Monday, April 3, 2017

மார்லன் பிராண்டோவை நேசிக்கிறேன்

தோழர் ஃபெரோஸ் பாபு தன்னுடைய முக நூலில் பகிர்ந்து கொண்டதை படித்து விட்டு நான் மார்லன் பிராண்டோவை நேசிக்கத் தொடங்கி விட்டேன். காட் ஃபாதர் திரைக்கதையை படித்த பின்பு சில காட்சிகளை யுட்யூபில் பார்த்ததற்கு மேல் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. இனி அவர் திரைப்படங்களை தேடிப் பிடித்து பார்க்க வேண்டும். 

 


ஏப்ரல் 3: மார்லன் பிராண்டோ பிறந்த நாள்.

புகழின் உச்சியில் வெகுகாலம் இருந்த மார்லான் பிராண்டோ நடிகர்களை இறைவன் போல கொண்டாடுவதை வெறுத்தார். கூட்டங்கள் அவருக்கு கடுப்பைத்தந்தன. ஒரு பாராட்டு விழாவில் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு திக்கு முக்காட வைத்த பொழுது ,"கர்த்தரே ! நான் ஏன் எந்த நகரத்திற்கு வரவேண்டும் !" என்று புலம்பிய ஒரே கலைஞன் அவராகத்தான் இருக்க முடியும்

உலகம் முழுக்க தன்னுடைய படங்களுக்காக பயணம் போன பொழுது அவர் எப்படி கிழக்கு நாடுகள் பஞ்சத்தில் தோய்ந்து துன்பப்படுகின்றன என்பதை கண்டார். "இந்த நாடுகள் இப்படி வாடுவதற்கு நம்மைப்போன்ற மேற்குலக நாடுகளின் சுரண்டல் தான் காரணம். அதற்கு உகந்த அரசாங்கங்கள் அங்கே செயல் படுகின்றன !" என்று கச்சிதமாக அவர் குறித்தார்.

மார்லன் பிராண்டோவுக்கு காட் பாதர் படத்துக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்ட பொழுது அதை பெற மறுத்து லிட்டில்ஃபெதர் எனும் பெண்ணை அனுப்பி வைத்தார். அமெரிக்காவின் பூர்வகுடிகளான அமெரிக்க இந்தியர்களை திரைப்படங்களில் எதிரிகளாக,தீயவர்களாக காட்டும் போக்கை ஹாலிவுட் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய எதிர்ப்பை இவ்வாறு பதிவு செய்வதாக அவர் அறிவித்தார்.
லண்டன் நகரத்துக்கு படப்பிடிப்புக்கு போனவர் அங்கே அப்பாவி கறுப்பின மக்களை கைது செய்து வைத்திருக்கும் அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் பேரணி போவதை கண்டார். அந்த மெழுகுவர்த்தி பேரணியில் தான் ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்பதை தூக்கி கிடாசிவிட்டு கலந்து கொண்டார் அவர்.

 மார்ட்டின் லூதர் கிங் எனக்கொரு கனவு இருக்கிறது உரையை நிகழ்த்தும் பொழுது அதை கேட்க ஓடோடி வந்தவர் அவர். அவர் இறந்த பொழுது படப்பிடிப்பை எல்லாம் கேன்சல் செய்துவிட்டு மண்டியிட்டு கண்ணீர் விட்டார் அவர் !

செவ்விந்திய மக்களை எப்படி கொன்றும்,குலைத்தும் அமெரிக்கா எழுந்தது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து பதைபதைத்து போனார் 

காட்ஃபாதர் படத்தின் நடிப்புக்கு கோல்டன் க்ளோப் அறிவிக்கப்பட்ட பொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் மற்றும் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விருதை ஏற்க மறுத்தார். அதே போல இந்தியாவின் பீகாரில் நிலவிய கொடிய பஞ்சத்தை பற்றி படமெடுத்து அமெரிக்க மக்களுக்கு போட்டு காண்பித்து அவர்களுக்கு உதவ நிதி திரட்ட முயன்ற பொழுது அதற்கு பெருந்தடைகள் எழவே "அமெரிக்க மனம் இதர மக்களின் கண்ணீர் பற்றி கவலைப்படுவதே இல்லை !" என்று கோபத்தோடு பதிவு செய்தார் அவர்.


"நான் ஹாலிவுடில் இருக்க மிகப்பெரிய காரணமெல்லாம் இல்லை. எனக்கு இங்கே தரப்படும் பணம் தான் என்னை இங்கே இருக்க வைக்கிறது ! வேறொன்றும் இல்லை !" என்று ஓபனாக பேசிய ஒரே நபர் அவராகத்தான் இருக்கவேண்டும்.

"மக்கள் ஏதோ சில காரணங்களுக்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் யாரோ ஒருவரை கொண்டாடுகிறார்கள். உங்களை சந்திக்காமலே நீங்கள் அற்புதமானவர்கள் என்று நம்புவார்கள். அதே மக்கள் உங்களின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தமே இல்லாத காரணங்களுக்காக உங்களை வெறுப்பார்கள். மக்கள் தங்களுக்கான எதிரிகளை இழக்க விரும்புவதில்லை. அவர்களுக்கு பிடித்த வில்லன்கள் தேவைப்படுகிறார்கள். வெறுப்பதை காதலிக்கவும்,காதலிப்பதை வெறுக்கவும் மக்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு திட்டவும்,கொண்டாடவும் ஒரு நாயகன் எப்பொழுதும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறான்" என்று அவர் சொன்னது எத்தனை உண்மையானது !

- பூ.கொ.சரவணன் , Vikatan EMagazine

1 comment:

  1. மார்லன் பிராண்டோ பற்றி படித்துள்ளேன். தற்போது இப்பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். நன்றி.

    ReplyDelete