Thursday, July 20, 2023

பாஞ்சாலிகளும் திரௌபதியும் . . .

 

கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்

மகாபாரத புனைவுக் கதையின் ஒரு பகுதியை "பாஞ்சாலி சபதம்" ஆக பாரதி எழுதினான். அதிலே துச்சாதனன் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வரும் காட்சிதான் மேலே உள்ளது. பாரதி எழுதியதை படிக்கையிலேயே நெஞ்சம் பதைபதைக்கிறது.

புனைவை விட மோசமான நிகழ்வாக மணிப்பூரில் பழங்குடியின பாஞ்சாலிகளுக்கு அராஜகம் நிகழ்ந்துள்ளது.

"நெட்டை மரங்களென நின்று புலம்பினர்" என்று பாரதி மக்களை சாடினான்.

இந்தியாவின் முதல் குடிமகள், பழங்குடியினத்தின் முதல் குடியரசுத் தலைவர் என்ன செய்கிறார்.

நெட்டை மரமென புலம்பும் உரிமை கூட அற்றவர். பீஷ்மரும் துரோணரும் விதுரரும் போல வேடிக்கை மட்டுமே அவரால் பார்க்க இயலும்.

அவரது பெயரும் திரௌபதி என்பது மிகப் பெரிய நகை முரண். 

No comments:

Post a Comment