Tuesday, October 27, 2020

சார், குஷ்பு சார் . . .

 


போராட்டம் நடத்துபவர்களை காவல் துறை இது நாள் வரை எப்படி நடத்தியுள்ளது என்பதற்கு கீழே உள்ள படங்கள் சான்று.

 







 "வன்முறையில்லா தமிழகம், போதையில்லா தமிழகம்" என்ற முழக்கத்தோடு சென்னை நோக்கி இரண்டு குழுக்களாக வடலூரிலிருந்தும் திருவண்ணாமலையிலிருந்தும் நடைப்பயணம்  சென்ற போது அவர்களை சென்னைக்குள் அனுமதிக்காது கைது செய்த போது கண்ணியமான முறையில் காவல்துறை நடத்திய போது எடுத்த படங்கள் அவை.

 பொதுவாகவே அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கும் நடைமுறையும் உள்ளது. வாயில் வைக்க முடியாத ஒரு சாப்பாட்டை தருவார்கள். எனக்கு அப்படிப்பட்ட அனுபவம் இரண்டு முறை நடந்துள்ளது.

 எட்டு வழிச்சாலைக்கு எதிரான நடைப்பயணத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போது தோழர் கே.பி, தோழர் உ.வாசுகி உள்ளிட்ட தோழர்கள் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டார்கள். அப்போது போட்ட மிளகாய் பொடி சோறு என்று ஒரு சிவப்பு நிற வஸ்துவின் படத்தை தோழர் இ.பா.சிந்தன் பகிர்ந்து கொண்டது இப்போதும் நினைவில் உள்ளது.

 ஆனால்

 இன்று தோழர் தொல்.திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்த புறப்பட்ட காவிச்சாயம் பூசிக்கொண்டும் இன்னும் பெரியாரிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிற திருமதி குஷ்பு அவர்களுக்கு என்ன விதமான கவனிப்பு தரப் பட்டுள்ளது என்பதை கவனியுங்கள். அந்த நாற்காலியே சொல்லும் அதை . . .. 

 


ஏன்?

ஏன்?

ஏன்?

 

ஏன் இந்த சிறப்பு கவனிப்பு?

 ஏதோ ஒரு திரைப்படம். பெயர் நினைவில் இல்லை. அதிலே இயக்கப்படும் ஒரு திரைப்படத்தின் நாயகியாக ரம்பாவை பார்த்ததும் அதன் இயக்குனர் விவேக்கிடம்,  பார்த்திபன்  புல்லரித்துப் போய் “சார், ரம்பா சார்” என்று வாயில் திரவம் வடிய சொல்வார்.

 அது போல யாராவது காவல்துறை அதிகாரி

“சார், குஷ்பூ சார்” என்று புல்லரித்து போய் சிறப்பு கவனிப்பு அளித்திருப்பாரோ?

இல்லை.

அவர் பூசியுள்ள காவிச்சாயத்திற்கும் காக்கிச் சட்டைக்கும் உள்ள ஆண்டான் அடிமை உறவுதான். 

 

இது தொடர்பாக இரண்டு மீம் பார்த்தேன். நீங்களும் வாய் விட்டு சிரியுங்கள்




மா.கெ.பி தேவையா பாஜக முருகன்?

 


தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களின்  பதிவு அது. 

என்ன முருகன், இந்த அசிங்கம் தேவையா?

உங்க மிரட்டல் இப்படி காமெடி ஆயிடுச்சே! பாஜகவே வெறும் காமெடிக்குத்தான் உங்களை மாநிலத் தலைவரா வச்சுக்கிட்டு இருக்காங்க. 



உங்க கல்வி அணி செயலாளர் கூட உங்களை மதிக்கலை. ஆனா அந்தாளுக்கு உங்களை முட்டு கொடுக்க வச்சிருக்காங்க.

இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா?

Monday, October 26, 2020

காஷ்மீர் ஒற்றுமை வெல்லட்டும்

 தோழர் ஸ்ரீரசா அவர்களின் முகநூல் பதிவிலிருந்து . . .



ஜம்மு-காஷ்மீர் அரசியல் கட்சிகளின் கூட்டணி உதயம்
பரூக் அப்துல்லா - தலைவர், யூசுப் தாரிகாமி - கன்வீனர்
புதுதில்லி, அக். 26-
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ஏழு கட்சிகள் இணைந்து, பிஏஜிடி என்னும் ‘குப்கார் பிரகடனத்தின் மக்கள் கூட்டணி’ என்னும் பெயரில் ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தி இருக்கின்றன. தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இதன் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முதுபெரும் தலைவருமான யூசுப் தாரிகாமி இதன் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இக்கூட்டமைப்பின் கூட்டம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இக்கூட்டணிக்கு ‘பிஏஜிடி’ என்கிற ‘பீப்பிள்ஸ் அல்லயன்ஸ் ஃபார் குப்கார் டெக்ளரேஷன்’ என்று (PAGD People’s Alliance for Gupkar Declaration) பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் தலைவராக ஃபரூக் அப்துல்லா, கன்வீனராக முகமது யூசுப் தாரிகாமி, துணைத் தலைவராக திருமதி மெகபூபா முப்தி (பிடிபி) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருமதி மெகபூபா முப்தியின் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா, கூறியதாவது:

“இக்கூட்டணி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை மீண்டும் கொண்டுவருவதற்குப் போராடும். இது ஒரு பாஜக எதிர்ப்பு மேடையே தவிர, இது தேச விரோத கூட்டமைப்பு அல்ல.

பாஜக, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததன் மூலமும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததன் மூலமும் இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்பைத் தகர்த்திட முயற்சிக்கிறது. அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அழித்திட முயற்சிக்கிறார்கள். அதன்மூலம் இந்த நாட்டையே பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். இந்த நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறையையே தகர்த்திட முயற்சிக்கிறார்கள். இதைத்தான் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று நாம் பார்த்தோம்.

பாஜக, ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களையும், லடாக் மக்களையும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் முயற்சி வெற்றி பெறாது. இது ஒன்றும் மத ரீதியான போர்க்களம் அல்ல. இது எங்கள் அடையாளத்திற்கான போராட்டம். எங்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் ஒன்றிணைந்திருக் கிறோம்.”

இவ்வாறு ஃபரூக் அப்துல்லா கூறினார்.

இக்கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் பதினைந்து நாட்களில் ஜம்முவில் நடைபெறவிருக்கிறது என்றும், அதற்கு அடுத்து நவம்பர் 17 அன்று இக்கூட்டமைப்பின் சிறப்பு மாநாடு ஸ்ரீநகரில் நடைபெறவிருக்கிறது என்றும் இக்கூட்டமைப்பின் செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் லோன், செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறுகையில் கடந்த ஓராண்டில் இந்த மாநிலத்தில் அரசு சார்பில் நடைபெற்றுள்ள வேலைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம் என்றும், அரசாங்கத்தின்அரசமைப்புச்சட்ட மாற்றங்களை எதிர்க்கிறோம் என்பதைக் காட்டும் விதத்தில் இம்மாநிலத்தின் முந்தைய மாநிலக் கொடியையே பயன்படுத்த இருக்கிறோம் என்றும் கூறினார்.

இந்தக் கூட்டமைப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவரான ஏ.ஆர். துருக்ரூ இணைந்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநில காங்கிஸ் கட்சியின் தலைவர் குலாம் அகமது மீர், உடல்நலக்குறைவின் காரணமாக, கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை.

அரசியல் மாற்றங்களை தள்ளி வைத்து காஷ்மீர் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க உருவாகியுள்ள இந்த ஒற்றுமை வெல்லட்டு. மோடி வகையறாக்களின் சதி முறியடிக்கப்படட்டும். . .

அண்ணா பல்கலைக்கழகத்தை சிதைக்க அனுமதியோம்

 

அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!



அண்ணா பல்கலைக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுவதை அனுமதியோம்!

