Friday, June 16, 2023

அமலாக்கத்துறை – மிரட்டல் கருவி

 


அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவர் தவறு செய்தாரா இல்லையா என்று ஆராய்வது இப்பதிவின் நோக்கம் அல்ல. அவர் கைது செய்யப்பட்ட காலத்தை வைத்து இந்த கைது ஒரு அரசியல் நடவடிக்கை என்பதை  தெளிவாக சொல்ல முடியும்.

ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில்  அமலாக்கத்துறை நேர்மையாக இருக்கிறதா? ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறதா?

 இல்லை

இல்லை

நிச்சயமாக இல்லை.

 எப்படி சொல்ல முடியும்?

 புள்ளி விபரங்கள் அதனை புட்டு புட்டு வைக்கிறது.

 இது நாள் வரை அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை  5906. இதில் குற்றப்பத்திரிக்கை பதியப்பட்ட வழக்குகள் 1142 மட்டுமே. அவற்றிலும் அமலாக்கத்துறை  நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று வழக்காடியவை  25 வழக்குகள் மட்டுமே. அதிலே 23 வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.

 அமலாக்கப்பிரிவு  அதிகமான ரெய்டுகள் நடத்தியதும் வழக்குகள் பதிவு செய்ததும் கடந்த ஒன்பது ஆண்டுகளில்தான். அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டதில் 96 %  எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மீதுதான்.

 3000 எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் மீது ரெய்டு நடத்தி வழக்கு பதிவு செய்ய முடிந்த அமலாக்கத்துறையால் ஏன் அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லை.

 மஹாராஷ்டிராவில் தேசியவாதக்கட்சியின் அஜய் பவார் முதலில் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்த போது அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டது. அவர் அடுத்த நான்காம் நாள் பல்டி அடித்து விட்டார் என்பது வேறு விஷயம்.

 சிவசேனா கட்சியில் ஒரு தலைவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அவர் அக்கட்சியை உடைத்த ஏக் நாத் ஷிண்டே கோஷ்டியில் இணைந்ததும் காணாமல் போய் விட்டது. தற்போதைய மகாராஷ்டிர அரசுக்கு பெயரே ED (எENFORCEMENT DIRECTORATE) அரசுதான்.

 ஒன்பது வருட டிமோ ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்பதே தேர்தல் ஆணையம், சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு ஆகிய சுயேட்சையான அமைப்புக்களை நாசமாக்கி தனது ஏவல் நாய்களாக்கியதுதான்.

 எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கான ஆயுதமாக அவைகளை ஏவி விடுவதுதான்  டிமோவின் உத்தியாக இருக்கிறது. அதிலே அமலாக்கத்துறை மிக அதிகமான டிமோ விசுவாசத்தைக் காண்பிக்கிறது.

 “இவரைத் தவிர வேறு ஆளே கிடையாதா? 2021 க்குப் பிறகு பணி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது” என்று உச்ச நீதிமன்றம் கறாராக சொன்ன பிறகும் சட்டத்தை மாற்றி இன்னும் இயக்குனர் பதவியில் தொடர வைப்பதற்கு அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ரா இந்த கைமாறு கூட செய்யாவிட்டால் எப்படி!

 

1 comment:

  1. You can fool all of the people some of the time, and some of the people all of the time, but you can't fool all of the people all of the time.

    ReplyDelete