Monday, July 4, 2011

கல்லூரிக்குப் போன முதல் நாள்

இன்று எனது மகன் ரகுநந்தன் முதன் முதலாக கல்லூரி சென்றான். வேலூர் வி.ஐ.டி  பல்கலைக்கழகத்தில்  ஐந்தாண்டு படிப்பான எம்.எஸ் (சாஃப்ட்வேர் இன்ஜினியிரிங்)  படிப்பு. முதல் நாள் அன்று பெற்றோரும் வரவேண்டும் என்று  சொல்லியிருந்ததால்  நாங்களும் போயிருந்தோம். காலை எட்டு மணிக்கு  உள்ளே நுழைந்து  மாலை ஐந்து முப்பதிற்கு  வெளியே  வந்தோம்.  அவ்வளவு நேரம்  என்ன செய்தோம்  என்பதை நாளை சொல்கிறேன். இப்போது நான் எழுதப்போவது  எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள்  பற்றி . 


மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில்  1982  முதல் 1985  வரை பி.பி.ஏ 
படித்தேன்.  அப்போது எங்கள் குடும்பம் இருந்தது நெய்வேலியில். 
பி.பி.ஏ படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து மதுரை வந்தேன். 
அப்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மட்டுமே  பி.பி.ஏ
இருந்தது.  




கல்லூரியில்  பணம் கட்டி விட்டு பேருந்து நிறுத்தம் வரும் ஒன்றரை 
கிலோ மீட்டரும் எனது அப்பா " விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு 
கலைக் கல்லூரியில்  பி.எஸ்.சி கணிதம் படித்திருந்தால்  வருடத்திற்கு 
நூற்று முப்பது ரூபாய் கட்டினால் போதும். இப்போது நானூறு ரூபாய் 
கட்டியாச்சு, ஹாஸ்டலுக்கு வேறு செலவு" என்று  மூச்சு விடாமல் 
திட்டிக் கொண்டே வந்தார். கணக்கில்தானே  சிக்கல் என்பதை அவருக்கு 
புரிய வைக்க முயற்சிக்கவில்லை. 


கல்லூரி என்று திறக்கும் என்பதை கடிதம் மூலம் தெரிவிப்பதாக 
சொன்னார்கள். அந்த அஞ்சலட்டை கல்லூரி திறந்த மறு நாள் 
வந்தது. அதன் பின் மீண்டும் அடித்து பிடித்து மதுரை போய் 
கல்லூரி திறந்த நாள் மூன்றாம் நாள் சென்றேன். முதல் நாள் 
பேருந்தும்  சரியாக கிடைக்காமல் பதினைந்து நிமிடம் கால 
தாமதமாக  சென்றேன். பிசினெஸ் மேதமேடிக்ஸ்  என்று 
அச்சுறுத்தும்  கணிதப் பாடம்தான் நடந்து கொண்டிருந்தது. 


காண்டீன் இருக்கும், மதிய உணவை அங்கே பார்த்துக் கொள்வோம் 
என்று  உணவும் எடுத்து வரவில்லை. முதல் வருடம் ஹாஸ்டல் 
வேண்டாம், அக்காவின் மாமியார் வீட்டில் தங்கிப் படிக்கலாம் 
என்பது ஏற்பாடு. அந்த காண்டீனில் டீயையும் மசால் வடையையும் 
தவிர வேறு எதுவும் இருக்காது என்பது தெரியவில்லை. அது கூட
அப்போது இல்லை. எனவே மதுரை நகருக்குத்தான் வந்து சாப்பிட 
வேண்டும் என்று நினைத்து பஸ்  பிடித்து வந்து விட்டேன். அருகில்தான்
திருப்பரங்குன்றம் என்பது அப்போது தெரியாது. 


மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் கல்லூரி சென்று பேருந்து 
பிடிக்க நினைத்தால் இரண்டரை மணிக்குதான் வரும் என்று தெரிந்தது. 
நிச்சயம் முதல் வகுப்பு கோவிந்தா, வருகைப் பதிவும் கிடைக்காது 
என்று தெரிந்து வீடு போக முடிவு செய்தால் அருகிலேயே ஒரு 
போஸ்டர் பக்கத்து திரையரங்கில் கமல் நடித்த "குரு" ஓடுவதாக 
சொல்லியது. பள்ளிக் காலத்தில் பார்க்க முடியாத படம். எனவே 
கால்கள் கல்பனா தியேட்டருக்கு சென்றது. 


வீட்டிற்குள் நுழைந்தால் " பேரைச் சொல்லவா " என எஸ்.பி.பி யும் 
ஜானகியும் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தார்கள். என் அக்கா 
கணவரின் தம்பி வேறு "குரு பாத்துட்டியா ?" என்று கேட்க மனதில் 
கத்தி பாய்ந்தது. ஒரு வேளை  நாம் சினிமாவிற்குப் போனது 
தெரிந்து விட்டதோ என்று பயம் வேறு வந்து விட்டது.   முன்னாடியே 
பாத்தாச்சு என்று மட்டும் பதில் சொன்னேன். 


வா, ஏதாவது படத்துக்கு போகலாம். காலேஜ் முதல் நாளே சினிமா 
பார்த்தா அது ஒரு த்ரில் என்று அழைக்க, அந்த த்ரில் ஏற்கனவே 
கிடைத்து விட்டது என சொல்ல முடியாமல் அருகில் இருந்த சுந்தரம் 
தியேட்டரில் "பாபி" ஹிந்தி படம் பார்க்க போய் விட்டோம். 
அதற்கு பிறகு கல்லூரியை கட்டடித்து விட்டு திரைப்படத்திற்கு 
போகவேயில்லை. பல நாட்கள் மதியம் வகுப்பே இல்லாமல் 
போயிருக்கிறோம். அது வேறு கதை. ஆனால் கட்டடித்தது என்பது 
முதல் நாளோடு முடிந்து விட்டது.


ஆனால் என் மகனுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது போல. 
வருகைப்பதிவு  இணைய தளத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். 
பெற்றோர்கள் வீட்டிலிருந்தே கண்காணிக்கலாமாம். 

எனது கல்லூரி வாழ்வின் கடைசி நாள் புகைப்படங்கள் கீழே 




2 comments: