Tuesday, June 9, 2015

யாராவது அவர்களிடம் சொல்லுங்களேன்

 

வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரை
என்னருகில் பேருந்திலமர்ந்து வந்த
அந்த இளம் காதலர்களிடம்
யாராவது சொல்லுங்களேன்.

அவர்கள் பயணிப்பது
குமரகத்து படகு வீட்டிலோ
 ரயிலின் கூப்பேயிலோ அல்ல,
ஐம்பது பேர் அமர்ந்தும்
ஐம்பது பேர் நின்றும்
பயணிக்கும் பொதுப் பேருந்தில்
பகல் வேளையில்தான்.

பார்ப்பவர் சிலர் கண்களில்
"இது என்ன அசிங்கம்"
என்றொரு எரிச்சல்.

இலவசக் காட்சி கிடைத்ததென்று
சிலருக்கு மகிழ்ச்சி.

காதலுக்கு மரியாதை
கண்ணியமற்ற 
உங்கள் காமத்தால்
காணாமல் போகிறது.

காதிலே வழியும் இசை தாண்டி
எனக்குக் கேட்ட 
உங்களுக்கான வசவு
உங்கள் செவிகளில்
மட்டும் எட்டவேயில்லை.

நீங்கள் யாராவது 
அவர்களுக்குச் சொல்லுங்களேன்.

என்னை முறைத்தது போலல்லாமல்
உங்கள் சொற்களையாவது
அவர்கள் கேட்கக் கூடும்.

(நேற்று கிடைத்த ஒரு மோசமான அனுபவத்தின்
வெளிப்பாடு)
 
 

2 comments: