Sunday, January 1, 2017

கைது செய்





காவல்துறை எப்போதெல்லாம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்ளும்?

தங்களில் ஒருவர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழும் போது, அந்த காக்கிக் குற்றவாளியை பாதுகாக்க அரக்கத்தனமாக நடந்து கொள்ளும்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தோழர் ஜி.ஆர் அவர்களின் அறிக்கையை படியுங்கள்.

தமிழக அரசு என்ன செய்ய்ப்போகிறது? 



தவறிழைத்த அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் போகிறதா இல்லை விக்ரம் பட வசனம் போல “அவர்கள் போலீஸ் இல்லை பொறுக்கி என்று இன்னும் பலரை வளர்த்தெடுக்கப் போகிறதா?






போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை:
ஜி. ராமகிருஷ்ணன் புகார்
சென்னை:
மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.CPM 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 31.12.2016 சென்னை, மேடவாக்கத்தில் உள்ள ஏ.டி.எம். முன்பு அமைதியான முறையில் ஆர்ப்பாட்ட நடத்திய போது, பள்ளிக்கரணை காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜா என்பவர் போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.

 இந்த செயலை தட்டிக் கேட்ட வாலிபர் சங்கத்தினர் அனீஷ், ஹனீபா, சுனில், பாலா, ஜெயவேல், அழகு, ஜெயகுமார், செல்வம் ஆகியோரை தாக்கியதுடன், போலீஸ் வாகனத்தில் ஏற்றி வாகனத்தை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிச் சென்றே உள்ளே வைத்து துப்பாக்கியால் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இதர தோழர்கள் கைது செய்யப்பட்டனர். 

இச்செய்தியறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வனஜகுமாரி, ஆர். வெள்ளைச்சாமி, ஜி. செல்வா, எஸ். குமார், வாலிபர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தீபா மற்றும் மாதர், மாணவர் சங்கத் தோழர்கள் உள்ளிட்டு 200க்கும் அதிகமானோர் பள்ளிக்கரணை காவல்நிலையம் சென்று, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட தோழர்களை உடனடியாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் எவ்வித பதிலும் அளிக்காமல் அலட்சியம் செய்ததால் காவல்நிலையம் முன்பு மறியல் செய்துள்ளனர். 

மறியல் செய்த தோழர்களை பள்ளிக்கரணை காவல்துறையினர் ஓட, ஓட விரட்டி கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தோழர் ஜி. செல்வா மண்டை உடைந்து படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். மேலும் பல தோழர்கள் படுகாயமுற்றனர். வனஜாகுமாரி, தீபா ஆகிய தோழர்களை பெண்கள் என்று கூட பாராமல் ஆண் காவலர்கள் வேண்டுமென்றே குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

 ஏ.டி.எம். வாசல் முன்பு அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத் தோழர்களை தாக்கியது மட்டுமல்லாமல், காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட தோழர்களை காண்பிக்க வேண்டுமென்று வலியுறுத்திய 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய பள்ளிக்கரணை காவல்துறையினரின் ஜனநாயக விரோத நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிக்கரணை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜாவை பாலியல் வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்ட தோழர்களை தாக்கிய காவல்துறையினர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

காவல்துறையினரின் தாக்குதலில் படுகாயமுற்றவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்திட வேண்டுமெனவும், வாலிபர் சங்கத் தோழர்கள் உள்ளிட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment