Thursday, June 25, 2015

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க





இன்னும் எத்தனை விசித்திரமான தீர்ப்புக்களை இந்திய நீதிமன்றங்கள் அளிக்கப் போகிறதோ?

மைனர் சிறுமியை பாலியல் கொடுமை செய்தான் ஒரு கயவன். கர்ப்பமுற்ற அந்தப் பெண் ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தாள். டி.என்.ஏ சோதனை முடிவு வெளிவரும் வரை தான் ஒரு யோக்கியன் என்றே வாதிட்டுக் கொண்டிருந்தான் அவன்.

அந்த சிறுமியோ இல்லை அவளது குடும்பத்தினரோ எந்தவொரு சமரசத்தையோ இல்லை இழப்பீடையோ விரும்பவில்லை. கேட்கவில்லை. மாறாக தவறிழைத்த அந்த கொடூரனை சட்ட ரீதியாக தண்டிக்கவே விரும்பினார்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பாவி பிணை கேட்டான். அவன் என்ன உரிமைக்காக போராடிய தொழிலாளியா இல்லை தன் நிலத்தை பன்னாட்டுக் கம்பெனி அபகரிக்கக் கூடாது என்று குரல் கொடுத்த விவசாயியா, பிணையை மறுப்பதற்கு?

திருடர்களுக்கும் மோசடிப் பேர்வழிகளுக்கும் உதவி செய்வதற்கு ஆட்சியாளர்களின் ஈர இதயத்தில் மனிதாபிமானம் பொங்கி வழியும் காலமல்லவா இது? பாலியல் கொடுமை செய்தவன் மீது நீதிபதிக்கு மட்டும் மனிதாபிமானம் வாராதா என்ன?

பிணை கொடுத்தார். அதற்கொரு விளக்கம் சொல்லியுள்ளார் பாருங்கள். அப்படியே மெய் சிலிர்க்கும்.

“இந்த பிரச்சினைக்கு ஒரு இனிய முடிவு வர வேண்டுமானால், குற்றம் செய்தவனே அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால், அதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டுமானால் இந்த உத்தமன் உள்ளேயிருந்தால் அது எப்படி சாத்தியம்? ஆகவே அவருக்கு பிணை அளிக்கிறேன்” என்று அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வது போல சிறைக் கதவுகளை திறக்க வைத்திருக்கிறார்.

“இது என்ன அபத்தம்?” என்று நாம் கேட்பதற்கு முன்பாக அந்தப் பெண்ணே கேட்டு விட்டாள். அவனோடு சேர்ந்து வாழ்வது என்பதெல்லாம் முடியாத காரியம் என்றும் ஆணித்தரமாக சொல்லி விட்டாள். பாலியல் வன் கொடுமை வழக்குகளில் சமரசப் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமே கிடையாது என்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு முற்றும் முரணானது சென்ன உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்று பல சட்ட வல்லுனர்களும் கூறியுள்ளனர்.

ஒரு திரைப்படத்தில் விவேக் பாலியல் குற்றவாளிக்கு அளிக்கும் தீர்ப்பு போல தீர்ப்பளிக்க முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். அதற்காக ஆலமரத்தடி நாட்டாமைகளாகவா நீதியரசர்கள் செயல்படுவது? இன்னும் எத்தனை குமார சாமிகள் இந்தியாவில் இருக்கின்றனரோ?

ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க…..

4 comments:

  1. பாசக ஆட்சியில் நீதித்துறை இப்படி பல் இளிக்கிறது, போகிற போக்கை பார்த்தால் விவேக் வசனங்களில் வருபவை எல்லாம் இனி தீர்பாக வரும் போல....... அட போங்கப்ப நீங்களும் உங்க தீர்ப்பும்........

    ReplyDelete
  2. ஜட்ஜய்யா, தீர்ப்பை மாத்துங்க…..

    ReplyDelete
  3. கொடுமை. இன்னும் எத்தனை குமார சாமிகள் தோன்றி இந்தியாவில் தீர்ப்பளிக்கபோகிறார்களோ :(

    ReplyDelete
  4. Do not worry sir, soon a group of people planned to take the law in our hand like indian/anniyan movie. at least we can create a awareness like kannukkuu kann pallukku pall..... we cannot tolerate any more...

    ReplyDelete