Sunday, September 21, 2014

அது ஒரு அழகிய இசைக்காலம்

 


மாண்டலின் ஸ்ரீனிவாஸ்  மறைவு  மனதை பாதித்தது  மட்டுமல்ல,  மீண்டும் கர்னாடக இசையார்வத்தை  கொஞ்சம் தூண்டி விட்டது. இரண்டு நாட்களாக  முன்பு விருப்பத்தோடு கேட்ட பல பாடல்களை மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 

எப்படி வந்தது கர்னாடக இசையின் மீது நாட்டம்? 

நிச்சயமாக எங்களுடையது இசைக்குடும்பமெல்லாம் கிடையவே கிடையாது. அப்படி ஆர்வமாக இசை கற்றுக் கொண்டவர்களும்  கூட கிடையாது.  ஆல் இந்திய் ரேடியோவை  விட ரேடியோ சிலோன்தான்  அதிகமாக ஒலித்திருக்கிறது.

காரைக்குடியில்  எங்கள் வீட்டிற்கு   பக்கத்தில் மூன்று தெரு தள்ளி ஒவ்வொரு வருஷமும்  ராமநவமி   விழா நடக்கும்.  அப்போது புலவர் கீரனின் தமிழ்  ஈர்த்தது போல மற்ற  கதை சொல்லிகள் அவ்ளவாக ஈர்த்தது கிடையாது. பாலமுரளி கிருஷ்ணா, எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரின் கச்சேரிகள்  நடந்திருக்கிறது. முதல் பாடலின் ராக ஆலாபணைக்கு முன்பே  தூங்கியும் போயிருக்கிறேன். 

தஞ்சை மாவட்டம்   திருக்காட்டுப்பள்ளியில் ஒன்பதாவது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த போது இரண்டு முறை தியாகராஜர் விழாவிற்கு திருவையாறு சென்றுள்ளேன். அப்போதும்  கச்சேரிகளை காது கொடுத்து கேட்ட நினைவு கிடையாது. ஒரு முறை திருவையாறிலிருந்து கண்டியூர் சென்ற  பேருந்தில்  என் அக்காவும் அக்கா கணவரும் ஏறினார்களா என்று கவனிக்காமல் ஏறி  மூன்று  ஸ்டாப் க்ழித்து வரும் கண்டியூர்  வரும் வரை மனம் பக்பக் என்று அடித்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் என் கையில் பத்து பைசா கூட கிடையாது. வாழ்க்கையில் மேற்கொண்ட ஒரே வித்தவுட் டிராவல் அதுதான்.

அதன் பின்பு மதுரையில் கல்லூரியில் படிக்கையில் என் அக்கா மாமியார் ஒருமுறை  மகாராஜபுரம் சந்தானம் கச்சேரிக்கு    மீனாட்சியம்மன்  கோயிலுக்கு கூட்டிப் போனார்.  அவர் மெய்மறந்து  கேட்டுக் கொண்டிருந்தாலும்  எனக்கு ஒன்றும் புரியவில்லை. ராகமாலிகையில்  கட்டமைக்கப்பட்ட   ஸ்ரீசகரராஜ சிம்மாசனேஸ்வரி   என்ற பாடல் மட்டும் தமிழில் இருந்ததால் ஏதோ புரிந்தது. 

அதற்குப்பிறகு  எல்.ஐ.சி க்கு வந்த பின்பு  தனியாக எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பு வந்த பின்பு  முதன் முதலில் டேப் ரிகார்டர் வாங்கியபோது  எனது பெரியண்ணன் அப்போது டெல்லியிலிருந்து கொண்டு வந்திருந்த (தனக்காக சென்னையில் வாங்கிய) கே.ஜே.யேசுதாஸ் மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி காசெட்டுக்கள்தான் என்னை கர்னாடக இசையை கவனிக்க வைத்தது.

