Saturday, January 7, 2017

போலீஸ்காரங்க கொஞ்சம் படிங்கப்பா


காக்கி - கவிதை - இரு அனுபவம்



காக்கிகளின் அராஜகம் தொடர்பாக மூன்று முக்கிய முக நூல் பதிவுகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

சீருடை அணிந்த தைரியத்தால் போராளிகளின் முகத்தை மிதிக்கும் காக்கிகள் அவசியம் படிக்க வேண்டியவை 

தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு அவர்களின் கவிதை இங்கே



ஆர்வமாய் காத்திருக்கிறோம் வா!
நீங்கள் என்ன பெரிய வீரர்களா?
உடலெல்லாம் கவசம் அணிந்து
ஓங்கிய கையில் தடிகொண்டு
ஒரு தோழமயை பலர் சுற்றி
கேள்வி கேட்ட வீரமிகு காவலரே
பெருமையாய் இருக்கிறது உமது வீரம். . 


ஒரு தோழனின் மண்டைய பிளந்து
ஒரு தோழனின் முகத்தில் மிதித்து
ஒரு தோழனின் முதுகின் தோலை உரித்து
ஒரு தோழியின் துப்பட்டாவை இழுத்து
ஒரு தோழியின் அங்கங்களை ஸ்பரிசித்து
ஒரு தோழியின் அந்தரங்கத்தை உற்றுப்பார்த்து. .

ஆஹா! என்னே பெருமை உமது வீரம்?

விரைத்து நிற்கும் காக்கிச் சட்டையின்
பெருமைக்கு இது அல்லவோ அழகு
தடியால் தாக்கும் போதும் ஓடாமல்
நிராயுத பாணியாய் நின்று களமாடும்
அந்த யுவதியின் வீரமா வீரம்?


சுழற்றுங்கள் உங்கள் தடித்த தடிகளை
நடத்துக உங்கள் நாராச கூத்துகளை
உயர்த்துக உங்கள் உயர் ஆயுதங்களை
கவசம் அணிந்த சீறுடைதான் உந்தன்
வீரத்தின் அச்சாணி என்பதை அறிக
சீறுடை ஓய்ந்த ஒருபொழுதில் வா. . 


சாராய கடைகளின் வாயிலில் நின்று
பண்டிகைகால கடைகளின் படிகளில் நின்று
இருசக்கர வாகன ஓட்டிகளிடம் கையேந்தியபடி
சாலையோர கடை மாந்தர்களை விரட்டியபடி
புகார் கொடுக்க வருபவர்களிடம் யாசித்தப்படி
இருப்பதல்ல வீரம் என தோழி போதிப்பாள்.. . 


சக மனிதத்தை சமமாய் நேசிப்பதும்
துயர்படும் மக்கள் வியர்வை துடைப்பதும்
வேலையற்ற யுவன் யுவதிகளுக்காக
தம் நேரத்தை தத்தம் செய்வதுமே
உண்மையில் வீரம் என்பதை என் தோழன்
உனக்கு போதிப்பான் புரியும் வகையில்

அதிகாரம் தந்த மமதையிலாடும் காவலா
ஒன்றை நின்று நன்றாய் புரிந்துக்கொள்


அதிகார உத்தரவின் கூலிக்கு மாரடிக்கும்
உன் கரத்தைவிட வலிமை மிக்கது
தேசத்திற்காக போராடும் எமது கரங்கள்
சம பலத்துடன் மோதும்போது அறிவாய்

ஆர்வமாய் காத்திருக்கிறோம் வா!

தோழர் சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் பதிவு




 நான் வாலிபர் சங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் எண்பதுகளில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் . புளியந்தோப்புப் பகுதியில் தண்ணீருக்காக மறியல் அதுவும் காலையில் 7 மணிக்கு நானும் பாக்கியமும் அங்கு நின்றோம் . மகுடபதி என்கிற போலிஸ் அதிகாரி லத்தியோடு பாய பெண்கள் லத்தியைப் பிடுங்க ஒரே கலவரம் . தகவல் ஜேப்பியாருக்கு பறந்தது . அப்போது அவர் குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் . அவர் தலையிட தாக்குதல் நின்றது .தண்ணீர் லாரி வந்தது . மகுடபதி அன்று மாலையே மாற்றப்பட்டு ஒரு மூலையில் உட்கார வைக்கப்பட்டார் . 