@ @ @

பாஜக அரசின்முன்வைப்புகளில் ஒன்றான இந்த “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள்” (Institution of Eminence – IoE) எனப்படும் வரையறையின்கீழ் 10 அரசு பல்கலைக்கழகங்களையும் 10 தனியார் பல்கலைக் கழகங்களையும் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை பா.ஜ.க அரசு 2017 முதல் கூறிவந்தது. அப்போதைய மத்திய கல்வி அமைச்சர் ஜவடேகர் முதன் முதலில் இந்தக் கருத்தை முன்வைத்தார்., பல்கலைக் கழக நல்கைக் குழு (UGC) அதற்கான நெறிமுறைகளை அதே ஆண்டில் வெளியிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து அரசு பல்கலைக் கழகங்களையும் பத்து தனியார் பல்கலைக் கழகங்களையும் இப்படி “உயர் சிறப்புப் பல்கலைக் கழகம்” எனப் பிற பல்கலைக் கழகங்களிலிருந்து தனியே பிரித்து உயர்நிலை நிறுவனங்களாக மாற்றப்படுவது குறித்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் நாள் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்தது. கல்வி உரிமைக்காகவும், அடித்தட்டு மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் கல்வியாளர்கள் மட்டுமின்றி, பாஜக அரசின் கல்விக்கொள்கையை எதிர்க்கும் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் அப்போதே இப்படிப் பல்கலைக் கழகங்களில் உயர்வு – தாழ்வுத் தரவேறுபாடுகள் ஏற்படுத்தப்படுவதை எதிர்த்துக் குரல் எழுப்பினர். ஆனால் “உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களை உருவாக்கும் திட்டம்” எனக் கூறிக்கொண்டு பாஜக அரசு கல்வியாளர்களின் இந்த எதிர்ப்புகளை எல்லாம் புறந்தள்ளி தங்கள் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக இருந்து இறுதியில் அதை இன்று இப்படி நடைமுறைப் படுத்தவும் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பல்கலைக் கழகங்களுக்கும் நிதி ஆதாரத்தை கூடுதலாக ஒதுக்கி மேம்படுத்துவதற்குப் பதிலாக இப்படிப் 10 அரசு உயர் கல்வி நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மட்டும் ஒவ்வொன்றுக்கும் 1000 கோடி அளிக்கப்படும் என இப்போது முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது. . இது தவிர மேலும் 10 தனியார் உயர் கல்வி நிறுவனக்களும் இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு நிறுவனங்களில் 100 மாணவர்களைச் சேர்த்தால் அதில் 30 பேர்கள் வரை வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் எனவும், தகுதி – தர அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கப்படவேண்டும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 30 பேர்கள் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம் என்பதன் பொருள் நமது மாணவர்கள் 30 பேர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது என்பதுதான். அது மட்டுமல்ல ஆசிரியப் பணியில் 25 சதம்வரை வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 20 சதம் வரை “ஆன் லைன்’ முறையில் கல்வி பயிற்றுவிக்கவும் இவற்றுக்கு அனுமதி உண்டு.

பாடத்திட்டத்தைப் பொருத்தமட்டில் இந்த நிறுவனங்கள் எவற்றை வேண்டுமானாலும் உள்ளடக்கிக் கொள்ளலாம். (complete flexibility in curriculum and syllabus). இது பொறியியற் கல்விக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையையும் பாடமாகச் சேர்ப்பது போன்ற வேலைகளைச் செய்வதற்கு வழி செய்வதுதான் என்பதை விளக்க வேண்டியதில்லை. வரலாற்றுப் பாடங்களில் இது என்ன மாதிரித் தகிடுதத்தங்களுக்கு வாய்ப்பளிக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

எல்லாவற்றையும் விடப் பெருங் கொடுமை என்னவெனில் கல்விக் கட்டணம் நிர்ணயிப்பது, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் இந்நிறுவனங்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களாயினும் சரி, உள் நாட்டு மாணவர்களாயினும் சரி UGC, ACTE முதலானவற்றின் ஒப்புதல் எதுவும் பெற வேண்டிய அவசியம் இல்லை.

இவை எல்லாமே நம்மவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடியதுதான். தகுதி, திறமை எனும் பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவுகள் உயர் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

இந்த ஆண்டு அக்டோபர் 20 அன்று பல்கலைக் கழக மான்யக் குழு (UGC) அனைத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் கடிதம் ஒன்றை [D.O.No. 1 – 18 / (CPP.II)] அனுப்பியுள்ளது. அதில், ”தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ’தேசிய கல்விக் கொள்கை (2020) இன் அடிப்படையில் உரிய சீர்திருத்தங்களைச் (governance reforms) செய்தாக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்தமாதத் தொடக்கத்தில் அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா ஒரு அதிரடி நடவடிக்கையைச் செய்தார். அப்பல்கலைக் கழகம் IoE நிலை பெறுவதற்குத் தேவையான முதலீடான 1500 கோடி ரூபாய்களையும் தானே திரட்ட முடியும் எனவும், தொடர்ந்து ஆண்டுக்கு 314 கோடி ரூபாய்களையும் தன்னால் திரட்டமுடியும் எனவும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது அம்பலமானவுடன் இப்போது இந்த IoE பிரச்சினை பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கிறது,.

இந்தப் பெருந் தொகையை ஒரு பல்கலைக் கழகம் எப்படித் திரட்ட முடியும்? மாணவர் கட்டணம், தேர்வுக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் ஆகிவற்றை எல்லாம் உயர்த்தாமல் இது எப்படிச் சாத்தியமாகும்?

இல்லை IoE க்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி தொலைக் கல்வித் திட்டங்களை அறிவித்துக் காசு திரட்டப் போகிறார்களா? பின் எப்படி இந்த நிதியைத் திரட்டப் போகிறார்கள்? சூரப்பர் தன் திட்டத்தை வெளிப்படையாக அறிவிப்பாரா?

கல்வி இன்னும் மத்திய மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதையும், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏற்புடையதல்ல என்பதையும் சூரப்பர் மறந்தாரா? இல்லை அதுவும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகளில் ஒன்று என நினைக்கிறாரா?

இப்படி அவர் மாநில அரசின் ஒப்புதல் எல்லாம் இல்லாமல் முடிவெடுப்பது இது முதல் முறையல்ல. தோல்வியுற்ற பாடங்களில் (arrears) மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறித்து இதற்கு முன் அவர் AICTEக்கு கடிதம் எழுதினார். அதுவும்கூட மாநில உயர்கல்வி அமைச்சரை மீறிய செயல்தான்.

தனது திட்டங்களின் ஊடாக 69 சத இட ஒதுக்கீடு என்பது பாதிப்புக்கு உள்ளாகாது என சூரப்பர் இன்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதற்கான சாத்தியமும் இவர்கள் திட்டத்தில் இல்லை. UGC உருவாக்கியுள்ள IoE வழிகாட்டும் நெறிமுறை பிரிவு 4.2.5 –இல், ” There should be a transparent merit based selection in admissions, so that the focus remains on getting meritorious students ” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது தகுதி மிக்க மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இந்த மாணவர் தேர்வு அமைய வேண்டுமாம். இதற்கெல்லாம் உரிய சட்டத் திருத்தம் இல்லாமல் IoE நிலை திணிக்கப்படுமானால் இட ஒதுக்கீடு எப்படிச் சாத்தியப்படும்?

சரி 69 சத ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதும் என IoE நிலையை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

முடியாது. இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவோம். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துக் கல்விக் கட்டணங்களை உயர்த்தினால் எளிய மாணவர்கள் இந்தச் சிறப்பு நிறுவனங்களுக்குள் காலடி எடுத்து வைக்க முடியுமா?

இப்படி உயர் சிறப்புக் கல்வி நிறுவனம் என்றெல்லாம் அறிவித்து கல்விச் சந்தை ஒன்றை அரசே உருவாக்குவதை ஏற்க முடியாது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தை IoE நிலைக்கு மாற்றுவது எங்களுக்கு உடன்பாடில்லை எனத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளது குறிப்பிடத் தக்கது. அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனச் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இதற்கெல்லாம் சூரப்பரிடம் எந்தப் பதிலும் இல்லை.

பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் முருகன் துணைவேந்தர் மேல் நடவடிக்கை எடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என வரிந்து கட்டிக் கொண்டு வந்துள்ளதையும் காண்கிறோம். இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. கல்வி என்பது இன்னும் மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது. அப்படி இருக்கையில் அதெப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி ஒரு துணைவேந்தர் எதையும் செய்யலாம்? செய்வோம் என ஒரு ஆளும்கட்சியின் தலைவர் திமிர் பேசுவதன் பொருள் என்ன? இந்த நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

சில கேள்விகளைத் தமிழக முதலமைச்சர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

1. IoE வேண்டாம் எனக் கூறும் மாநில அரசு அண்ணா பல்கலைக்கழகத்தை Anna Technical and Research University என்றும் Anna Affiliating University எனவும் இரண்டாகப் பிரித்ததன் பின்னணியும் நோக்கமும் என்ன? இது IoE எனவும் Affiliating University எனவும் இரண்டு தரங்களாகத் தொழிற் கல்வியைப் பிரிப்பதுதானே?

2. உயர் கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளது போல் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றால் எஞ்சியுள்ள 20 பல்கலைக் கழகங்களின் நிலை என்ன? அவற்றின் நிதி ஆதாரங்களை மேம்படுத்த அரசிடம் ஏதும் திட்டமுள்ளதா? இல்லை அவை இரண்டாம்தர மூன்றாம்தரக் கல்வி நிறுவனங்களாகத் தொடர வேண்டியதுதான் அவற்றின் தலைவிதியா?

3.தேசிய கல்விக்கொள்கை 2020 அமலாக்கத்துக்குப்பின் UGC கலைக்கபடும் என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கையிலிருந்து நாம் புரிந்து கொள்வது. இனி நிதி மான்யம் வழங்குவதை கல்வி அதிகாரங்களை மிகத் தந்திரமாக சகுனித் தனத்துடன் மையப்படுத்தி வரும் பாஜக அரசு கையில் வைத்துக் கொள்ளப் போகிறது. அதை எதிர்க்காமல் மத்திய அரசின் நிதி ஆதாரம் பெற வாய்ப்புண்டா?

4. நிகர்நிலை பல்கலைக்கழகமான வேலூர் VITக்கு IoE நிலை அளிக்கப் பட்டுள்ளதைத் தமிழக அரசு ஏற்கிறதா?

5. தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் IoE நிலை வழங்குவது, பல்துறை வளாகங்களாக (Multidisciplinary University) பல்கலைக் கழகங்களை மாற்றுவது, மூன்று தரங்களில் தன்னாட்சி நிலையை (Graded Autonomy) கல்லூரிகளுக்கு வழங்குவது , UGC கலைக்கப்படுவது போன்ற திட்டங்களைத் தேசியக் கல்விக்கொள்கை 2020 முன் வைக்கிறதே அது பற்றி தமிழக அரசின் கருத்தென்ன? . தேசிய கல்விக் கொள்கை 2020 பற்றி ஆராயக் குழு ஒன்று அமைத்தீர்களே அதன் அறிக்கை என்னாயிற்று?

6. துணைவேந்தர் சூரப்பா அண்ணா பல்கலைக்கழகப் பேரவை மற்றும் ஆட்சிக்குழு, நிதிக்குழு முதலானவற்றின் ஒப்புதல் இல்லாமல் தானே நிதி திரட்டமுடியுமென அறிக்கை விடுகிறாரே அது குறித்துத் தமிழக அரசின் நடவடிக்கை என்ன?

7.அண்ணா பல்கலைக்கழகப் பாடதிட்டத்தில் பகவத் கீதை Credit course ல் வைக்கப்பட்டவுடன் எதிர்ப்பு வரவே அது நிறுத்தப்பட்டது போலப் பாவலா செய்து இப்போது அது Audit courseல் திணிக்கப் பட்டுள்ளது. இது அரசியல் சட்ட அடிப்படைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்துத் தமிழக அரசின் நிலைபாடு என்ன?

மக்களின் இந்த ஐயங்களுக்குத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

இப்படிக் கல்வி முறையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை அரசே உருவாக்கிப் பணமும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என ஆக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட அடிப்படைக் கல்விக் கொள்கை. மோடி தலைமையில் பா.ஜ.க அரசு உருவாக்கப்பட்ட கணத்திலிருந்து அந்தத் திசையிலேயே கல்விக் கொள்கை உருவாக்கங்கள் நகர்கின்றன. பெயருக்குத்தான் இன்று கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில் உள்ளது. மற்றபடி இப்போது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை (2020)-இன்படி கல்வி அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசின் பிடிக்குள் சென்றுவிட்டன, அதன் விளைவே இன்று இப்படி அண்ணா பல்கலைக் கழகம் சீரழிக்கப்படுவது. தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததோடு நிறுத்திக் கொண்டது. மற்ற மாநில அரசுகள் அதையும் செய்யவில்லை. இதற்கிடையில் ஒரு நாள் தேசிய கல்விக் கொள்கை (2020) ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக மத்திய அரசு அறிவித்துக் கொண்டது.

அதன் விளைவே இவை எல்லாம். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டுள்ளது.

எனவே,

அண்ணா பல்கலைக் கழக நிர்வாகமே! தமிழகத்தின் பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரித்துச் சீரழிக்கும் முயற்சியை நிறுத்து!

மத்திய அரசே! “உயர் சிறப்புப் பல்கலைக் கழகங்கள் (Institution of Eminence – IoE) என இந்திய அளவில் 20 பல்கலைக் கழகங்களை மட்டும் அறிவித்து மற்ற நூற்றுக் கணக்கான பல்கலைக் கழகங்களில் படிக்க நேரும் ஏழை எளிய மாணவர்களை இரண்டாம் தர மூன்றாம் தர மக்களாக ஆக்கும் கொடுமையை நிறுத்து!

மத்திய அரசே! இப்படி உயர்கல்வி நிறுவனங்களைத் தரம் பிரித்து ஏற்றத் தாழ்வான மூன்றடுக்கு நிலை ஏற்படுத்துவதைக் கைவிடு!

மாநில அரசே! இன்னும் கல்வி என்பது மத்திய – மாநிலப் பட்டியலில்தான் உள்ளது என்பதை மறவாதே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசைச் சூரப்பா போன்ற துணைவேந்தர்கள் அவமானப் படுத்துவதையும், தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்கு உள்ளாக்குவதையும் உறுதியாக எதிர்த்து நில்!

பெற்றோர்களே! பொதுமக்களே! ஆசிரியர்களே! மாணவர்களே! பெருமைக்குரிய அண்ணா பல்கலைக் கழகம் இவ்வாறு இரண்டாகப் பிரிக்கப்படுவதை உறுதியாக நின்று எதிர்ப்பீர்!

#அண்ணா_பல்கலைக்கழகத்தைக்_காப்போம்!

இப்படிக்கு,

அக்கறையுள்ள கல்வியாளர்களும் தமிழ் மக்களும்

***********************************************************************************

வணக்கம்!

