Wednesday, April 8, 2026

இரான் - இருளில் ஒளி

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் சிறப்பான ஒரு பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். இரான் மக்களின் மன உறுதிக்கு சான்றாக இப்பதிவு அமைந்துள்ளது.




ஈரானிய மக்கள் உலகிற்கு காட்டிய வெளிச்சம்...

அ.முத்துக்கிருஷ்ணன்
8:00 மணி என்றால் இந்தியரக்ளுக்கு பொதுவாகவே ஒரு பயம் தான், இரவு 8 மணிக்கு ஒருவர் தொலைக்காட்சியில் வரப்போகிறார் என்றாலே தொட்டியில் போட்டு தாய்மார்கள் குழந்தைகளை கூட தூங்கவைத்து விடுவந்து இந்திய வழக்கமாகவே 2014க்கு பிறகு மாறியுள்ள நிலையில் அதே போல் ஒரு 8 மணி மிரட்டலை ஈரான் நாட்டிற்கு விடுத்தார் ஒருவர்.
விளக்குகள் எல்லாம் அணைந்து விடும், நாடே இருளில் மூழ்கும், ஒரு நாகரீகமே அழிந்துவிடும் என்ற ஏக வசனங்களை தனது சமூக ஊடக பக்கத்தில் பதிந்து, உலகையே பதட்டம் கொள்ளச் செய்தார். நிச்சயம் நேற்றைய இரவு எனக்கு மட்டும் அல்ல நண்பர்கள் பலருக்குமே தூக்கமில்லா இரவு தான் ஆனால் ஈரான் மக்கள் பயத்தின் இருளுக்குள் சென்றிடவில்லை, ஒரு துளியும் பின்வாங்கவில்லை.
அவர்கள் தாங்கள் தான் ஈரான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உலகிற்கே உணர்த்தினார்கள். நேற்றைய இரவின் பொழுதில் அவர்கள் காட்டிய வீரம் என்பது வரலாற்று நிகழ்வாகவே எனக்கு படுகிறது.
இஸ்பஹானின் மூடுபனியில் இருந்து தப்ரிஸ் நகரின் தொழில்துறை பகுதிகள் வரை, வரலாறு எழுதப்பட்டது. கோடிக்கணக்கான மக்கள் மனித மதில் சுவர்களாக மாறினார்கள், தாக்குதலுக்கான இலக்குகளாக உருமாற்றம் பெற்றார்கள்,
தேஹ்ரானில், தபியத் பாலம் "நள்ளிரவு கீதத்தின்" மேடையாக மாறியது; அங்கு தார் இசையின் தாளங்களூக்கு கலைஞர்கள் நடமனாடினார்கள். உலகமே பதட்டத்தில் உறைந்து கிடக்கும் நேரம் அவர்கள் இசையும் நடனமுமாக லயித்திருந்தார்கள்.
"முழுமையான அழிவு" என்ற அச்சுறுத்தலுக்கு எதிரான பண்பாட்டு எழுச்சி. மின் நிலையங்களை ஒளிக் காட்சியகங்களாகவும், பாலங்களை மனித சங்கிலிகளாகவும் மாற்றிய மக்கள், "Power Plant Day" என்ற தாக்குதல் தர்க்கத்தை மக்கள் தைரியத்தின் ஒளியால் செயலிழக்கச் செய்தனர்.
ஈரான் முழுவதுமே எதிர்ப்பு பல்வகைமைகள் கொண்டாதாக, விரிவானதாக ஒன்றை விட ஒன்று வீரியமானதாகவே இருந்தது; ஒவ்வொரு நகரமும் தேசிய பாதுகாப்பின் ஓர் நூலாக தன்னை நெய்தது. புஷேர் நகரின் தெற்கில், மாணவர்களும் தொழிலாளர்களின் குடும்பங்களும் அணு நிலையத்துக்குச் செல்லும் சாலைகளில் பெரிய சுவரோவியங்களை வரைந்தனர்; அவை மேலே பறக்கும் விமானிகளுக்கும் செயற்கைக்கோள்களுக்கும் அமைதியின் செய்திகளை வெளிப்படுத்தின.
கெர்மான்ஷா மற்றும் அஹ்வாஸ் நகரங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி, மருத்துவமனைகளையும் வீடுகளையும் சுற்றி அரன் அமைத்தனர். தங்களின் வாழ்வாதாரத்தை உத்திரவாதப்படுத்தும் மின் நிலையங்களின் வாயில்களை விட்டு நகர மறுத்தனர்; இவை "Shields of Light/ ஒளியின் கவசங்கள்" என அழைக்கப்பட்டன. வீதிகள் எங்கும் உணவின் மணமும், கவிதை வாசித்தலின் ஓசையும் காற்றில் நிரம்பியிருந்தது.
அலி காம்சாரி மற்றும் பென்யாமின் பகதூரி போன்ற கலைஞர்கள் சாதாரண மக்களுடன் தோளோடு தோள் நின்று, "நூர் பர் தரிகி"—இருளில் ஒளி—என்ற முழக்கத்தை எழுப்பினார். மக்களின் இதயத் துடிப்பு உலகம் முழுவதிலும் கலைஞர்கள் ஒலிக்கச் செய்தார்கள்.
இந்த வரலாற்றுச் செயல்பாடு ஒரு தற்காலிக பாதுகாப்பை விட ஒரு படி மேலே சென்றது; இது அந்த மக்களின் மரபு என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. இரு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும், "நாகரிகத்தை முடிவுக்கு கொண்டுசெல்லும்" முடிவுகள் இரு வாரங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவே மக்கள் பேசிக் கொண்டார்கள்.
ஒன்றரை கோடி பேர் ஒரு இரவில் தங்களின் நாட்டை காக்க முதல் முறையாக கூடியிருக்கிறார்கள், இரவெல்லாம் இந்த வரலாற்றை நான் ஒவ்வொரு நொடியாக நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தேன். ஈரான் மக்கள் ஒன்றுகூடிய அந்த தருணம் 21ஆம் நூற்றாண்டின் மறக்க முடியாத நிகழ்வாகும். "எங்கள் பாலங்கள், எங்கள் மின் இணைப்புகள்" என்ற அவர்களின் முழக்கம், நேரடி பதிலாக அமைந்தது.
கலை மூலம் தெருக்களையும், இசை மூலம் தொடுவானத்தையும் நிரப்பிய ஈரானியர்கள், போர் இயந்திரங்களுக்கு எதிராக தங்களின் அசாத்திய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள்.
போர்களை இந்த உலகம் மறுபரீசீலனை செய்ய வேண்டும் அதுவே கலையும் கலைஞர்களும் எளிய மக்களும் இந்த உலகிற்கு விடுக்கும் செய்தி, உலகம் முழுவதும் நடைபெற்ற எல்லா போர்களிலும் எளிய மக்களும் அவர்களது உடமைகளும் அவர்களது வாழ்வாதாரமுமே முதன்மையாக பாதிக்கப்பட்டு அவர்கள் வாழ்வு தான் மிகுதியாக சிதைந்துள்ளது.
இந்த இரவு என் வாழ்வின் மகத்தான இரவும் கூட.... மறக்க முடியாத இரவும் கூட....

No comments:

Post a Comment