Thursday, April 18, 2024

எரியும் மண் - களத்திலிருந்து நேரடியாக

 எங்கள் கோட்டச் சங்க இதழான "சங்கச்சுடர்" ஏப்ரல் தேர்தல் சிறப்பிதழிற்காக எழுதிய நூல் அறிமுகத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சத்யபிரதா சாஹூ சார், இது நூல் அறிமுகம்தான். தேர்தல் பிரச்சாரம் கிடையாது. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.


நூல்  அறிமுகம்

 

நூல்                                  : எரியும் மண் – மணிப்பூர்

ஆசிரியர்                       : கிர்த்திகா தரன்

வெளியீடு                      : நக்கீரன் பதிப்பகம்,

                                           சென்னை 14

விலை                            : ரூபாய் 75.00

 

பெரும்பான்மை இனமான மெய்தி இனத்தவரால் தாக்குதலுக்கு உள்ளான குக்கி இன மக்களின் துயரங்களை நிகழ்ந்த இடம் மணிப்பூர். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பின்பும் இந்தியப் பிரதமர் அங்கே செல்லவில்லை. வாரம் இரு முறை தமிழ்நாட்டிற்கு வருகின்ற மோடி தேர்தலில் வாக்கு கேட்கக் கூட செல்லவில்லை. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கிர்த்திகா தரன், மணிப்பூருக்கு நேரடியாக சென்று அம்மக்கள் மத்தியில் உரையாடி கவுன்சிலிங் அளித்து தன் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அம்மக்களின் வலியை உணர்ந்து கொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.

 

நூலிலிருந்து சில பகுதிகள்

 

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்ல ப்ளைட் வசதி உண்டு. ஆனால் இம்பாலில் இருந்து குக்கிகள் வாழும் பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி தர மாட்டார்கள் என்பதால் நாகாலாந்து சென்று அங்கிருந்து சேனாபதி வழியாக காங்போக்பி மாவட்டத்திற்கு வந்தோம்.

*********

அங்கே கேஸ் அடுப்பு இருந்தாலும் சிலிண்டர் ப்ளாக்கில்தான் கிடைத்தது. எல்லோராலும் வாங்க முடியாது என்பதால் விறகுகளைக் கொண்டுதான் சமையல்.

 

ஒரு சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி அந்த பெண்மணி. எனது அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்ட கவலை ஒரு புறம், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான அண்ணி பற்றிய கவலை. பத்திரமான இடம் நோக்கி செல்கிற போதே கலவரக்காரர்கள் வந்து விட்டார்கள். இடிபாடுகளுக்குள் பதுங்கி அமர்ந்துள்ளார். இரவில் சிறு சத்தம் கூட பெரிய கலக்கத்தை அளித்துள்ளது.

*****

இம்பாலுக்கு அருகே உள்ள கிராமத்தை மே 3 ம் தேதி சூறையாடத் தொடங்கினார்கள். ஒரு பொருளைக் கூட விட்டு வைக்கவில்லை. கணவர் கலவரத்தில் இறந்து போனார். கணவரின் உடலோடு இருக்க நினைத்தேன். ஆனால் நிலைமையைப் பார்த்ததும் ஊர்க்காரர்களோடு ஓடி வந்து விட்டேன். என் கணவருக்கு இன்று வரை இறுதிச்சடங்கு நடக்கவில்லை.

*****

இன்னொரு இளம்பெண், தன் கிராமம் எரியூட்டப்பட்டதால் ஒரு வாரம் மலையில் நீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்ததைச் சொன்னார். மற்றொரு பெண்ணோ அழுது கொண்டே இருந்தார். அவரால் ஏதும் பேசவே முடியவில்லை.

******

முகாமில் மெண்டல் ஹெல்த் கேம்ப் நடத்தினோம். என்னுடன் வந்த மன நல மருத்துவர் அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். “தூங்க முடியாதவங்க இங்க வாங்க” என் நான் சொல்ல பலர் வந்து விட்டனர். ஒவ்வொருவரும் கண் மூடி பல நாட்கள் ஆனது என்றார்கள்.