நமது “அண்ணாபல்கலைக் கழகத்தை இரு நிறுவனங்களாகப் பிளவுபடுத்துவதை அனுமதியோம்” எனும் அறிக்கையை ஒரு சிறு ஆங்கிலக் குறிப்புடன் நாடறிந்த கல்வியாளர்களுக்கு திரு. கஜேந்திர பாபு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் தம் பெயர்களையும் இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இது தவிர முனைவர் ப. சிவக்குமார், அ,மார்க்ஸ் ஆகியோரின் பதிவுகளிலும் நண்பர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க நாளை இரவுவரை ஒப்புதல் அளிப்பவர்களையும் கண்டனம் செய்பவர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்வது என முடிவு செய்துள்ளோம். இதுவரை கையொப்பம் இடாதவர்கள் உடன் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
ப.சிவக்குமார், அ.மார்கஸ்

பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் முக நூல் பதிவிலிருந்து . . . .



Sunday, October 25, 2020

இவ்வளவுதான் தமிழக சங்கிஸ்

 விளக்கம் தேவையில்லை.



பேதமற்றதா (கொரோனா) பெருந்தொற்று?



 *பெருந்தொற்று- பேதம் அற்றதா...*



----------------------------------------------------

க.சுவாமிநாதன்
துணைத்தலைவர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

கொரானாவுக்கு சாதி - மதம் - வர்க்க பேதமில்லை என்று சிலர் சில உயிர் இழப்புகளை முன் வைத்து எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கலையுலக ஆளுமைகள் என பலரும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதும், இரையாகி இருப்பதும் இக் கருத்தை வலுப்படுத்துகின்றன. சிலர் நல்ல எண்ணத்தோடு கூட இது போன்ற பதிவுகளை சமுக வலைத் தளத்தில் பகிர்கிறார்கள். சுற்றுக்கு விடுகிறார்கள். இவர்களில் நோக்கம் உள்ளவர்களும் உண்டு. அப்பாவித் தனமாக நம்புபவர்களும் உண்டு. சிலர் உள் நோக்கத்தோடு கொரொனா பரவலுக்கு மதச் சாயம் பூசினார்கள் என்பது தனிக்கதை. ஆனால் உலகம் முழுக்க உழைப்பாளி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களே கொரொனா நெருக்கடியின் சுமையை அதிகமாக சுமக்கிறார்கள் என்பதே உண்மை. 

*மரணத்தின் நிறம் என்ன?*

இது அமெரிக்காவில் எழுந்துள்ள கேள்வி. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எது அளவு கோல்? எல்லோருக்கும் கல்வி கிடைக்கிறதா? சுகாதாரம் இருக்கிறதா? நல்ல குடிநீர் கிடைக்கிறதா? இவையெல்லாம் அளவு கோல்களாக உலக மய காலத்தில் கருதப்படுவதில்லை. மொத்த உள் நாட்டு உற்பத்தி (GDP) எவ்வளவு? எவ்வளவு வளர்ச்சி விகிதத்தை அது எட்டுகிறது என்பதே 30 ஆண்டுகளாக இந்தியாவிலும், 50 ஆண்டுகளாக மேலை நாடுகளிலும் அளவு கோல்களாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. 

உலக மக்கள் தொகையில் 4 % கொண்ட அமெரிக்கா உலக ஜி.டி.பியில் 13 % ஐ வைத்திருக்கிறது என்பதால் அதை உலகப் பெரும் வல்லரசாக சொல்கிறார்கள். ஆனால் கொரொனா அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ளது. செப் 25,  2020 அன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் தொற்றுக்கு ஆளாகி இருப்பவர்கள் 3 கோடியே 24 லட்சம் பேர். மரணங்கள் 9, 88,000 பேர். இவர்களில் அமெரிக்க நோயாளிகள் 71 லட்சத்து 85 ஆயிரம் பேர். அமெரிக்க மரணங்கள் 2,07,000. உலக மக்கள் தொகையில் 4%... ஜி.டி.பியில் 13%... ஆனால் தொற்றுக்கு ஆளான உலக நோயாளிகளில் 22%. உலக மரணங்களிலும் 21%. இதுவே அமெரிக்காவின் நிலைமை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.  பொது சுகாதாரத்தை அந்த நாடு கை கழுவியது ஒரு முக்கிய காரணமாக அந்த நாட்டின் பிரபல பொருளாதார நிபுணர் நோம் சாம்ஸ்கி போன்றோரே சுட்டிக் காட்டியுள்ளனர். நவீன தாராள மயத்தின் கோட்பாடான "அரசு பொருளாதாரத்தில் இருந்து விலகி கொள்ளுதல்" என்பதன் அமலாக்கமே அது. 

