Sunday, June 30, 2013

ஹரி, சசிகுமார் போன்ற அரிவாள் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்

கிட்டத்தட்ட ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு  நேற்று
ரத்த தானம் செய்தேன். நாற்பத்தி ஒன்பதாவது முறையாக
ரத்த தானம் செய்ததில் ஒரு மகிழ்ச்சி. கடந்த முறை ரத்த தானம்
செய்ய சென்ற போது ரத்த அழுத்தம் கூடுதலாக இருப்பதாக
நிராகரித்து விட்டார்கள். எனவே ஐம்பது என்ற இலக்கை அடைய
முடியுமோ என்ற அச்சம் இருந்தது. அதை அடைய முடியும்
என்ற நம்பிக்கை இப்போது  வந்து விட்டது.

இப்போது நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம் பற்றி.

பொதுவாக ரத்த தானம் செய்யப் போனால் ஒரு மணி நேரத்தில்
திரும்பி விடுவேன். நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால்
மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க நேர்ந்தது. அப்போது
கண்ணில் பட்ட காட்சிகளே இப்பதிவிற்குக் காரணம்.

விபத்தில் சிக்கிய நண்பனுக்காகவும் இதய அறுவை 
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நண்பனுக்காகவும்
ரத்தம் அளிக்க ஒரு இளைஞர் பட்டாளமே வந்திருந்தது.
அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் தொலைபேசி செய்து
கொண்டிருந்தார்கள். 

இன்னும் கூட ரத்தம் தேவைப்படுது நண்பா, எப்படியாவது
வந்துடேன் என்று மன்றாடிக் கொண்டிருந்தார்கள்.

அது போல அஸ்ஸாமிலிருந்து வந்த ஒரு குடும்பம் 
ரத்த வங்கி பொறுப்பாளர்களிடம் எப்படியாவது ஒரு நாள்
அவகாசம் கொடுங்கள், இரண்டு உறவினர்கள் ட்ரெயினில்
வந்து கொண்டிருக்கிறார்கள், திங்கட்கிழமை காலை 
ரத்தம் கொடுத்து விடுவார்கள். ஆபரேஷனை தள்ளிப் போட
வேண்டாம் என்று டாக்டருக்கு சொல்லுங்கள் என்று
கெஞ்சிக் கொண்டிருந்தார்கள்.  அஸ்ஸாமிலிருந்து வந்த
நாங்கள் இன்றைக்குள் எங்கே ஆட்களைக் கண்டு பிடிப்பது
என்று அவர்கள் கேட்டதிலும் நியாயம் உண்டு. 

நானும் இன்னொரு தோழரும் கூட அஸ்ஸாம் மாநிலம்,
ஜோர்ஹாட்டைச் சேர்ந்த ஒரு தோழருக்கு ரத்தம் அளிக்கத்தான்.
எல்.ஐ.சி ஊழியர் என்பதால் அவரது குடும்பமாக எங்கள்
சங்கம் உள்ளது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது
இல்லையே.

உயிரின் உன்னதமும் அதைக் காக்க ரத்தத்தின் முக்கியத்துவமும்
மருத்துவமனையில் இருந்தால்தான் புரியும். 

அரிவாள் வீசி தலையை வெட்டியெடுத்து திரை முழுவதும்
ரத்தம் பீய்ச்சியெடுக்கிற காட்சியை படத்துக்கு படம் வைக்கிற
ஹரி, சசிகுமார் உள்ளிட்ட எண்ணற்ற இயக்குனர்களுக்கு
ஒரு வேண்டுகோள்.

இப்படி ரத்தம் விரயமாகிற காட்சிகளை கொஞ்சம் தவிர்க்கலாமே..

உயிரை சுலபமாக எடுக்கிற காட்சிகளுக்கு பதிலாக 
உயிரின் உன்னதத்தை போற்றுகிற காட்சிகளை அளிக்கலாமே...

ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை உங்கள் திரைப்படங்களில்
கொஞ்சம் சொல்லுங்களேன். உங்கள் திரைப்படங்களைப்
பார்த்து நான்கு பேர் ரத்த தானம் செய்தால் அது உங்களுக்கும்
பெருமைதானே...

ரத்த தானம் பற்றி குறும்படங்கள் கூட எடுக்கலாமே...

நான் கூட யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

2 comments:

  1. எல்லோரும் படிக்க மட்டும் இல்லாமல் ரத்தம் கொடுக்க வேண்டும் பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete