Thursday, April 23, 2015

அர்த்தமுள்ள கேள்விகளும் அரசின் கள்ள மவுனமும்



 http://www.thehindu.com/multimedia/dynamic/02235/06vzskp1-Tax-so__0_2235668e.jpg

இன்சூரன்ஸ் மசோதா மீது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் தோழர் தபன் குமார் சென் (பொதுச்செயலாளர், சி..டி.யு) பேசியதன் தமிழாக்கம் கீழே உள்ளது. 


 பல முக்கியமான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். ஆழமான பல கருத்துக்களையும் அவர் முன்வைத்துள்ளார். கொடுமை என்னவென்றால்  அவர்    எழுப்பிய  எந்த ஒரு கேள்விக்கும்  மத்தியரசு  பதில் சொல்லவில்லை. நியாயமான பதில் எதுவும் கிடையாது  என்பதுதான் உண்மை. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வால் பிடிப்பதற்காக தேசத்தின் நலனை புறக்கணித்து விட்டு யோக்கியர்கள் போல பேசுவதுதான் மோடி அரசின் வாடிக்கை. இந்த கருத்துக்களைச் சொல்வதற்கான நேரத்தைப் பெறுவதற்குக் கூட அவர் எப்படியெல்லாம் மன்றாட வேண்டியிருந்தது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.



தோழர் தபன் குமார் சென் : மரியாதைக்குரிய துணைத் தலைவர் அவர்களே, என் கருத்துக்களைச் சொல்வதற்கான போதிய நேரத்தை வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதாவை முழுமையாக எதிர்ப்பதற்காக நான் எழுந்துள்ளேன். இதனை இந்த அவை நிராகரிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். இந்த மசோதா ஒவ்வொரு மட்டத்திலும் தேசத்தின் அடிப்படை நலன்களை  பாதிக்கும். அதிக இன்சூரன்ஸ் ஊடுறுவல், அதிகமான மக்களுக்கு மருத்துவக் காப்பீடு, இத்யாதி இத்யாதி எல்லாம் நிகழ்வதுதான் இந்த மசோதாவின் நோக்கம் என்று மசோதாவை அறிமுகம் செய்கிற போது மாண்புமிகு நிதியமைச்சர் கூறினார்.

இந்த மசோதாவின் நோக்கம், இலக்கு பற்றியெல்லாம் நான் வேறு ஒரு விளக்கம் வைத்துள்ளேன். அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்துவது, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்குவது ஆகியவைதான் இந்த மசோதாவின் நோக்கம். இந்த இரண்டு குறிக்கோள்களோடுதான் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டு நலனுக்கு எதிராக வேறு பல அம்சங்களும் இந்த மசோதாவில் உள்ளது.

முதலில் அன்னிய நேரடி மூலதன வரம்பை உயர்த்தும் பிரச்சினையைப் பார்ப்போம். அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதன் மூலம் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் அன்னியக் கூட்டாளியின் நிலையை வலுப்படுத்துகிறீர்கள். யாரந்த கம்பெனிகள்? யார் இங்கே வரப் போகின்றனர்?  அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருக்கிற பெரும்பான்மையான பகாசுர நிறுவனங்கள் இங்கே ஏற்கனவே இந்திய தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு இந்திய மண்ணில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் அனுமதிக்கப்பட்ட பின்பு இந்தியாவில் காப்பீட்டை பரவலாக்க அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? இன்சூரன்ஸ் ஊடுறுவலில் அவர்களின் பங்களிப்பு என்ன?

