Saturday, April 29, 2017

மறக்க முடியாத அந்த நாட்களி்ல் . . . .






நூல்                 “ நீர்”
ஆசிரியர்             வினாயக முருகன்
வெளியீடு            உயிர்மை பதிப்பகம்
                       சென்னை.
விலை               ரூபாய் 300.00

2015 ம் ஆண்டின் இறுதியில் சென்னையை புரட்டிப் போட்ட பெரு மழையை, பொறுப்பின்றி திறந்து விடப்பட்ட  செம்பரப்பாக்கம் ஏரியை, அதனால் மக்கள் பட்ட அவதியை, அன்றைய அரசு நிவாரணப் பணிகளில் காண்பித்த அலட்சியத்தை, உதவிக்கரம் நீட்ட பலர் தன்னெழுச்சியாய் முன்வந்ததை மறந்து விட முடியுமா? (ஆனால் மக்கள் மறந்து போய்தான் தங்களை ஆணவத்துடன் அலட்சியம் செய்த அதிமுகவிற்கே மீண்டும் வாக்களித்தனர் என்பது வேறு கதை)

அந்த காலகட்டத்தை பதிவு செய்கிறது வினாயக முருகனின் “நீர்”. மயிலேறி உலகத்தை சுற்றிய முருகன் போல ஒட்டு மொத்த சென்னைக்குள் எல்லாம் ஆசிரியர் செல்லவில்லை. தாய் தந்தையை வலம் வந்து கனி வென்ற வினாயகனாக ஒரு தெருவின் அவலத்தையே முழு நூலாக்கி விட்டார். ஒரு தெரு பட்ட அவஸ்தையைத்தானே ஒட்டு மொத்த சென்னையும் அனுபவித்தது!

மழையின் தொடக்கத்தில் மணிக்கணக்கில் முடங்கிய போக்குவரத்தில் தொடங்குகிற நூல் நீரெல்லாம் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கான அறிகுறி தென்படுகிற வரைக்குமான ஒரு மாத காலகட்டத்தை பதிவு செய்கிறது.

வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து அடுத்தவர் வீட்டில் அடைக்கலம் புக வேண்டிய அவலம், நெருங்கிய நண்பராக இருந்தாலும் இயல்பாக இருக்க முடியாத யதார்த்தம், குடிநீரையும் மற்ற பயன்பாட்டுக்கு தேவையான நீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம், அதனால் எல்லாவற்றையும் சுருக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம், தண்ணீர் ஈரத்தினால் காலில் ஏற்பட்ட சரும நோய்கள் என்று தனிப்பட்ட முறையில் அனுபவித்த சிரமங்கள் எல்லாம் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேங்கிய தண்ணீரை அகற்றுவதில் மாநகராட்சி காண்பித்த அலட்சியம், தன்னெழுச்சியாய் சிலர் பணி செய்யும் போது சிலர் தனக்கென்ன என்று ஒதுங்கிப் போவது, அதே நேரம் பணி செய்பவர்களை கொச்சைப்படுத்துவது என்று அன்றாடம் சமூகத்தில் நாம் காணும் விகாரமான பக்கமும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தூய்மைப்பணிக்காக வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராத அவலமும் இந்த நூலில் சரியாக பதிவாகியுள்ளது.

எண்பதுகளின் திரைப்படங்களில் தேவையே இல்லாவிட்டாலும் ஒரு சிலுக்கு ஸ்மிதாவின் நடனக்காட்சி ஒன்றிருக்கும். அது போல இந்த நூலுக்கு ஒரு பெண் கதாபாத்திரமும் அந்த பாத்திரத்தின் பாலியல் இச்சைகளும் வலிந்து திணிக்கப்பட்டது போல நான் உணர்ந்தேன். அந்த பாத்திரத்தை ஒதுக்கி வைத்து பார்த்தாலும் நூல் முழுமையாகத்தான் உள்ளது.

சென்னை நகரம் நரகமானதை துல்லியமாக சொன்னது “நீர்”. வினாயக முருகனின் நீரோடை போன்ற எழுத்து நடை அதை சக்தியாகவே சொன்னது. 

4 comments:

  1. Dear sir, that novel is marrana mokkai.

    ReplyDelete
    Replies
    1. adhu mattumaa

      Delete
    2. மொகபா, ஜெயிலிலிருந்து வெளியே வந்துட்டியா?

      Delete