Sunday, February 5, 2017

இனி என்ட ஸ்டேட்டு





1994 ம் வருடம் அகமதாபாத்தில் எங்களது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாள் பேரணியின்போது வேட்டி கட்டிக் கொள்வது என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் பேரணிக்கு முதல் நாள் சாமியார்கள் ஏதோ ஊர்வலம் போய் கலவரம் வெடித்ததால் பேரணி ரத்து செய்யப்பட்டு விட்டது. மாநாடு முடிந்து இரண்டு நாட்கள் கழித்துதான் எங்களுக்கு ரயில். காந்திநகரில் சில மாதங்கள் முன்பாக திறக்கப்பட்ட அக்ஷ்ர்தம் கோயில் சிறப்பாக உள்ளது. பார்க்க நன்றாக இருக்கும் என்று கூறியதால் நான் தோழர் ஆர்.பி.எஸ் என்ற மூத்த தோழர் (இப்போது மறைந்து விட்டார்) அண்ணாதுரை என்ற தோழர் (இப்போது அதிகாரியாக உள்ளார்) மூவரும் போனோம்.

முதல் நாள் கட்டிக் கொள்ள முடியாத வேட்டியை அன்று கட்டிக்கொண்டு போனோம். அக்ஷ்ர்தம் வாசலில் டிக்கெட் கவுண்டர் திறப்பதற்காக காத்திருந்த போது ஒரு பெண்மணி எங்களை நோக்கி வேகமாக வந்தார்.

நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்களா என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

ஆம் என்றதும்

ஜெயலலிதாவைப் போய் முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று சொல்லி விட்டு போய்க் கொண்டே இருந்து விட்டார். தோழர் ஆர்.பி.எஸ்ஸிடம் சொன்னேன். நீங்கள் பாண்டிச்சேரி. அதனால் இந்த திட்டு உங்களுக்கு பொருந்தாது. அந்த சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை.

ஜெயலலிதாவிற்கே இப்படி என்றால், சசிகலாவிற்கு என்ன சொல்வார்க்ள்?

(மோடியை இந்தியாவும் ட்ரம்பை அமெரிக்காவும் சர்கோஸியை பிரான்சும் தேர்ந்தெடுத்த கொடுமையெல்லாம் இருக்கிறது என்றாலும்)

நல்ல வேளை, எங்களின் அகில இந்திய மாநாடு முடிந்து விட்டது. அப்போது பேசிக்கொண்ட வெளி மாநிலத் தோழர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக தமிழ்நாட்டு மக்களை பாராட்டினார்கள். உடனடியாக அவர்கள் யாரையும் சந்திக்க வேண்டிய தேவை இல்லை என்பது சந்தோஷம்.

இருப்பினும் கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது.

அதனால் விவேக் வழி என் வழி.

என்ட ஸ்டேட்டு கேரளா,
என்ட சீஃப் மினிஸ்டர் பினராயி விஜயன்

4 comments:

  1. இடதுசாரிகள் தனிப்பட்ட முறையில் இப்படி கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் கட்சித்தலைமை எதிர்கால கூட்டணி வாய்பிற்காக ”அரசியல் நாகரீகத்துடன்” வாழ்த்து சொல்லி போங்காட்டம் ஆடுவதுமாக ஒரு கேலிக்கூத்து அரங்கேறுகிறது.மக்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்து விட்டால் நாம் சொல்வதற்கு எதுவுமில்லை என்று சட்ட நிலவரம் பேசுகின்ற ”நடுநிலை” பத்திரிக்கையாளர்களின் நிலை எடுப்பது தான் அரசியல் நாகரீகம் என்று சில கட்சிகளும் கருத்துரைப்பது வெட்ககேடானது.அதிலும் மார்க்சிஸ்டுகள் அப்படி வாழ்த்து சம்பிரதாயத்தில் தன்னை கரைத்துக் கொள்வதற்கு பொருள் சந்தர்ப்பவாதம்.கவனமாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் இப்படி கட்சியும் சின்னமும் ‘பிழைத்து’ இருப்பதும் அதற்கு மக்களை கேடயமாக பயன்படுத்துவதும் ஒர் மோசடி.மோடியின் தயவில் பன்னீர் ஆள்வதால் அதற்கு எதிராக சசிகலாவை காப்பது தான் திராவிட சிந்தனை என வீரமணி சொல்வது நியாயம் என இடதுசாரிகளும் புரிந்து வைத்திருக்கிறார்களோ என்னவோ? அதிமுக ஒரு கொள்ளைகூட்டம் என்றால் அதில் இப்போது நேரடியாக தலைமைக்கு வரும் கும்பல் எப்படிப்பட்டது என அவர்களின் மீதுள்ள வழக்குகளே காட்டுகின்றனவே. மக்களே சூடாக விளாசித்தள்ளும் நிலமையில் இடதுசாரிகளின் ”நாகரீகம்” ஒரு அருவெறுப்பான நாடகம்.

    ReplyDelete
  2. Left are thugs. They should be deported to Russia or Siberia

    ReplyDelete
    Replies
    1. பாபனாசம் படம் பாத்து புதுசா ஒரு வார்த்தை கத்துக்கிட்டயாப்பா கோழை அனானி? ஆமாம் வழக்கமா பாகிஸ்தானுக்குத்தானே போகச் சொல்வீங்க?

      Delete