அமெரிக்காவே பாதிக்கப்பட்டு விட்டது என்பது கொரொனாவின் "பாரபட்சமற்ற" தாக்குதலுக்கு உதாரணமாக சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கும் பொது சுகாதாரம் யாருக்கு அதிகம் மறுக்கப்பட்டதோ அவர்களே அதிகம் இலக்காகி உள்ளனர் என்பதே உண்மை. 

இதோ *சி.என்.பி.சி* செய்திக் கட்டுரை (27.05.2020) தரும் தகவல். 

*"அமெரிக்க மக்கள் தொகையில் 13 % உள்ள கறுப்பின மக்கள் கொரொனா உயிர் இழப்புகளில் 23 % ஆக உள்ளனர்... வருமான ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள், சுகாதார மறுப்பு ஆகியன ஆப்ரிக்க- அமெரிக்க மக்களை, குறைவான வருமானம் உள்ளவர்களை அதிக அளவில் கொரொனா தாக்குவதற்கு இட்டுச் சென்றுள்ளன. இவர்கள் மத்தியில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஆஸ்துமா ஆகியன  உள்ளன."*

இதோ இன்னொரு ஆய்வு.( https://www.cidrap.umn.edu/news-perspective/2020/08/us-blacks-3-times-more-likely-whites-get-covid-19 ) ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் அறிக்கையின்படி வெள்ளையர்களை விட கறுப்பு அமெரிக்கர்கள் மூன்று மடங்கு தொற்றுக்கும், இரண்டு மடங்கு மரணங்களுக்கும் அதிகமாக ஆளாக வேண்டியிருக்கிறது. 

அமெரிக்காவின் மிட்சிகன் மாநிலத்தில் மக்கள் தொகையில் 14 % ஆக உள்ள கறுப்பின மக்கள் மரணங்களில் 39% ஆக உள்ளனர். வெள்ளையர் மரணங்களை விட 4 மடங்கு 5 மடங்கு என்ற அளவில் கறுப்பு மக்களின் மரணங்கள் பல பகுதியினர் மத்தியில் உள்ளது.

*ஏழ்மையும் கொரொனாவும்*

இது அமெரிக்காவின் நிலைமை மட்டுமல்ல. ஏழை மக்கள் கொரொனா தொற்றுக்கு அதிகம் இரையாவது உலகமெங்கும் நிகழ்கிறது. அமெரிக்காவின் பிரபல நாளிதழ் "தி கார்டியன்" மே 1, 2020 இதழ்

*" பிரிட்டன், வேல்ஸில் மிகவும் வறிய மக்கள் வாழும் பகுதிகளில் கோவிட் மரணங்கள் 1 லட்சத்திற்கு 55 ஆகவும், வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளில் 25 ஆகவும் இருக்கின்றன... ஏழைகள் பகுதியான நியூஹாம் பகுதி ஒரு லட்சத்திற்கு 144 என்ற உச்ச பட்ச மரண விகிதத்தை கொண்டுள்ளது. லிவர் பூல் பகுதியில் 81 ஆக மரண விகிதம் உள்ளது. அப் பகுதியின் உள்ளாட்சி அமைப்பே 2010 ல் இருந்து பெருமளவு பட்ஜெட் வெட்டுக்கு ஆளான பகுதி ஆகும்.*

என்று கூறுகிறது. இங்கிலாந்தில் தொற்றுக்கு இரையானவர்களில் இனச் சிறுபான்மையினர் அதிகம் என்பது இன்னொரு கோணம். 

ஆசியாவின் குடிசைகள் எவ்வாறு கொரொனாவை எதிர் கொள்ள இயலாமல் திணறுகின்றன என்பதை *லண்டன் சர்வதேச சுற்று சூழல் மற்றும் வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின்* செர்சிலியா டகொலி என்பவர் பதிவு செய்துள்ளார். தனி மனித விலகல் எப்படி அவர்கள் வாழ்கிற பகுதிகளில், வீடுகளில் சாத்தியம் என்ற கேள்வியை அந்த ஆய்வறிக்கை எழுப்புகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் வீடற்றவர்களாக, வாழ்வதற்கு குறைந்த பட்ச தேவைகள் அற்ற இல்லங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். "கை கழுவுங்கள்" என்பதே இலவச அறிவுரையாக அரசாங்கங்களால் வழங்கப்படும் நிலையில் உலக மக்கள் தொகையில் 40 % பேருக்கு தண்ணீர் வசதிகள் வீடுகளில் இல்லை என்கிறது ஐ.நாவின் குழந்தைகள் நிதியமான *"யூனிசெஃப்"* (UNICEF). 

