கியுள்ளதால் அங்கே ஒரு காட்டமான பின்னூட்டத்தை போட்டு விட்டு இந்த பதிவையும் வெளியிடுவது என்று முடிவெடுத்தேன்.

 அந்த பொருளாதார வல்லுனரின் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் தனிப் பதிவாக வெளியிடுகிறேன்.

 


“மத்யமர்” என்ற பெயர் கொண்ட அக்மார்க் சங்கி குழுவில் ஒரு பொருளாதார வல்லுனர் “தேசிய மயம் செய்ததால்தான் தனியார் மயம் செய்கிறார்கள்” என்று விளக்கமாக எழுதியிருந்தார். ஏன் தேசியமயம் செய்யப்பட்ட தேவை வந்தது என்ற் சொல்ல அந்த பொருளாதார நிபுணர் தயாராக இல்லை.

 கட்டமைப்புத் தேவைகளை உருவாக்க, கனரக தொழிற்சாலைகளை உருவாக்க தனியார் முதலாளிகள் தயாராக இல்லாத காரணத்தால்தான் அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது என்ற உண்மை அந்த மரமண்டை பொருளாதார நிபுணருக்கு தெரியாதா என்ன?

 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள், பாலிசிதாரர் பணத்தை சுரண்டி ஊதாரித்தனமாக செலவழித்துக் கொண்டு இருந்ததால்தான் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாகப்பட்டு எல்.ஐ.சி உருவானதும் “மக்கள் பணம் மக்களுக்கே” என்ற உயரிய கோட்பாடு இன்று வரை பின்பற்றி வருவதும் கூட அவருக்குத் தெரிந்திருக்கும்.

 ஆனாலும் அவர் தேசியமயமாக்கினால் தனியார்மயமாக்கத்தான் செய்வார்கள் என்று சொல்கிறார்.

 மனிதன் படத்தில் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் சொல்வார் “பிளாட்பார்ம்ல படுத்தா ஆக்சிடெண்ட் நடக்கத்தான் செய்யும்”  இது என்ன அயோக்கியத்தனமான வாதம் என்று திரைப்படம் பார்க்கும் போதே கோபம் வரும்.

 பிரகாஷ்ராஜ் திரையில் சொன்னதைத்தான் அந்த பொருளாதார நிபுணர் முகநூலில் சொல்கிறார். ஆனால் அதற்கு கோபம் வராதவர்களாகத்தான் “மத்யமர்கள்” இருக்கிறார்கள்.

 அதே குழுவில் இன்னொரு அம்மையார் சொல்கிறார்.

 “பொதுத்துறை நிறுவனங்கள் செய்யும் தொழிலை செய்ய அன்றைக்கு தனியார் முதலாளிகளிடம் பணம் இல்லை. இப்போது அவர்களிடம் பணம் இருக்கிறது. கொடுத்தால் என்ன தவறு?”

 தேவர் மகன் படத்தில் நாசர் பஞ்சாயத்தில் “சட்டம் என்ன உம்ம மீசை மசுறுன்னு நினைச்சீங்களா, நெனச்சா முறுக்கறதுக்கும் நெனச்சா கீழே விடறதுக்கும்” என்று கேட்பார்.

 அதே கேள்வியைத்தான் இந்த தனியார்மய ஜால்ராக்களிடம் கேட்க வேண்டியுள்ளது.

 நீங்க நெனச்சா ஆரம்பிக்கறதுக்கும் மூடறதுக்கும் பொதுத்துறை என்ன உங்க மீசை …………………….?””

No comments:

Post a Comment