Wednesday, April 22, 2026

ஜனநாயகம் காக்கும் ஜனநாயகக் கடமை

 எங்கள் வேலூர் கோட்டச்சங்க இதழான "சங்கச்சுடர்" தேர்தல் சிறப்பிதழிற்காக எழுதிய கட்டுரை.

இக்கட்டுரை எங்கள் சங்கத்தின் தோழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிற அனைவருக்குமானது.



ஜனநாயகம் காக்க ஜனநாயகக் கடமையாற்றுவோம்

-          வேலூர் சுரா

 

சங்கச்சுடர் தேர்தல் சிறப்பிதழிற்காக இக்கட்டுரையை எழுதத் துவங்கிய இத்தருணத்தில் புதுச்சேரியிலும் கேரளத்திலும் வாக்குப்பதிவு துவங்கியிருந்தது. கேரளத்தில் மூன்றாவது முறையாக இடது முன்னணி வெற்றி பெற்று சாதனை படைக்கும், “இந்தியா” அணிக்குள் குழப்பங்கள் ஆயிரமிருந்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக டபிள் இஞ்சின் அரசு எனும் செயலற்ற அரசு புதுச்சேரியில் வீழும் என்ற நம்பிக்கையோடு தமிழ்நாட்டில் நமது பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று சில கருத்துக்களை முன் வைக்க விழைகிறேன்.

 

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. சுவையான, சூடான, அர்த்தமிக்க மேடைகளின் களமாக திகழ்ந்திருந்த தமிழ்நாடு இத்தேர்தலில் கீழ்த்தரமான, ஆபாசமான உரைகளை கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் உரைகளே இப்போக்கிறகு சான்று.

 

நான்கு முனைப் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் சொல்கின்றன. பொய்க்கதைகள் மூலம் போலித் தமிழ்த் தேசிய உணர்வை உசுப்பேற்றி வரும் திரு சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு பொருட்படுத்தக் கூடிய அளவிற்கு வாக்குகள் இதுவரையில் விழுந்தது இல்லை என்பதால் அவர்களை போட்டியிலிருந்து நாம் விலக்கி விடலாம். ஆனால் அவர்களுக்கு விழும் வாக்குகள் என்பது குறைவாக இருந்தாலும் தவறாக வழி நட்த்தப்படுவர்கள் அளிக்கும் வாக்குகள் என்பதால் அவை ஆபத்தானவை. மக்களிடம் விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்துபவை.

 

அதே போலத்தான் நடிகர் விஜய் துவக்கியுள்ள தமிழக வெற்றிக் கழகமும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. திரை மூலம் கிடைத்த பிம்பத்தை பயன்படுத்தி அரசியலுக்கு மூலதனமாக்குகிறார். எந்த வித கொள்கைத் தெளிவும் இல்லாத்து மட்டுமல்ல பொறுப்பற்ற செயல்பாடும் இக்கட்சியின் மீது நம்பிக்கையின்மையை மட்டுமே உருவாக்கியுள்ளது. தன் ரசிகர்களை/தொண்டர்களை பல மணி நேரம் தேவையின்றி காக்க வைத்ததுதான் கரூரில் நிகழ்ந்த மிகப் பெரிய துயரமான 41 பேர் மரணத்திற்கு காரணம். அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்காமல் சதிக் கோட்பாடு தீட்டுவதெல்லாம் நேர்மையின்மையின் வெளிப்பாடு. பிரச்சாரக்கூட்டங்களை தொடர்ச்சியாக ரத்து செய்வது, மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னாலும் அதன் செயல்பாட்டைப் பற்றி சிறு விமர்சனம் கூட செய்யாமல் இருப்பது, மக்களின் எந்த பிரச்சினையைப் பற்றியும் கவலைப்படாத்து என்று ஒரு பட்டியலே இவர்களைப் பற்றி தயாரிக்க முடியும். ஒரு மிகப் பெரிய இளைஞர் பட்டாளம் இக்கட்சியின் பின்னாள் தவறாக திரண்டு வருவதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்று. இவர்களை அரசியல் படுத்தி நெறிப்படுத்துவதுதான் முற்போக்கு சக்திகள் முன்னே இருக்கிற பெரும் கடமை. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி மட்டுமே இக்கட்சியின் மீதான மாயையை தகர்க்கும்.

