Friday, March 20, 2015

நிஜத்தில் நடக்காமல் போன "கௌரவம்" சண்டை




வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா ஒரு கோபக்கார ஆசாமி.

வி.பி.சிங்கின் ஜன மோர்ச்சா கட்சியில் இருந்தவர் இவர். வி.பி.சிங் பிரதமராக பதவியேற்றபோது இவருக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைத்தது. ஜனாதிபதி மாளிகைக்கு வரும் வழியில்தான் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி கிடையாது, இணையமைச்சர் பதவிதான் என்று தெரிந்தது. அமைச்சர் பொறுப்பேற்காமல் பாதி வழியிலேயே வீடு திரும்பிய ரோஷக்காரர்.

பிறகு சந்திரசேகர் கட்சிக்கு தாவி அப்புறம் பாஜக கட்சிக்கு மாறி வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்  கேபினட் அமைச்சராகி தன் மோகத்தை தணித்தவர்.

பாஜக வில் இருந்த போது கூட அவ்வப்போது போர்க்குரல் எழுப்பிக் கொண்டே இருப்பார். பதவியை ராஜினாமா செய்வார் இல்லையென்றால் பதவியில் இருப்பவர்களை திட்டி கடிதம் எழுதுவார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் இவர்தான் நாடாளுமன்ற நிதியமைச்சகத்தின் நிலைக்குழுத் தலைவர். இவர் தலைமையிலான அந்த நிலைக்குழுதான் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை 26 % லிருந்து 49 % ஆக உயர்த்துவது அவசியமில்லை என்று ஏக மனதாக பரிந்துரை அளித்தது. 

உலக நிதி நெருக்கடி காரணமாக பன்னாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடு செய்யப்பட்டிருந்த மக்களின் சேமிப்பு காணாமல் போய் விட்டது என்பதையும் அன்னிய நேரடி முதலீட்டு உயர்வால் இந்தியப் பொருளாதாரத்திற்கு எந்த நன்மையும் கிடையாது என்பதையும் பல்லாயிரம் கோடிகள் எல்லாம் வராது என்பதையும் அந்த பரிந்துரை மிகவும் அழுத்தமாகவே சொல்லியிருந்தது.

ஆனால் பாருங்கள், பாஜக வின் மோடி சர்க்கார், யஷ்வந்த் சின்கா  குழு என்ன பரிந்துரை கொடுத்ததோ அதையெல்லாம் நிராகரித்து கொல்லைப்புற வழியாக இன்சூரன்ஸ் மசோதாவை சட்டமாக்கி விட்டது.

இதிலே நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி நாடாளுமன்றத்தை தான் சமாளிப்பதற்குப் பதிலாக தன்னுடைய இணையமைச்சரை விட்டே மசோதாவை தாக்கல் செய்வது, உண்மைக்கு முரணான விஷயங்களை பதில் சொல்ல வைப்பது போன்ற நடவடிக்கைகளை நிகழ்த்தி விட்டார்.

"கௌரவம்" படம் போல "நீயும் நானுமா கண்ணா, நீயும் நானுமா" என்று 
யஷ்வந்த் சின்கா  அந்த இணையமைச்சரோடு  ஆக்ரோஷ்மாக சண்டை போடுவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். என் பரிந்துரைக்கு எதிராக நீயே பேசலாமா என்று கேட்பார் என்றும் நினைத்தேன்.

ஆமாம் அவர் மகன் ஜெயந்த்  சின்கா தான் அந்த இணையமைச்சர்.

கௌரவத்தில் பெரியப்பா பாரிஸ்டர் ரஜனிகாந்த அநீதிக்கு ஆதரவாக நிற்கும் போது மகன் கண்ணன் பொங்கி எழுவான்.

இங்கே மகன் அநீதிக்கு துணை போகும் போது அதுவும் தனது பரிந்துரைக்கு எதிராகவே செயல்படும் போது அப்பாவிற்கு கோபம் வரவில்லை.

திரைப்படத்தில் சாத்தியமானது நிஜத்தில் நிகழவில்லை.

ம்கனும் எதிர்காலத்தில் கேபினெட் அமைச்சராக வேண்டுமல்லவா. . . 

பின் குறிப்பு : இந்த கௌரவம் ஸ்டில்லிற்காக எவ்வளவு மெனக்கெட வேண்டியிருந்தது தெரியுமா? பாடலை யுட்யூபில் ஓட விட்டு, Pause செய்து, பிறகு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை க்ராப் செய்து - இவ்வளவு வெட்டி வேலை தேவையா என்று கூட தோன்றியது.

No comments:

Post a Comment