ராம்கோபால்ஜி மிகச் சரியாக சுட்டிக்காட்டினார். அன்னிய மூலதனம் அதிகரிக்க அதிகரிக்க, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் ஆதிக்கம் வளர, வளர இன்சூரன்ஸ் ஊடுறுவல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. ஏனென்றால் அன்னியக் கூட்டாளிகளோடு செயல்படும் இந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளெல்லாம் அடிப்படையில் மாநகரப் பகுதிகளில் மட்டுமே செயல்படுகின்றன. சமூகத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்குகின்றன. இவர்கள் நகரங்களுக்கோ இல்லை கிராமங்களுக்கோ ஏழை மக்களுக்கு காப்பீடு வழங்க செல்வது கிடையாது. இதுதான் யதார்த்தம். அப்படியே ஓரிரு இடங்களுக்கு பயிர்க் காப்பீடு போன்றவற்றை வழங்க போயிருந்தாலும் அங்கே ஊழலும் மோசடியும்தான் நடந்திருக்கிறது. இது நிதியமைச்சக ஆவணங்களிலேயே இருக்கிறது. நாங்கள் பிரச்சினையை கையிலெடுத்ததால் அவர்களால் ஊழல்களை மூடி மறைக்க முடியவில்லை. கடிதங்கள் மேல் கடிதங்கள் அனுப்பியதால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கான பிரிமியமாக அரசு கஜானாவிலிருந்து அள்ளிக் கொடுக்கப்பட்ட நிதியை திரும்பிப் பெற வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக பெற்ற பணத்தை அவர்கள் திருப்பித் தர வேண்டியிருந்தது. ஏழை மக்களின் காப்பீட்டிற்காக அவர்கள் எங்கெங்கு நுழைந்தார்களோ அங்கேயெல்லாம் ஊழல்கள் மட்டுமே நிகழ்ந்தது. உங்களது அன்னிய மூலதனம் அதிகரிக்கும்போதெல்லாம் உங்களின் இன்சூரன்ஸ் ஊடுறுவல் குறைந்து போகிறது என்பதை இது விளக்குகிறது. முன்பு அது 5 %   தற்போது 3.1% ஆக உள்ளது. 49 %  த்தில் இது கண்டிப்பாக ஒரு சதவிகிதத்திற்கும் கீழே செல்லும். இதுதான் இன்சூரன்ஸ் ஊடுறுவலின் கதை. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பால்தான் இன்று இன்சூரன்ஸ் ஊடுறுவல் இந்தியாவில் 3.1% ஆக உள்ளது. 3.1%  இன்சூரன்ஸ் ஊடுறுவல் உள்ள அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலைமை நன்றாகவே உள்ளது.

நூறு சதவிகித அன்னிய மூலதனம் உள்ள அமெரிக்காவிலும் என் நண்பர் சந்தன் மித்ரா சொன்னது போல இன்சூரன்ஸ் ஊடுறுவல் 3.1 % ஆக உள்ளது. இந்தியாவிலோ இன்சூரன்ஸ் ஊடுறுவல் 3.17 %  ஆக உள்ளது. இப்படி இருக்கையில் ஏன் இந்த சோதனை? இன்சூரன்ஸ் வணிகத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் மூலதனம் அவசியமில்லை. இன்சூரன்ஸ் வணிகத்தின் மூலதனம் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பிரிமியம் மற்றும் பிரிமியத்தோடு இணைந்த சேமிப்புதான்

(மணி ஒலிக்கிறது)

துணைத்தலைவர் (திரு வி.பி.பத்னோர்) : இன்னும் இரண்டு நிமிடங்கள்

தோழர் தபன் குமார் சென் : இல்லையில்லை. நான் எனது வாதங்களை முழுமையாகச் சொல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நான் இங்கேயே உட்கார்ந்திடுவேன்

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் : கூடுதலாக இன்னும் எத்தனை நிமிடங்கள் உங்களுக்கு தேவைப்படுகிறத்?

தோழர் தபன் குமார் சென்: நான் என் கருத்துக்கள் அனைத்தையும் சொல்லி முடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.

தோழர் டி.கே.ரங்கராஜன் (சி.பி.(எம்): எதிர்கட்சிகளின் கருத்துக்களையும் அரசாங்கம் கேட்கட்டும்.

துணைத்தலைவர்: சரி, உங்களுக்கு நான்கு நிமிடங்கள் தரப்பட்டது. இரட்டிப்பு நேரம் தருகிறேன். அதற்கு மேல் கிடையாது.

தோழர் தபன் குமார் சென் : இல்லை ஐயா, நான் எனது கருத்துக்களை முழுமையாக சொல்ல வேண்டும்.

துணைத்தலைவர் : தயவு செய்து தொடருங்கள், தொடருங்கள்..

>>> இடையூறுகள்>>>

தோழர் தபன் குமார் சென் : இரண்டு நிமிடங்கள் போய் விட்டது.

துணைத்தலைவர்: நான் என்ன செய்ய முடியும்? விதிகளின் படி இயலாது.

தோழர் தபன் குமார் சென் : ஐயா, என்னுடைய இரண்டாவது வாதம் என்னவென்றால் யார் இவர்கள்? இவர்கள் எல்லோரும் தங்கள் நாடுகளில் திவாலானவர்கள். அத்தனை பேரும் தங்கள் நாட்டில் திவாலானவர்கள், அந்த நாட்டு அரசாங்கங்கள் தனது கஜானாவிலிருந்து அளித்த மீட்பு நிதியால் உயிர் பிழைத்தவர்கள். இப்போது 49 % உயர்வின் மூலம் ஏழை இந்திய அரசாங்கம் தனது கஜானாவிலிருந்து அவர்களுக்கு கூடுதல் மீட்பு நிதி அளிக்கிறது. திவாலான கம்பெனிகளுக்கு இந்திய அரசு அளிக்கும் கூடுதல் மீட்பு நிதி என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

எனவே அவர்கள் இங்கு வருவார்கள், இந்திய மக்களின் சேமிப்பை இன்சூரன்ஸ் என்ற பெயரில் வசூலிப்பார்கள். தங்கள் சொந்த தொழிலைப் பார்ப்பார்கள். இந்திய நுகர்வோரை பாதித்து நீங்கள் அவர்களுக்கு கூடுதல் மீட்பு நிதி அளிக்கிறீர்கள். இது தேசத்தின் நலனுக்கு எதிரானது. இதற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? ஒரு நிறுவனத்தின் நிகர மதிப்பைக் கணக்கிட இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்தின் மதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்ற ஷரத்து இருந்தது. பாதுகாப்பு கருதி முந்தைய சட்டத்தில் கொண்டு வரப்பட்ட ஷரத்து அது. அதைக் கூட நீக்கி விட்டார்கள்

(மணி ஒலிக்கிறது)

ஐயா, அன்னிய நலன்களுக்கு  அடிபணிவது என்பது ஒரு தேச விரோத அம்சத்தை மசோதாவில் இணைக்கிற அளவிற்கு சென்றுள்ளது. ஒரு வெளிநாட்டுக் கம்பெனியின் நிகர மதிப்பைக் கணக்கிட இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்படும் என்ற ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்த கம்பெனி திவாலாகிப் போனால் வெளிநாட்டில் உள்ள அந்த சொத்தை நீங்கள் தொடக்கூட முடியாது. முன்பு இருந்த ஷரத்தை, கட்டுப்பாட்டை நீங்கள் வேண்டுமென்றே நீக்கியுள்ளீர்கள். இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களையும் கணக்கிட அனுமதிக்கிறீர்கள். ஐயா, இதன் மூலம் நமக்கு என்ன பலன் கிடைக்கும்? தேசத்திற்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

இந்த மசோதாவில் உள்ள இரண்டாவது அம்சம், நீங்கள் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கதவுகளை தனியாருக்கு திறந்து விடப் பார்க்கிறீர்கள். நிதியாதாரங்களை திரட்டுவது என்ற பெயரில் பங்கு விற்பனையை கொண்டு வருகிறீர்கள்.

(மணி ஒலிக்கிறது)

உங்கள் இருக்கைக்கான அனைத்து மரியாதைகளோடும் கேட்கிறேன். தயவு செய்து என்னை தொடர்ந்து பேச அனுமதியுங்கள்.