 

மீதமிருப்பது இரண்டு அணிகள். திமுக, இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள், தேமுதிக, காங்கிரஸ் ஆகியோர் ஒரு அணியாகவும் அதிமுக, பாஜக, பாமக, அம்முக ஆகியோர் இன்னொரு அணியாகவும் மோதுகின்றனர். சீமான், விஜய் ஆகியோர் தாங்கள்தான் முக்கிய போட்டியாளர்கள் என்று உரத்த குரலில் கூச்சலிட்டாலும் திமுக அணிக்கும் அதிமுக அணிக்கும் இடையில்தான் போட்டியே.

 

இடதுசாரிகள் இடம் பெற்றுள்ள அணியை வெற்றி பெறச் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் பாஜக இடம் பெற்றுள்ள அணியை வீழ்த்துவது. 12 ஆண்டு கால மத்திய ஆட்சி ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் சிதைத்து விட்டது. மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் கார்ப்பரேட் பாசத்திற்கு நம்முடைய எல்.ஐ.சியும் விதிவிலக்கல்ல. நம் நிறுவனத்தின் 3.5 % பங்குகள் விற்கப்பட்டது மட்டுமல்லாமல் மேலும் விற்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக திகழும் முகவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கவும் தொடர்ந்து முயல்கின்றனர். இந்திய மக்களின் சேமிப்பை வெளி நாட்டுக் கம்பெனிகள் எடுத்துக் கொண்டு ஓட வழி வகுக்கும் படி அன்னிய மூல தன வரம்பு நூறு சதவிகிதமாக உயர்த்தப் பட்டு விட்டது. எனவே ஒரு இன்சூரன்ஸ் ஊழியராக இந்த அணி தமிழ்நாட்டில் தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

 

நிறுவன நலன் என்று மட்டும் நம் பார்வையை சுருக்கி விடக்கூடாது. முன்னர் சொன்னது போல அனைத்து ஜனநாயக விழுமியங்களும் சுயேட்சையான அமைப்புக்களும் சீர்குலைக்கப் பட்டு விட்டது. பாஜக வினருக்கு ஆதரவாக வாக்களிக்காத மக்களின் வாக்குரிமையை பறிக்க SIR என்ற பெயரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு லட்சக்கணக்கானவர்களின் வாக்குரிமை பறி போய் விட்டது. வேலையின்மை பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ போன்றவை ஒன்றிய அரசின் ஏவல் படைகளாகி விட்டது. இன்றைக்கு பல நீதிபதிகள், தீர்ப்புக்கள் எழுதுவதில்லை, பணி ஓய்வுக்குப் பிந்தைய புதிய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மையோ என்று நினைக்கும் வண்ணம் பல தீர்ப்புக்கள் அரசியல் சாசனத்திற்கு முரணாக எழுதப்படுவதை நாம் பார்க்கிறோம்.

 

இந்தியாவின் சிற்ப்பான பன்முகத் தன்மையை ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்று மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மதச்சார்பின்மை என்ற மிகப் பெரும் கோட்பாட்டை அரசு அழிக்க விரும்புகிறது.  இப்பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மத உணர்வுகள் உசுப்பேற்றப்படுகின்றன. மத வெறி தூண்டப்பட்டு கலவரங்களுக்கான விதைகள் தூவப்படுகின்றன. இப்படிப்பட்ட மோசமான முயற்சிகளை அவர்கள் தமிழ்நாட்டிலும் அரங்கேற்ற தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

 

கடந்த ஐந்தாண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றது ஜி.எஸ்.டி யில் உரிய பங்கை அளிக்க மறுத்து வருகிறது. ஏற்கனவே துவக்கப்பட்ட ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு அளிக்காதது மட்டுமல்ல, மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டங்களுக்கும் அனுமதி மறுத்து விட்டது. புதிய கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை அளிப்போம் என்று மிரட்டி வருகிறது. மாநில அரசு வழங்கும் ஊக்கத் தொகையால் விளைச்சல் பெருகி வருவதால் நெல்லுக்கு ஊக்கத் தொகை வழங்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்கப் பார்க்கிறது. இந்தி திணிப்பை நிறுத்த தயாராக இல்லை. மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனை கட்டுமானம் கானல் நீராகவே நீடிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட மோசம் தமிழ்நாட்டை கலவர பூமியாக்க முயற்சித்து வருவதுதான்.

 

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்றுவோம் என்று வெளிப்படையாக அறிவித்தே இது நாள் வரை கார்த்திகை தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில்தான் ஏற்றுவோம் என்று சாதகமான ஒரு நீதிபதியின் உதவியோடு எண்ணற்ற குழப்பங்களை செய்தார்கள். அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாய் வாழும் பாரம்பரியம் கொண்ட மாநகரமாக மதுரை இருப்பதால் அவர்களின் சதி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. கூட்டணியில் பெரிய கட்சியாக இருக்கும் அதிமுக பாஜக சொல்படி கேட்கும் அடிமையாக தன்னை தக்கமைத்துக் கொண்டு விட்ட்து. அதனால் இந்த அணியை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியது தேசத்தை நேசிப்பவர்களின் ஆகப் பெரும் கடமையாகும்.

 

சரி, நம் ஆதரவு யாருக்கு?

 

துவக்கத்திலேயே சொன்னது போல இடதுசாரிகள்  இடம் பெற்றுள்ள திமுக அணியை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

 

திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டுகளை அலச வேண்டியதும் அவசியம். அந்த ஆட்சியின் பலம், பலவீனம் இரண்டையுமே உழைக்கும் மக்களின் பார்வையில் பார்த்திட வேண்டும். கல்விப்புலத்தில் மிகப் பெரிய முன்னேற்றம் இக்காலகட்டத்தில் நிகழ்ந்துள்ளது. காலை உணவுத் திட்டம் ஏழை மாணவர்களுக்கு பெரிய வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் உரிமைத் தொகை, கட்டணமில்லாத பேருந்துப் பயணம் ஆகியவை ஏழை எளிய பெண்கள் முன்னேற வழி அளித்துள்ளது. சமூக நீதியை நிலை நாட்டுவதன் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

 

ஆளுனர் மூலம் தமிழ்நாட்டினை கலவரக்காடாக மாற்ற முயற்சி செய்த போது அதற்கு வாய்ப்பு தராமல் உறுதியாக இருந்த்து பாராட்டத்தக்கது. மத உணர்வை உசுப்பேற்றுவர்கள் முயற்சி எடுபடாமல் போனது. வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தக்க் காட்சிகள் அமைக்கப்பட்ட்து, மதுரையில் சர்வதேசத் தரத்தில் நூலகம், சுயேட்சையாக செயல்பட வேண்டிய சாகித்ய அகாடமியின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட்டு விருதுகளை முடக்கிய போது, செம்மொழிகளுக்கும் தமிழ்நாட்டு அரசின் சார்பில் விருது தருவது ஆகியவை முக்கியமான முன்னெடுப்புக்களாகும். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியிலும் முன்னேற்றம் உள்ளது. ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆணையம் அமைத்துள்ளது நாம் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பணியில் முன்னணியில் உள்ள மாநிலங்களாக கேரளமும் தமிழ்நாடுமே உள்ளது. அந்த நிலைமை நீடிக்க திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

 

குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இல்லை. கார்ப்பரேட்டுகளா, தொழிலாளர்களா என்று வரும் போது பெரும் தடுமாற்றம் உள்ளது. சாம்சங் போராட்டத்தின் போது இதனை பார்த்தோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்ட்த்தை கையாண்டதும் ஒரு பெரிய நெருடல்தான்.  புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. காவல்துறையின் அராஜகங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சர்கள் ஆணவமாக பேசுவதும் மக்களிடம் எரிச்சல் ஏற்படுத்துகிறது. அடுத்து வரும் ஆட்சிக் காலத்தில் இத்தவறுகள் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்த நமக்கு எல்லா உரிமைகளும் உண்டு.

 

அந்த உரிமையை நாம் பயன்படுத்த இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்க வேண்டும். தற்போதைய ஆட்சி தொடர்ந்தால்தான் அது சாத்தியம். அதற்காக வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை முழுமையாய் பயன்படுத்துவோம். 


No comments:

Post a Comment