Monday, May 27, 2019

ஆம், இந்தியா மாற்றப்பட்டு விட்டது!


மிகவும் முக்கியமான கட்டுரை இது. நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியானது.

வெறுப்பரசியல் தேர்தலுக்குப் பின் அதிகமாகி விட்டது என்பதை முந்தைய பதிவிலேயே எழுதியிருந்தேன். மூன்றாவது சம்பவம் இன்று பீகாரில் நடந்துள்ளது. நாளை அது பற்றி எழுதுகிறேன்.

இப்போது இக்கட்டுரையை படியுங்கள்




ஹர்ஷ் மந்தர்

இது (பா.ஜ.க.வினால்) திருடப்பட்ட தேர்தல் என நான் நம்பவில்லை. தேர்தல் முறைகேடுகள் ஒரு சிறுதாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம் ஒரு உண்மையை அங்கீகரிக்க வேண்டும். இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த உண்மையை அது கசப்பானதாக இருந்தாலும் நாம் அங்கீகரிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

கும்பல் படுகொலையாளிகளால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு 28 முறைபயணம் மேற்கொண்டுள்ளேன். அப்பொழுது  இந்த தாக்குதல்களின் ஒரு மிகமுக்கியமான அம்சத்தை நான் கவனித்தேன். இந்த கொடூர  தாக்குதல்களின் அதீதமான வன்மம் என்னை மிகவும் பாதித்தது.  பீகார் மாநிலம் சித்தாமாரி எனும் இடத்தில் 82 வயது முஸ்லிம் முதியவர் தாக்கப்பட்டது எனது நினைவுக்கு வருகிறது. ஒரு இந்து கோவிலில் பெண் கடவுள்சிலை உடைக்கப்பட்டுவிட்டது. அதற்கு அந்த முஸ்லிம் முதியவர்தான் காரணம்என கூறி அவர் கடுமையாக தாக்கப்பட்டார். 82 வயது முதியவரை தாக்கிய  அந்த கும்பலில் இளைஞர்கள், குழந்தைகள்,ஏன் ஒரு பெண் கூட இருந்தார். சிறிது கூட இரக்கம் இல்லாமல் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காணொலி மூலம் பதிவு செய்யப்பட்டது.

இன்றைய சூழல்  இரு தரப்பிலும் வெறுப்பை உருவாக்கிவிட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் ஒரு அம்சத்தில் வெற்றி அடைந்துவிட்டனர். முஸ்லிம்கள், பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கத்தில் உள்ளனர்; அதே சமயத்தில் இவர்களுக்கு எதிராக மோடி தேசத்தை காக்க வலுவாக  நிற்கிறார்;  இந்தியா எனும் மகத்தான தேசம் எனில் அது மோடிதான் எனும் ஒரு சமன்பாடை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கும்பல் படுகொலைகளை ஆய்வு செய்த பொழுது நான் கவனித்த ஒருமுக்கியமான கவலை தரும் அசாதாரணமான அம்சம் என்னவெனில், இந்த வன்முறை குறித்து சாதாரண மக்களில் எவருக்கும் சிறிது கூட கருணை அல்லது வருத்தம் இருந்ததாக தெரியவில்லை என்பதுதான். குஜராத் கலவரங்களின் பொழுது கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை இந்துக்களில் ஒரு பகுதியினர் அரவணைத்தனர்;  உதவி செய்தனர். ஆனால் இந்த கும்பல் கொலைகளின் பொழுது அத்தகைய உதவி அல்லது கருணை அறவே வெளிப்படவில்லை.

இந்த தேர்தல் ஒரு உண்மையை உறுதிசெய்துவிட்டது என நான் உணர்கிறேன். என்ன உண்மை அது? இரு தரப்பிலும் வெறுப்பு என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த  வெறுப்பை விதைத்தவர்கள் தமது கருத்தாக்கத்திற்கு ஏதுவாகஇந்தியாவை மறுகட்டமைக்க முயல்கின்றனர். குஜராத்தில் இன்று வெளிப்படையாக வன்முறை இல்லை. வன்முறை அரங்கேற்றப்பட்டது; வெறுப்பு ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளது; முஸ்லிம்கள் தனி இடத்தில் கொட்டடிகளில் வாழத் துரத்தப்பட்டனர்; இந்துக்கள் தனியாகவும் முஸ்லிம்கள் தனியாகவும் வாழும் வகையில் எல்லைகள் வகுக்கப்பட்டன. முஸ்லிம்களின் கொட்டடிகள் எவ்வித வசதிகளும் இல்லாதவாறு உத்தரவாதம் செய்யப்பட்டது. வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.

முஸ்லிம்கள், தலித் மக்கள், இந்துக்கள்,  கிறித்துவர்கள் தனித்தனியாக வாழ வேண்டும்; அமைதியுடன் வாழ  வேண்டும்; ஆனால் அசமத்துவசூழலில் உரிமைகள் இழந்து வாழ  வேண்டும். வன்முறைக்கு பிறகு அமைதிதிரும்புகிறது. ஆனால்  இந்த அமைதிக்கு அடிப்படை அசமத்துவமும் உரிமை பறிப்பும் என்பது முக்கியமானது. இத்தகைய ஒரு இந்தியாவை உருவாக்காவே அவர்கள் முயல்கின்றனர்.நமது சமூக ஒப்பந்தத்தில் இத்தகைய பாதகமான மாற்றம் உருவாகியுள்ளது. நமது அரசியல் அமைப்பு சட்டம் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் தயவு தாட்சயமின்றி அழிக்கப்படுகின்றன.

