Friday, February 19, 2021

இதுதான் எங்க கெத்து

 


 எல்.ஐ,சி பங்கு விற்பனை, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்வு, ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன தனியார்மயம் ஆகிய முன்மொழிவுகளை இந்த வருட நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன். இந்தியப் பொருளாதாரத்தையும் பாலிசிதாரர் நலனையும் பாதிக்கும் இவ்வறிப்புக்களுக்கு எதிராக நாங்கள் மேற்கொண்டு வரும் பல்வேறு இயக்கங்களில் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் பிரபலங்களையும் சந்தித்து மனு அளித்து ஆதரவு கோருவது.

 



அந்த அடிப்படையில் இன்று கூட நாங்கள் வேலூர் மக்களவை உறுப்பினர் திரு டி.எம்.கதிர் ஆனந்த் அவர்களை சந்தித்தோம். எங்கள் விழுப்புரம் கிளைத் தோழர்கள் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் திரு டி.ரவிகுமார் அவர்களை சந்தித்தனர். வேலூர் எம்.பி யுடன் நீண்ட நேரம் உரையாடினோம். அந்த சந்திப்பு குறித்து தனியாக எழுத வேண்டும்.

 இந்த சந்திப்புக்களை விட மிக முக்கியமான சந்திப்பு ஒன்று இன்று சென்னையில் நிகழ்ந்தது. எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், சென்னைக் கோட்டங்களின் பொறுப்பாளர்கள், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் இன்று சந்தித்தது யாரைத் தெரியுமா?

 எந்த முன்மொழிவுகளுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோமோ, அந்த முன்மொழிவுகளை மக்களவையில் அளித்த அதே நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களைத்தான்.

 

அவரது முன்மொழிவுகள் பாலிசிதாரர்கள் நலனுக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கும் எதிரானது என்பதால் அவற்றை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று நேரடியாகவே வலியுறுத்தினர். அவர் அரசின் நிலைப்பாட்டைச் சொன்னாலும் அவை பொருத்தமானதல்ல என்பதை விளக்கியுள்ளனர்.

 யார் பிரச்சினைகளுக்குக் காரணமோ, யாருடைய முடிவுகளுக்கு எதிராக போராடுகிறோமோ அவரையே சந்தித்து அவற்றை மாற்ற வேண்டும் என்று சொல்லும் கெத்துதான் எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பாரம்பரியம்.

 ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கூட அவரது முடிவுக்கு எதிராக வேலை நிறுத்தம் நடத்திக் கொண்டே அதே நாளில் அவரை சந்தித்து வலியுறுத்திய அனுபவம் நினைவுக்கு வந்தது. அப்போதும் நாங்கள் வென்றோம். இப்போதும் வெல்வோம்.

 

 

No comments:

Post a Comment