தோழர் பி.ராஜீவ் (சி.பி.(எம்) : ஐயா, காலையில் ஒரு உடன்பாடு உருவாகியிருந்தது. நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சரும் இங்கேதான் இருக்கிறார்.

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் : உங்களுக்கு நான்கு நிமிடம் ஒதுக்கப்பட்டது. நான் உங்களுக்கு இரட்டிப்பு நேரம் கொடுத்துள்ளேன். இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியாது.

தோழர் பி.ராஜீவ் (சி.பி.(எம்):  ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அமைச்சர் இங்கே உள்ளார்.

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் : உங்களுக்கு நான் இரட்டிப்பு நேரம் கொடுத்துள்ளேன்.

தோழர் தபன் குமார் சென்: மூன்றாவதாக, நீங்கள் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனையை அனுமதிக்க உள்ளீர்கள். அதில் பிரச்சினை

>>> இடையூறுகள்>>>

துணைத்தலைவர் : மிகவும் நன்றி

>>> இடையூறுகள்>>>

இன்னும் இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்

>>> இடையூறுகள்>>>

ஆனால் இது முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க முடியாது, முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்க முடியாது

தோழர் தபன் குமார் சென் : நீங்கள் ஜி..சி யின் பங்குகளை விற்கப் போகிறீர்கள். அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறதா? இதில் என்ன தர்க்கம் இருக்கிறது? சந்தையிலிருந்து நிதியாதாரத்தைத் திரட்ட அவர்கள் பங்குகளை விற்க வேண்டுமாம். சந்தையிலிருந்து நிதியைத் திரட்ட எத்தனையோ வழிகள் இருக்கிற போது ஏன் பங்குகளை விற்க வேண்டும். ஏனென்றால் தனியார் முதலாளிகள் அவர்களது நிர்வாகத்தில் வந்து அமர்ந்து கொண்டு அவர்களின் வெற்றிகரமான செயல்பாட்டை முடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே, தயவு செய்து ஜி..சி யின் நிதி நிலைமை என்ன என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வசம் உள்ள பெருத்த நிதியாதாரம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். சந்தையில் அவர்களுக்கு உள்ள நம்பகத்தன்மை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிதி நிறுவனங்களிடம் அவர்களுக்குள்ள நம்பகத்தன்மை பற்றி புரிந்து கொள்ளுங்கள். சொல்லப் போனால் நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே நம்பகத்தன்மை உடையதாகத்தான் உள்ளது.அவர்களின் கடனுக்கும் மூலதனத்திற்கான விகிதம் என்பது 5.5% அல்லது 5.7 % க்கு குறைவாகவேதான் உள்ளது.

பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நம்பகத்தன்மை என்பது அது கடன் சந்தையாக இருந்தாலும் சரி இல்லை வங்கிச் சந்தையாக இருந்தாலும் சரி, சிறப்பாகவே உள்ளது. அவர்களுக்கு நிதியாதாரத்தில் எந்த குறையும் கிடையாது. அப்படியே தேவையென்றாலும் அவர்களால் சந்தையிலிருந்து திரட்ட முடியும். அதற்காக அவர்கள் பங்குகளை விற்கவோ இல்லை தங்களின் நிர்வாக உரிமைகளை விட்டுத்தரவோ அவசியமில்லை. தனியார்மயத்திற்கு கதவுகளை திறக்கவே நீங்கள் இதைச் செய்கிறீர்கள். இதுதான் உங்களின் அடிப்படைத் தத்துவம். அடுத்தபடியாக திறமை என்பதைப் பற்றி..

துணைத்தலைவர் : நன்றி. நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் என்னால் உதவ முடியாது. நீங்கள் நிறைவு செய்தாக வேண்டும்.