 அந்த யேசுதாஸின் காசெட்டில்  இருந்த ஆறு பாடல்களும் அற்புதம். தேவகாந்தாரி ராகத்து  ஷீரசாகர சயனா  என்ற பாடலில்  யேசுதாஸ் தாரக ராமா  என்று அழைக்கும் போது  அப்படியே உருக்கி விடும் அதன் அர்த்தம் என்னாவென்று புரியாவிட்டாலும் கூட. கர்னாடக இசையில் இவ்வளவு வேகமும் உண்டா என்று ஆச்சர்யப்பட வைத்தது அதே காசெட்டில் இருந்த 
ஏதா உண்ரா என்ற கல்யாணி ராகப் பாட்டு.  அந்த ஸ்வரங்களை நீங்களும் கேளுங்கள். நான் சொல்வது சரி என்பதை உணர்வீர்கள். 

அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக  கர்னாடக இசை கேட்க ஆரம்பித்தேன். ராகங்களும்  பிடிபட ஆரம்பித்தது.  காசெட்டுக்கள் வாங்க ஆரம்பித்தேன். அதே நேரம் இன்னொரு தேடலும்  தொடங்கியிருந்தது. கடவுள் என்பது என்ன? என்ற தோழர்  அஸ்வகோஷின் புத்தகம் இதுநாள் வரை வைத்திருந்த கற்பிதங்களை உடைக்கத் தொடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்த பல புத்தகங்களும் கூட என் திசை என்ன என்பதை சொல்லிக் கொண்டிருந்தது. ராம ராஜ்ஜியம் குறித்த ராகுல சாங்கிருத்தியான் புத்தகமும் முக்கியமான ஒன்று.  இசையை மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தேனே தவிர அந்த பாடல்கள் சொன்ன செய்தியை, பரப்பிய பக்தியை  மூளைக்குள்ளே நுழைய அனுமதிக்கவேயில்லை. 

ஒவ்வொரு கலைஞருடய  கேசட்டாக  தேடித்தேடி வாங்க ஆரம்பித்தேன். பிறகு ஒரே பாடலை ஒவ்வொருவரும் எப்படி பாடியுள்ளனர் என்று ஆய்வு செய்வது, அதற்குப் பிறகு ஒரே ஒரு பாடல் மட்டும் இருக்கும் காசெட்டாக  வாங்குவது (யேசுதாஸ் மற்றும் பாலமுரளிக்கிருஷ்ணா அப்படி வெளியிடுவார்கள்) 

ஜி.என்.பி யின் வாசுதேவயனி  செம்பை வைத்யநாத பாகவதரின் பண்டூருத்தி கொலு  மதுரை மணி ஐயரின் இங்கிலிஷ் நோட் 
எம்.எல்.வசந்தகுமாரியின் நினுவினா  லால்குடி ஜெயராமனின் தில்லானா 
என்று எத்தனை பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும்  அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் எவரி மாட்ட  போல வருமா என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் என் அப்பாவின் ஏக்கம் தீர்க்க அந்த காசெட் மும்பையில் கிடைத்தது. 

நெய்வேலியில் அரிதாக  நடக்கும் எந்த கச்சேரியையும் தவறவிட்டதில்லை. தொடர்ந்து காசெட் வாங்குவதால் அங்கே மெயின் பஜாரில் உள்ள பாரத் ஸ்டோர் (அப்படித்தான் நினைவு)  பெரியவர்  புதிதாக நல்ல காசெட் வந்தால் போன் செய்திடுவார். ஒரு முறை மதுரை மணி ஐயர் காசெட்டை ஒலிக்க வைத்து இது என்ன ராகம்  சொல்லுங்கள் என்று கேட்டதும்  மத்யமாவதி என்று சொன்னதும் அதற்கு அவர் சபாஷ் என்றதும் இன்னும் நினைவில் உள்ளது.  காசெட் வாங்கியே காசையெல்லாம் அழிக்கிறான் என்ற விமர்சனம்  ஒன்று என் மீது  உண்டு என்பதும் நினைவில் உள்ளது. 