வாக்கு இயந்திரங்களில் முறைகேடு அல்லது தேர்தல் முறைகேடுகள் பற்றிய பிரச்சனை அல்ல  இந்த தேர்தல்! நமதுஇந்திய சமூகம் அடிப்படையில் மாறிவிட்டது என்பதை பற்றியது இந்த தேர்தல்! இந்த கருத்தாக்கத்தை எதிர்த்து முறியடிக்க தவறிய எதிர்க்கட்சிகளின் தோல்வி பற்றியது இந்த தேர்தல்!நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன்; ஏழை மக்களுக்கு பணியாற்ற விரும்புகிறேன்; இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு நிற்கிறேன்; சமத்துவத்திற்கு குரல் கொடுக்கிறேன் – இத்தகைய முழக்கம் அல்லது கோட்பாடுகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

நவீன தாராளமய முதலாளித்துவ நெருக்கடியின் தீப்பிழம்புகள் உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ளன. இத்தகைய முதலாளித்துவத்தின் வாக்குறுதி என்ன? நீ மேலும் மேலும்  வசதி படைத்தவனாக ஆகலாம்! பணம் உன் காலடியில் சேர்ந்து கொண்டேயிருக்கும்; ஒவ்வொருவருமே பணக்காரனாக மாறலாம்! ஆனால் இந்த வாக்குறுதி நடக்கவில்லை! இந்த முதலாளித்துவத்தின் மிகப்பெரிய தோல்வி என்பது என்ன? ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் இணைகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலைஇல்லை.

இன்று நமது இந்திய சமூகத்தில் உருவாகியிருக்கும் வெறுப்பு அரசியல் என்பது வாழ்வாதாரத்தை இழந்து நிற்போருக்கு ஒரு சுய வறட்டு கவுரவத்தை உருவாக்கும் நீசத்தனமான செய்கை ஆகும். இது அபின் அல்லது கஞ்சாவை போன்றது.ஒரு பொய்யான உலகத்தை உருவாக்குவதும் அதில் ஒருவனை ஆளுமை செய்பவனாக கட்டமைப்பதும் போன்றது. வெறுப்புஅரசியல் மூலம் இன்னொரு பகுதியினரை நீ வெல்ல முடியும்;அவர்களை நீ மண்டியிட வைக்க முடியும் எனும் ஒரு போதையை உருவாக்குவதுதான் வெறுப்பு அரசியல்! அத்தகைய போதைதான் மக்களுக்கு ஊட்டப்படுகிறது.இதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்!

இந்த வெறுப்பு அரசியலும்  மக்கள் முன்னே வைக்கப்படும் பொய்யானகருத்தாக்கமும் நமது அரசியல் சட்டத்தை அழித்திட பயமுறுத்திக் கொண்டுள்ளது!இதற்கு என்ன தீர்வு காணப்போகிறோம்? நம் முன் உள்ள மிகப்பெரிய சவாலை உள்ளடக்கிய கேள்வி இதுதான்!

தமிழில்: அ.அன்வர் உசேன்

நன்றி: தி சிட்டிசன் மின் இதழ்

6 comments:

  1. சிறந்த ஆய்வு
    இந்த ஆங்கில மூலம் அல்லது மலையாள மொழி பெயர்ப்பு கிடைக்குமா ?

    R.Rajendra

    ReplyDelete
  2. சிறந்த ஆய்வு
    இந்த ஆங்கில மூலம் அல்லது மலையாள மொழி பெயர்ப்பு கிடைக்குமா ?

    Rishabraj Rajendra

    மலையாள மொழி பெயர்ப்பு கிடைத்தால் நன்மை

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. அய்யா உங்கள் கருத்துக்களை நான் தொடர்ச்சியாகப் படிப்பதுண்டு.பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.ஆனால் மேற்கு வங்காளத்தில் தங்கள் கட்சியினர் வாக்களித்த முறை சரிதானா? தாங்கள் தலைமையிடம் எடுத்துசொல்லுங்கள் பெரும் தவறு என்று.

    ReplyDelete
  5. அய்யா உங்கள் கருத்துக்களை நான் தொடர்ச்சியாகப் படிப்பதுண்டு.பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.ஆனால் மேற்கு வங்காளத்தில் தங்கள் கட்சியினர் வாக்களித்த முறை சரிதானா? தாங்கள் தலைமையிடம் எடுத்துசொல்லுங்கள் பெரும் தவறு என்று.

    ReplyDelete
    Replies
    1. அது தவறான தகவல் ஐயா.
      இருப்பினும் உங்கள் உணர்வுகள் உரிய முறையில் எடுத்துச் செல்லப்படும்

      Delete