Thursday, September 4, 2025

GST அகற்றம் AIIEA வின் வெற்றி

 


தனி நபர் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டின் மீதான 18 % ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது. நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தின் முடிவு இது.

இந்த முடிவு கோடிக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு பயனளிக்கும். இந்த முடிவு அவ்வளவு எளிதாக வந்து விடவில்லை. அதன் பின்னால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான, தொடர்ச்சியான போராட்டங்களும் பிரச்சார இயக்கங்களும் முயற்சிகளும் அடங்கியுள்ளன.

தன் குடிமக்களுக்கு எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை ஒரு மக்கள் நல அரசிற்கு உண்டு. அனைவருக்குமான மருத்துவம் கிடைக்கச் செய்ய வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உண்டு.

ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதைப் பற்றி உலகமயக் கொள்கையை பின்பற்றும் எந்த அரசும் கவலைப்படுவதில்லை.

அதனால் மக்களே தங்களின், தங்கள் குடும்பத்தின் எதிர்கால பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய ஆயுள் காப்பீட்டை நாடுகின்றனர். மருத்துவ செலவினங்களை சமாளிக்க மருத்துவக் காப்பீட்டை நாடுகின்றனர்.

அரசு செய்யத் தவறியதை குடிமக்களே தங்களது சொற்ப சேமிப்பில் இருந்து மேற்கொள்கிற போது அதற்கு 18 % ஜி.எஸ்.டி விதிப்பதென்பது ஒரு விதத்தில் அராஜகமே.

சேவை வரி என்று ஆரம்பித்த காலம் முதலே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அதனை எதிர்த்து வருகின்றது. மக்கள் மத்தியில் 2004ம் ஆண்டு முதல் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தி வந்தது ஏ.ஐ.ஐ.இ.ஏ.

பாலிசிதாரர்களுக்கு தேவையற்ற சுமையாக மாறியது ஜி.எஸ்.டி, இன்சூரன்ஸ் பரவலை அதிகரிக்க வேண்டும் என்று உபதேசித்த அரசு, வழக்கமாக வரும் வணிகத்தைக் கூட ஜி.எஸ்.டி பாதிக்கிறது என்ற யதார்த்தத்தை கணக்கிலெடுக்க மறுத்தது. 

2019 முதல் இந்த இயக்கம் தீவிரமானது. நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பது, ஜி.எஸ்.டி கவுன்சில்  உறுப்பினர்களை சந்தித்து  ஆதரவு திரட்டுவது, பாலிசிதாரர்களிடமிருந்து கடிதங்கள் பெற்று நிதியமைச்சருக்கு அனுப்புவது என எத்தனையோ இயக்கங்களை சங்கம் நடத்தியது. எங்கள் கோட்டத்தில் கூட புதுவை முதல்வர் திரு நாராயணசுவாமி அவர்களை இரண்டு முறை எங்கள் தென் மண்டலத் தலைவர்களோடு சந்தித்து விவாதித்துள்ளோம். தொகுதிக்கு வராத எம்.பிக்களை தவிர அனைவரையும் சந்தித்துள்ளோம்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்பு  இயக்கம் சூடு பிடித்தது. நாடு முழுதிலும் நானூறுக்கும் மேற்பட்ட எம்.பிக் களை சந்தித்தோம். பாஜக உறுப்பினர்கள் கூட எங்களின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு அளித்தார்கள். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஜி.எஸ்.டி யை அகற்றச் சொல்லி நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.


எங்கள் கோட்டத்திலும் எம்.பி க்களை சந்தித்தோம்.



மக்களவை, மாநியல்ங்களவையில் எம்.பிக்கள் பிரச்சினையாக எழுப்பினர்.

இந்தியா அணி எம்.பி க்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா நடத்தினர்.



ஆனாலும் நிர்மலா அம்மையார் அசையவில்லை.

ஜி.எஸ்.டி கவுன்சிலில் இது தொடர்பான விவாதம் வந்த போது ,முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.  ஜி.எஸ்.டி அமைச்சரவைக்குழு விவாதித்து பரிந்துரை அளிக்கட்டும் என்று காலம் தாழ்த்தப்பட்டது.

இதற்கு மேலும் தாமதிக்க முடியாது என்ற சூழல் உருவான பின்பு, இப்போது ஜி.எஸ்.டி அகற்றப்பட்டுள்ளது.

மக்களுக்காகவும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய இந்த போராட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக ஜி.எஸ்.டி அகற்றம் திகழும். 

எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாப்பது என்பது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சித்தாந்த நிலைப்பாடு.

வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் காண்பிக்கிற அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஒளி வீசும் மணி மகுடத்தில் இன்னும் ஒரு ரத்தினக்கல் பதிக்கப் பட்டுள்ளது.

இந்த வெற்றியோடு சங்கத்தின் பயணம் தொடரும், மேலும் உறுதியாக, மேலும் உற்சாகத்துடன். . .


No comments:

Post a Comment