ஒரு ஜனவரி மாதம் பார்க்கையில்  பதிமூன்று நாட்கள் தற்செயல் விடுப்பு அப்படியே இருந்தது. (இப்போதெல்லாம் தற்செயல் விடுப்பு தொடங்கும் ஜூலை மாதம் தொடங்கி நான்கைந்து   மாதத்திற்குள் முடிநதே போய் விடுகிறது என்பது வேறு விஷயம்). எனவே  திருவையாறு நோக்கி புறப்பட்டேன். திருக்காட்டுப்பள்ளியிலிருந்து  நான்கு மணிக்கு  புறப்பட்டால்   ஐந்து மணிக்கு  முன்பாக போய் விடலாம். 

ஆறு மணி முதல் பத்து மணி வரை இசை மழையில்  நனைவதற்கான வாய்ப்பு. உட்கார மாட்டேன். கால் வலிக்கும் போது அங்கே போடப்பட்டுள்ள  எல்.ஐ.சி பப்ளிசிட்டி  ஸ்டாலில் உட்கார்ந்து கொள்வேன். ஒரு மூன்று வருடம்  அப்படியே போனது. அதற்குப் பிறகு திருமணம் ஆனதும் மாமனார் வீடான கும்பகோணம்  சென்று அங்கிருந்து  திருவையாறு செல்வேன். 

ஒரு வருடம் திருவையாறில் மதுரை சோமு, குன்னக்குடி வைத்யநாதன், ஹரித்வாரமங்கலம் பழனிவேல் என்ற அதிரடிக் கூட்டணியின் அதிரடி கச்சேரியை மறக்க முடியவில்லை. 

எனது மகன் பிறந்த 1993 க்குப் பிற்கு 1994 ல் வந்த திருவையாறு விழாதான் கடைசியாக சென்றது. அதற்குப் பிறகு தொழிற்சங்கப் பணிகளில் மும்முரமாகி விட்டதால் விடுப்பு என்பது ஒரு பிரச்சினையாகி விட்டது. சென்னை இசை விழாவிற்கு  செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்  விடுப்பு, செலவு  என்ற பிரச்சினைகள் இருந்ததால் அதற்கான வாய்ப்பு கிடைத்ததில்லை. 

ஆனால் ஒரு மூன்று வருடங்கள் தொடர்ச்சியாக டிசம்பர் மாதம் சென்னை மண்டலப் பயிற்சி மையத்திற்கு அனுப்பினார்கள். ஐந்து மணிக்கு வகுப்பு முடிந்ததும்  தேநீர்  என்ற பெயரில் அளிக்கப்படும் சூடான தண்ணீர் போன்ற திரவத்தைக் கூட குடிக்காமல்  இசை விழா நிகழ்ச்சிக்கு ஏதாவது ஒடி விடுவேன். அப்படி மூன்று வருடங்களும் தவறாமல் பார்த்தது கே.ஜே.யேசுதாஸ் மற்றும் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரிகள். ஒரு வருடம் காத்ரி கோபால்நாத் சாக்ஸ்போன், இன்னொரு வருடம் சுதா ரகுநாதன். 

முன்பெல்லாம் இரவு காசெட் ஒலித்துக் கொண்டே இருக்க அப்படியே  அந்த இசையின் பின்னணியில் தூங்கி விடுவோம். குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது  என்று வருவதில் ஒரு விஷ்யத்தில் நானும் என் மனைவியும் உறுதியாக இருந்தோம். எங்கள் இருவர் பெயரும் ஆர் என்ற எழுத்தில் துவங்குவதால் குழந்தைக்கும் ஆர் என்ற எழுத்தில் துவங்கும் பெயர் என்று முடிவு செய்திருந்தோம். மகன் பிறந்தால் ரகுநந்தன் என்று வைக்கலாம்  என்று முன்பே முடிவு செய்தது பாலமுரளி கிருஷ்ணாவின் வந்தனமு ரகுநந்தனா பாட்டு கேட்டுத்தான். பெண் குழந்தை என்றால்  என்ன பெயர் என்று முடிவு செய்யவில்லை. மகன் பிறந்ததால் குழப்பம் இல்லாமல் போய் விட்டது.

