Friday, May 10, 2024

கடவுளென்று நினைத்த கழுதையும் . . .

 எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீராவின் கவிதையை சுட்டு பகிர்ந்து கொண்டுள்ளேன்.  56 இஞ்ச் கழுதை மட்டுமல்ல, இன்னும் பல கழுதைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்,




தன்னைக் கடவுளென்றே
நம்பிக்கொண்டிருந்த
கழுதையொன்று
வீழ்ச்சியின் விளிம்பில்

ஊளையிடுகிறது..

பாம்பாட்டியின் தேசத்தில்
பல் பிடுங்கப்பட்ட பாம்புகள்
மகுடிகளை விழுங்கத்

தயாராகி விட்டன..
தன் அடிபட்ட காயத்தை
நக்கிக்கொண்டிருந்த
தெரு நாயின் வாயில்

ஐம்பத்தாறு பற்கள்..

உயிர்பிரியும் வலியில்
எஜமானர்களைக்
கடிக்கப்பாய்கிறது

வளர்ப்புப் பிராணி..

ராஜவேஷம் கலைவதை
காலக் கண்ணாடியில்
பார்த்துக்கொண்டிருக்கிறது

கிழட்டு நரி..

சாத்தானின் தோல்வி
முன்னறிவிக்கப்பட்டபோது
சூனியக்காரி ஒருத்தி

கல்லறையில் புரண்டு படுத்தாள்..

நல்லகாலம் பொறக்குது
நல்லகாலம் பொறக்குது
குடுகுடுப்பைக்காரன் குரல்

காடெங்கும் ஒலித்தது.
ஆமென்..!!






No comments:

Post a Comment