*******

பக்கத்திலிருக்கும் முகாமிற்கு சென்றோம். அது பழைய இடிந்த சர்ச். பெரிய ஜன்னல்களை திரை போட்டு மறைத்திருந்தனர். ஒரே ஹாலில் பலர் இருப்பதால் ஸ்காபிஸ், வைரஸ் அவுட்பிரேக் இரண்டும் தொடங்கியிருந்தது.

*******

சமீப காலங்களில் அரசு பட்ஜெட்டில் மலைப்பகுதிகளுக்காக மிகக் குறைந்த தொகையை  ஒதுக்கியுள்ளது அதாவது 3000 கோடி ரூபாய் சமதளப் பகுதிக்கு என்றால் 200 கோடி ரூபாயை மலைப்பகுதிக்கு ஒதுக்குவார்கள். பிறகெப்படி சாலையை செப்பனிடுவது? வளர்ச்சியை கொண்டு வருவது?

*****

பல பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிகளின் நிலையும் மாணவர்களின் கல்வியும் என்ன ஆகும்?

******

மலை உச்சிக்கு சென்ற போது அங்கே வயதான ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. மிகத் தள்ளாத வயது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்ட பொது மலை தாண்டி மேத்தி எல்லையில் கிராமம் இருக்கிறது. அங்கு எப்பொழுதும் தாக்குதல் அபாயம் உண்டு. வயல், காடுகள் அங்கிருந்ததால் இத்தனை நாள் காலி செய்ய யோசித்துள்ளனர். இப்போது அவர்களும் தங்க முடியாத நிலை.

*******

கலவரக்காரர்கள் கிராமத்தை எப்படி அழித்திருந்தார்கள் என்றால் செங்கல் குவியல்கள் மட்டுமே இருக்கும் இடமாக அந்த கிராமத்தை மாற்றியிருந்தனர். பெட்ரோலை கேன் கேனாக எடுத்துக் கொண்டு ஊற்றினால்தான் இது சாத்தியம். ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதத்தோடு வந்து அழித்திருப்பது புரிந்தது.

******

ஒருவர் ஐந்து மலைகளைக் கடந்து வந்ததாக தெரிவித்தார். என் கணவரை, பிள்ளைகளைக் கொன்றார்கள். வாய் பேசாத ஆடு, மாடுகள் என்ன பாவம் செய்தன? அதை உயிரோடு கொளுத்த எப்படி மனம் வந்தது “ என்றார் மற்றொருவர்.

******

மருத்துவமனை என்பதால் எங்களை தாக்க மாட்டார்கள் என்று நினைத்து அலட்சியமாக இருந்து விட்டே. ஆனால் எங்கள் போன் நம்பர்கள் மூலம் நாங்கள் கண்காணிக்கப்பட்டு எங்கள் வீடுகள் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.

*********

இதை எழுதும் போது மணிப்பூரில் கடும் ஆயுதங்கள் தாங்கிய ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர்களை விடுவிக்கக் கோரி மீரா போய்பா அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் போராட்டத்தில்  குதித்துள்ளனர். மீரா போய்பா எனில் தீவட்டி ஏந்திய பெண்கள் என்று அர்த்தம். ராணுவம் பெண்கள் மீது நிகழ்த்தும் அட்டகாசங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1077 ல் உருவாக்கப் பட்ட அமைப்பு. அது இன்று திசை மாறி விட்டது.

*****

டாக்டர் சாங்க்லாய் அவர்களைச் சந்தித்தேன். 13 வாகனங்கள், மூன்று அடுக்கு கட்டடம், மேலே அலுவலகம், கீழே வீடு, சர்ச் வளாகம் என வசதியாக வாழ்ந்தவர். இக்கலவரம் அவரையும் வீதிக்குக் கொண்டு வந்து விட்டது. கலவரம் நடந்த போது கூட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை பாதுகாக்கலாம் என்று பார்த்தேன். கூட்டம் நெருங்க நெருங்க எதற்கும் அட்ங்காத கூட்டம் என்று தெரிய ஆரம்பித்தது. தப்பிப்பதற்குள் பல விஷயங்கள் நடந்து விட்டது. சில சர்ச்சுகளில் பெண்கள் பிரேயர் செய்யும் நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதை மெல்லிய குரலில் சொன்னார். முட்டி போட்ட நிலையில் பெண்கள் இறந்திருப்பதைப் பார்த்து மனம் உடைந்ததாக தெரிவித்தார்.

*****

இம்பால் பகுதியிலிருக்கும் சர்ச்சுகளை இடித்து நொறுக்கியுள்ளனர். இன்று பள்ளத்தாக்கு பகுதியில் ஒரேயொரு தேவாலயம் கூட இருக்க வாய்ப்பில்லை.

*****

ஒரு மணி நேரப்பயணத்தின் போது அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சம்பவத்தை சொன்னார். குக்கி பெண்ணொருவர் தப்பித்து மீரா போபாய் அமைப்பிடம் வந்து சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணை அவர்கள் குண்டர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மலை உச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

******

இன்று குக்கி மெய்தி இன மக்களை ஒன்று படுத்த காந்திஜி போன்றொரு தலைவர் தேவைப்படுகிறார். ஆனால் கலவரத்தைத் தூண்டுபவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.

******

போகும் வழியில் ஒரு கட்டடம் பார்த்தேன். பலத்த பாதுகாப்பு,  வாச் டவர் எல்லாம் இருந்தது. பாஜகவின் கட்சி அலுவலகம். மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் அலுவலகத்திற்கு கச்சிதமான பாதுகாப்பு.

******

மணிப்பூர் பற்றி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடும் போது சத்தமில்லாமல் ஒரு பில் பாஸானது. அது மைனிங் எனப்படும் சுரங்கத்துறை பில். இதுவரை அட்டாமிக் மினரல் எனப்படும் அணுசக்தித் துறையில் உபயோகப்படும் கனிமச்சுரங்கங்கள் தனியார் துறைக்கு தரப்படவில்லை. அணுசக்தி தயாரிக்கப்படும் கனிம்ங்களை தனியார்வ்சம் கொடுப்பதற்கான மசோதா அது.அதாவது மணிப்பூர் சிக்கல்களை பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஊருக்கு இன்னொரு சிக்கலை கொடுக்கும் மசோதாவை சத்தமில்லாமல் நிறைவேற்றும் அரசை என்னவென்று சொல்வது?

*****

மணிப்பூர் சிக்கலை அரசு ஒரு சில நாட்களில் தீர்க்க முடியும். ஏன் தீர்க்காமல் வைத்திருக்கிறது? அவர்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பழங்குடியினர் முழுதும் வெளியேறாதவரை இந்த சிக்கலை தீர்க்காது என்றே நினைக்கிறேன்.

*****

மணிப்பூரை நான் ஒரு மாடலாகத்தான் கவனித்தேன். அப்பாவி மக்களை அரசியலுக்கான கருவியாக மாற்றி இன்னொரு இனத்துக்கான எதிரியாக மாற்றி விட முடியும் என்பதை மணிப்பூர் நிரூபித்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுமைக்கும் பரவினால் அதன் விளைவுகளையும் அழிவுகளையும் தாங்க முடியாது.

 

மேலே உள்ளதெல்லாம் பொது வெளியிலோ சமூக ஊடகங்களிலோ நாம் அறியாத தகவல்கள்.  படிக்கும் போதே நெஞ்சம் கலங்குகிறது. இக்கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை பல சம்பவங்கள் மூலம் நூலாசிரியர் உணர்த்துகிறார். நூலின் அட்டைப்படமும் உள்ளே இருக்கும் புகைப்படங்களும் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

 

கலவரத்துக்கான பின்னணி என்ன என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்தது என்பதையும் அம்பலப்படுத்துவதாக நூல் அமைந்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுதும் பரவினால் என்ன ஆகும் என்ற கேள்வியை ஆசிரியர் கேட்கிறார்.

 

குஜராத் மாடல்தான் மணிப்பூரிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்திடக் கூடாது. இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்ட தயங்க மாட்டார்கள். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் உணர்த்தும். வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களை கண்டிப்பாக நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும்….

 

இந்தியப் பிரதமரே செல்லாத மணிப்பூருக்கு உயிரை பணயம் வைத்து சென்று தன் அனுபவங்களை இந்நூல் மூலமாக ஆவணமாக்கிய திருமதி கிர்த்திகா தரன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 

No comments:

Post a Comment