தோழர் தபன் குமார் சென் : ஐயா, நான் உட்கார தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள்தான் நான் பேசலாம் என்று சொன்னீர்கள். அதனால்தான் நான் என் உரையை தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

துணைத்தலைவர் : சரி இன்னும் அரை நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்

தோழர் தபன் குமார் சென் : ஐயா, திறமை என்ற கேள்விக்கு வந்தால், அன்னியக் கூட்டாளிகளுடனான நமது தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை திறமையான செயல்பாட்டிற்கு எங்காவது ஒப்பிட முடியுமா? ..ஜி, ஃபோர்டிஸ் ஆகிய நிறுவனங்கள் எல்லாம் நம் நாட்டில் செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டை ஒப்பிட்டுப் பாருங்கள். எல்..சி யால் நிராகரிக்கப்பட்ட கேட்புரிமங்கள் வெறும் 1 %.   ஆனால் அனைத்து தனியார் கம்பெனிகளிலும் நிராகரிக்கப்பட்டவை 20 % முதல் 33 % வரை உள்ளது. அவர்களுடைய காலாவதியான பாலிசிகளின் சதவிகிதம் 47%.  பாலிசிகள் காலாவதியாகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன? வேகமான வணிக உத்திகள் மூலம், போன்சி ( Ponzi) என்றழைக்கப்படுகிற சங்கிலித் தொடர் மூலம் பணத்தை வசூலிக்கின்றனர். பெரும்பாலான தனியார் காப்பீட்டுக் கம்பெனிகளில் 60 % க்கும் மேற்பட்ட வணிகம் போன்சிக்கள் மூலம்தான் வருகின்றது. அவர்களின் வணிக உத்திகள் காரணமாக மக்கள் பாலிசிகள் எடுக்கின்றனர். அதற்குப் பிறகு தொடர்ந்து பணம் செலுத்த முடியாமல் அவை காலாவதியாகிப் போய்விடுகிறது. அவர்கள் முதலில் செலுத்திய பணம் முழுதும் தனியார் கம்பெனிகளில் கல்லாப்பெட்டிகளுக்குப் போய்விடுகிறது.

இதுதான் நாம் முன்னிறுத்துகிற “திறமையான செயல்பாடு”. இதனை “மேலும் திறம்பட” செய்வதற்காக அவர்கள் அன்னிய முதலீட்டாளர்களை வரவேற்று ஒட்டுமொத்த இன்சூரன்ஸ் துறையையும் தனியார்மயமாக்க முயற்சிக்கின்றனர்.  ஐயா, இது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. நிதிப் பொருளாதாரத்திற்கு ஏற்றதல்ல. இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் அரசை வற்புறுத்துகிறேன். எல்..சி சேர்மனின் அறிக்கையோடு குழப்பிக் கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்.

9, மார்ச், 2015 அன்று எல்..சி, ஜி..சி யில் உள்ள இடதுசாரி, வலதுசாரி, ஏன் உங்களது சங்கம் உட்பட  என்று அனைத்து தொழிற்சங்கங்களையும் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இம்மசோதாவிற்கான தங்கள் எதிர்ப்பை 100 % வேலை நிறுத்தம் மூலமாக தெரிவித்துள்ளனர். நீங்கள் மசோதாவை வேண்டுமானால் நிறைவேற்றலாம். ஆனால் அதன் பின்பு அமலாக்கும் வேளையில் பணியிடங்களில் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒரு தொழிற்சங்கவாதியாக நான் அரசிற்கு இந்த எச்சரிக்கையை விடுக்க வேண்டியுள்ளது – தயவு செய்து அத்திசை வழியில் செல்லாதீர்கள். மசோதாவை கைவிடுங்கள், திரும்பப் பெறுங்கள் என்று நான் அரசை வற்புறுத்துகிறேன். இந்த வேண்டுகோளோடு என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி.     

2 comments:

  1. These dogs are running for biscuits....we cannot do anything. Seshan

    ReplyDelete
  2. Good Questons. But what to do? No Replies. All Our fate

    ReplyDelete