யேசுதாஸின் ராகம் தானம் பல்லவியான " "கௌசல்ய குமாரனை தினம்" என்ற  பாடலில்   வயலின் வாசிக்கும் பெங்களூர் தியாகராஜன்   பின்னியெடுத்திருப்பார்.     

அந்த இசையைக் கேட்டவுடன் வயலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு வந்தது. அதற்கான வாய்ப்பு கிடையாது, முடியாது என்பதும் தெளிவாக தெரிந்தது. தங்களால் முடியாதவற்றை தங்களின் பிள்ளைகளாவது செய்ய வேண்டும் என்ற இந்திய பெற்றோரின் இயல்பிற்கு நானும் வேறுபடாமல்  என் மகனை வயலின் கற்றுக் கொள்ள அனுப்பினேன். அவனும் உற்சாகமாகவே, நன்றாகவே பயின்று வந்தான். ஆனால் பத்தாம் வகுப்பு வரும்போது வேறு வழியில்லாமல் நிறுத்த வேண்டியிருந்தது. அதற்க்ப் பின் மீண்டும் வயலின் வகுப்புக்களை தொடரும் சாத்தியம் இல்லாமல் போனது ஒரு சின்ன ஆதங்கம்தான்.

டேப் ரிகார்டர் அடிக்கடி ரிப்பேரான பிறகு உதிரி பாகங்களும் கிடைக்காமல் போன் பின்பு  வேறு வழியில்லாமல்  டேப் ரிகார்டரையும் முன்னூறுக்கும் மேற்பட்ட  காசெட்டுக்களையும் பரணில் போட வேண்டியதாகி விட்டது. சி ப்ளேயர், கம்ப்யூட்டர், அலைபேசி, ஐபாட் என்று இசை கேட்க பல புதிய வடிவங்கள் வந்த பின்பும் கூட டேப் ரிகார்டர் காலத்து அனுபவங்கள் இவற்றில் கிடைக்கவில்லை என்பதுதான் எனது கருத்து. இதில் பலர் மாறுபடலாம். 

பயணங்களில் கேட்கும் இசை என்பது பெரும்பாலும் இளையராஜா அல்லது பழைய சிவாஜி, எம்.ஜி.ஆர் பாடல்கள்தான். ஓட்டுனர்கள் பெரும்பாலும் கர்னாடக சங்கீதம் விரும்புவதில்லை என்பதும் ஒரு காரணம். 

அது ஒரு கனாக்காலம் போல அது ஒரு இசைக்காலம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு நாட்களாக யூடியூபில் ஏராளமான பாடல்களை கேட்டதும் அந்த இசைக்காலம் திரும்பியுள்ளதாகவே உணர்கிறேன். 

புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கும் யோசனை இருந்தது. அந்த பணத்தைக் கொண்டு டேப் ரிகார்டர் வாங்கலாமா, பரணில் சிறையில் இருக்கும் காசெட்டுகளுக்கு விடுதலை கொடுக்கலாமா என்று தீவிரமாக யோசிக்கிறேன். 

பார்ப்போம் ஸ்மார்ட் போனா, டேப் ரிகார்டரா யார் என்னிடம் வரப் போகிறார்கள் என்று....

2 comments:

  1. தங்களின் இசை ஆர்வம் போற்றுதலுக்கு உரியது
    அநேகமாக ஸ்மார்ட் போன்தான் வாங்குவீர்கள் என எண்ணுகின்றேன்

    ReplyDelete
  2. sangeethapriya.org இணையத்தில் மிக அழகாக பகுத்து, தொகுத்து வைத்திருக்கிறார்கள். எது வேண்டுமானாலும் download செய்து கொள்ளலாம்.. அதிலிருந்து எடுத்து ஸ்மார்ட் போனில் வைத்துக் கொள்ளுங்கள். டேப்பிற்கு விடை கொடுங்கள்..

    ReplyDelete