அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இந்திய ஜனநாயகம் தழைத்திடும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை அணுகுவோம்.
முதல் பதிவாக ஒரு இனிப்பு இருக்கட்டும்.
அதென்ன அவல் லட்டு 2.O ?
தீபாவளியை முன்னிட்டு அவல் லட்டு செய்முறையை எழுதியிருந்தேன். அது இங்கே . . .
தீபாவளிக்கு முன்னோட்டமாக "அவல் லட்டு"
சமையல் பதிவு போட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேலாகி விட்டதால் இந்த பதிவு, நேற்று செய்தது.
பணி ஓய்வில் வீட்டில் இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது. திட்டமிட்டதை செய்து விட்டு எந்த சுவடும் தெரியாமல் சமையலறையை சுத்தம் செய்து வைப்பதற்கான நேரம் இருக்கிறது.
இந்த பதிவு இன்னொரு செய்தியும் சொல்கிறது. ஒரு இனிப்பு செய்யும் அளவிற்கு உடல் நிலை தேறியுள்ளது. இரு சக்கர வாகனத்தை ஓட்ட மருத்துவர் அனுமதி கொடுத்தால் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் செல்லும் போது என்ன சொல்கிறார் என்று.
சரி,
இப்போது சமையலறைக்கு செல்வோம்.
முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.
அதே வாணலியில் வெள்ளை (லேசான) அவலை நன்றாக வறுத்துக் கொண்டேன்.
பிறகு துறுவிய தேங்காயையும் வறுத்துக் கொண்டேன்.
வறுத்த அவலை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன்.
கொஞ்சம் வெல்லத்தை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன். அதிலெயே வறுத்த தேங்காயையும் போட்டு சுற்றி அதனை பொடித்து வைத்த அவலோடு கலந்து கொண்டேன். சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடான நெய் நாலு ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் கலந்து கைகளில் பிடித்து எடுத்தால் அவல் லட்டு தயார்.
சுவை எப்படி?
என்னுடைய சிக்னேச்சர் டிஷ்ஷான "அவல் புட்டு" எப்படி இருக்குமோ அதே சூப்பர் சுவை.
இப்போது அவல் லட்டு 2.O எப்படியென்று பார்ப்போம்.
அவல் மட்டுமல்லாது, நிலக்கடலை, பொட்டுக்கடலையையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்,
வெல்லத்திற்கு பதில் சர்க்கரையை பொடி செய்து மாவுக் கலவையுடன் சேர்த்து நெய்யைக் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கவும்
அதுதான் அவல் லட்டு 2.O


No comments:
Post a Comment