ராகுல் காந்தியை அவரது எதிரிகள் பல ஆண்டுகளாகவே "பப்பு" என்றுதான் அழைத்து வருகின்றார்கள்.
இத்தனை ஆண்டுகளில் அரசியல் முதிர்ச்சி பெற்றுள்ளார் என்று நினைக்கும் வண்ணம் அவரது சில மக்களவை உரைகள் அமைந்திருந்தன.
ஆனால் தேர்தல் என்று வருகின்ற போதோ, கூட்டணிகள் அமைக்கும் போதோ அவர் இன்னும் பப்புவாகவே இருக்கிறாரோ என்ற சந்தேகம் அவ்வப்போது உருவாகும்.
டெல்லி சட்டமன்ற தேர்தல், பீகார் சட்டமன்ற தேர்தல், ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெற்ற தோல்விகளுக்கு நிச்சயம் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மைதான் முக்கியமான காரணம்.
தமிழ்நாட்டில் திமுகவுடன் கூட்டணி அமைவதற்கு முன்பாக மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களை விட்டு பேச வைத்ததும் விஜயுடன் பின்புறத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்ததும் எரிச்சலை ஊட்டியது.
இதோ நேற்று கேரளாவில் பேசியது அவர் இன்னும் பப்புவாகவேதான் இருக்கிறார் என்பதை உணர்த்தியுள்ளது.
கேரளாவில் இடது முன்னணியை வீழ்த்த காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது?
சபரிமலை பிரச்சினையில் பாஜகவுடன் கரம் கோர்த்துக் கொண்டு இடதுசாரிகளுக்கு எதிராக மக்களின் உணர்வுகளை உசுப்பேற்றியது காங்கிரஸ் கட்சி.
திருச்சூர் மக்களவை தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி எம்.பி ஆக யார் காரணம்?
இடது முன்னணி 2019 ல் பெற்ற வாக்குகளை விட 2024 ல் அதிகம் பெற்றது. ஆனால் காங்கிரஸின் வாக்குகள் அப்படியே பாஜகவிற்கு மாறி சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இப்போது திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலிலும் இடது முன்னணி வாக்குகள் அதிகரித்து காங்கிரஸின் வாக்குகள் கள்ளத்தனமாக மாற்றப்பட்டு பாஜக வென்றது.
உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவருக்கும் அழைப்பில்லாத போதே புதினுக்கு வைத்த விருந்தில் கலந்து கொண்டது உங்கள் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர்தானே!
நாடாளுமன்ற மக்களவையில் மோடியை தண்ணீர் குடிக்க வைப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் என்றால் மாநிலங்களவையில் பாஜகவை அலர வைப்பது கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் ஜான் பிரிட்டாஸ்தானே!
மிகப்பெரிய வெள்ளம், வயநாடு நிலச்சரிவு போன்ற பேரழிவுகளில் மாநிலத்திற்கு நிதி ஒதுக்காமல் மோடி அரசு கழுத்தறுப்பது கேரளாவில் முதல்வராக இருப்பது தோழர் பினராயி விஜயன் என்பதால்தானே! பெரு வெள்ளம் சமயத்தில் வெளி நாடுகளிலிருந்து வர இருந்த நிதியை மோடி தடுத்தாரே, அது எதனாலே?
அந்த சமயங்களில் எல்லாம் கேரளாவிலிருந்து அதிகமான எம்.பி க்களை பெற்றிருந்த உங்கள் காங்கிரஸ் கட்சி என்ன கிழித்தது? யாராவது ஒருவராவது வாய் திறந்தீர்களா? இடது முன்னணிக்கு பிரச்சினை வர வேண்டும் என்பதுதானே உங்கள் கள்ள மவுனத்திற்கான காரணம்!
கேரளாவில் உங்கள் காங்கிரஸ் கட்சிதான் பாஜகவுடன் கள்ளத்தனமாக கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுகிறது. சசி தரூர், சதீசன் ஆகியோர் யார் கட்டளைப்படி செயல்படுகிறார்கள் என்பது கேரளா அறிந்த அதிசயம்.
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.
கூட்டணிகளுக்கு உங்கள் கட்சி உண்மையாக இருக்கிறதா? மேற்கு வங்கத்தில் இடது முன்னணியோடு காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்தது. கம்யூனிஸ்டுகளின் வாக்கு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு சென்றது. காங்கிரஸ் கட்சியினர் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தார்களா? பாரதீய ஜனதாவிற்கு வாக்களித்தார்களா?
இப்படிப்பட்ட சூழலில் மோடியின் கட்டளைப்படி தோழர் பினராயி விஜயன் செயல்படுகிறார் என்பதும் சிஜேபி என்பதும் அபத்தமானது, சிறுபிள்ளைத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது, முட்டாள்தனமானது, ஏன் அயோக்கியத்தனமானதும் கூட.
உங்களை "பப்பு" என்று சொல்லக்கூடாது என்று இத்தனை காலம் பொறுமையாக இருந்த என்னையே உங்களை பப்பு என்று சொல்ல வைத்து விட்டீர்கள்.
இந்தியாவை வழி நடத்தும் தகுதியை இழந்த நீங்கள், உங்கள் கட்சியின் தலைமையிலிருந்து விலகுங்கள். இல்லையென்றால் மகாத்மா காந்தி சொன்னது உங்கள் காலத்தில் நிகழும்.


No comments:
Post a Comment