தினசரி தண்ணீருக்காக போலிசுடன் மோதல் ஆனால் தண்ணீரைப் போராடிப் பெற முடிந்தது . புரசையில் புவனேஸ்வரி தியேட்டர் அருகே போலீஸ் குடியிருப்பில் மூன்று நாட்களாக சொட்டுத் தண்ணீரில்லை . அங்குள்ள பெண்கள் [போலிசாரின் மனைவி ,தாய் , சகோதரி ] வாலிபர் சங்கத்தை அழைத்து கையில் வெண்கொடியோடு சாலைமறியல் செய்த காட்சி இன்றும் நினைவிருக்கிறது 

.காவலர்கள் செய்வதறியாது திணறினர் .தண்ணீர் கிடைத்தது . அப்போது உயரதிகாரியை ஒரு அனுமதிக்காகச் சந்தித்த போது சொன்னார் புரசை போலீஸ் குடியிருப்பில் தண்ணீருக்காக நீங்களும் நடத்திய போராட்டம் எல்லா போலீஸ் குடியிருப்புக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்துவிட்டது . நன்றி ! உங்கள் போராட்டம் எப்போதும் நியாயமாகவே இருக்கிறது என்றார் . 

“ காக்கி உடைக்குள் குமுறும் இதயங்கள்” என எங்கள் தலைவர் தோழர் பி.டி.ரணதிவே எழுதிய சிறுபிரசுரத்தைக் கேட்டு வாங்கி வாசித்த காவலர் உண்டு . நாங்கள் கொடுமை செய்யும் போலிசை எதிர்ப்போம் ; அதே நேரம் காவல்துறையின் உரிமைகளுக்கும் குரல் கொடுப்போம் . இந்த வரலாறெல்லாம் பள்ளிக்கரணையிலும் மதுரையிலும் தாக்கிய சில வெறி நாய்களுக்குத் தெரியுமா ? லஞ்சமும் காமமுமாய் அலையும் அவர்கள் காவலரல்ல கயவர்களே !

தோழர் மதுரை பாலன் அவர்களின் பதிவு.



#ஒங்கிட்டயும்_அடி_ஒனக்காகவும்_அடி:
எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஆர்டர்லி முறையை அடியோடு   ரத்துசெய்ய வேண்டும்,எட்டுமணிநேர வேலை வேண்டும் சங்கம் வைக்க உரிமை வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக போலீசார்   வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அப்போராட்டத்தை நம்முடைய சோசலிஸ்ட்   வாலிபர் முன்னணி முழுமனதாக ஆதரித்தது. அவர்களுக்காக நகர்முழுக்க போஸ்டர் ஒட்டினோம்.போலீஸுக்கு போஸ்டரை கிழித்துத்தான் பழக்கம்   ஒட்டிப் பழக்கம் இல்லை என்பதால்
அந்த வேலையை நாங்கள் செய்தோம். 


நானும் பல்வேறு இடங்களுக்குச் சென்று அவர்களது போராட்டத்தை வாழ்த்திப் பேசினேன்.போராட்டம் தீவிரமெடுத்தது எம்ஜிஆர் சிஆர்பி யை
இறக்கினார்.நான் மேலஆவணிமூல வீதியில் அவர்களது   போராட்டத்தை  வாழ்த்தி உரைநிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.  ஒரு பெரிய  வேன் வந்து  நின்றது  அதிலிருந்து திபுதிபுவென்று சிஆர்பி
இறங்கியது.இன்று நம்மை ஓடஓட விரட்டித் தாக்கியவர்கள் அன்று ஓடிய ஓட்டத்தைப் பார்க்கவேண்டுமே உசைன்போல்ட்டே  ஆச்சரியப்படுவான்   அப்பிடி ஒரு  ஓட்டம்.


மாட்டிக் கொண்டவர்களுக்கு விழுந்த அடியிருக்கிறதே வாழ்க்கையில் மறக்க முடியாது.எனக்கும் ரெண்டு   அடி விழுந்தது ரெண்டு மாமாங்கத்திற்கு அந்த வலியிருந்தது. அப்போது நான்  நினைத்துக் கொண்டேன் ஓங்கிட்ட அடி வாங்குனது பத்தாதுன்னு ஒனக்காகவும் அடிவாங்க வேண்டியதாகிவிட்டதே  என்று. ஆனால் என்ன விசயமென்றால்  அவர்களுக்கு நன்றி என்பதே இருக்காது.  அதுதான் போலீசின் குணம்.பயிற்சி  அப்படி.

No comments:

Post a Comment