*"இன்னொரு கொல்லியாக " பசி*

வளர்ந்த நாடுகளின் ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் அந்த நாட்டின் விளிம்பு நிலை மக்களை அதிகமாக பாதிப்பதை போல உலக அரங்கில் நாடுகளுக்கு இடையேயான பாரபட்சங்களும் மனித குலத்தை அலைக்கழித்து வருகின்றன. 

ஜி 8 வல்லரசு நாடுகளையே கொரொனா அதிகம் தாக்கியுள்ளது. ஆனால் பின் தங்கிய நாடுகளை இன்னொரு கொல்லி அச்சுறுத்தி வருகிறது. வாஷிங்டன் போஸ்ட் இதழ் மே 14, 2020 தரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

*சர்வதேச அமைப்புகள் கடந்த சில வாரங்களில் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உரிய தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், வறுமையும், பசியும் 4 கோடி பேர் உயிர்களை குடிக்கும் அபாயம் உள்ளது.... உலகின் முறை சாரா தொழில்களில் உள்ள தொழிலாளர்கள் 200 கோடி பேரில் 160 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என ஐ.எல்.ஓ அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களே. "*

முப்பது ஆண்டுகள் முன்னேற்றத்தை இந்த கொரொனா பறித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பலர் அன்று வேலை பார்த்தால்தான் அன்று பசி ஆற்ற முடிந்தவர்கள். 

ஆப்ரிக்க நாடுகளில் 65 % மக்கள் மிக நெருக்கமான இடங்களில் வாழ்பவர்கள். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, இல்லங்களில் ஊரடங்கால் முடங்கியுள்ளவர்களில் 85% பேர் சாப்பாட்டை தவிர்க்கிறார்கள் அல்லது குறைவாக சாப்பிடுகிறார்கள் என்கிறது. 

இப்படி சோகக் கதைகள் உலகம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. தொற்று பரவுவதால் பொது சுகாதாரம் பற்றிய மறு பரிசீலனை தேவை என்ற சிந்தனையும், பாரபட்சங்கள் பற்றிய விவாதங்களும், நவீன தாராளமயத்தின் கோட்பாடுகள் பற்றிய கேள்விகளும் உலகம் முழுக்க எழுந்துள்ளன.

அதிகார வர்க்கத்தின் இயலாமை, தோல்விகள் ஒடுக்கப்படும் மக்களை நோக்கியே வன்முறையாக வெளிப்படுகின்றன. 

*இன்னொரு முகம்*

குடும்ப வன்முறைகள் உலகம் முழுக்க வெடித்துள்ளன என்று உலக சுகாதார அமைப்பே தெரிவித்துள்ளது. இன்னும் 6 மாதங்கள் ஊரடங்கு தொடர்ந்தால் 3 கோடி குடும்ப வன்முறைகள் நிகழும்  ஐ.நா பாலின மற்றும் மறு உற்பத்தி அமைப்பு கூறியுள்ளது. இது ஒடுக்குமுறையின் இன்னொரு முகம்.

செப் 28, 1920 ல் வெளியிடப்பட்ட ஐ.நா பெண்கள் (UN Women) மற்றும் ஐ.நா வளர்ச்சி திட்ட (UNDP) அறிக்கையான "உலக பாலின பார்வை கண்காணிப்பு" கூறுவது என்ன? கோவிட் 19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை பொருளாதார சமூக விளைவுகளிலிருந்து காப்பாற்ற பெரும்பாலான நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதே. 42 நாடுகளில் பாலின அணுகுமுறையே இல்லை. 

உலகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களில் 70 சதவீதமானவர்கள் பெண்கள். இருந்தாலும் அவர்கள் ஆண்களுக்கு இணையாக நடத்தப்படவில்லை. 28 சதவீதம் பாலின சம்பள இடைவெளி சுகாதாரத் துறையில் உள்ளது. இது மொத்த பாலின சம்பள இடைவெளியான 16 சதவீதத்தை மட்டுமே அதிகம். 

பேரிடர் கால வறுமை பெண்களையே அதிகம் பாதித்துள்ளது. 25 முதல் 34 வயதுக்குள்ளானவர்களில் வறுமைக்கு ஆளாகிறவர்கள் 100 ஆண்கள் எனில் அதே வயதில் உள்ள பெண்கள் 118 பேர். உலக தொழிலாளர் ஸ்தாபனம் (ஐ.எல்.ஓ) மதிப்பீட்டின்படி பெண் வேலையின்மை 19 சதவீதம் அதிகம். உலகம் முழுவதும் வீட்டுப் பணியாளர்களில் 80 சதவீதம் பெண்கள். அவர்களில் 72 சதவீதம் வேலையிழந்துள்ளனர். 

*இரு கொல்லிகளும்- இந்தியாவும்*

இந்தியாவிலும் கொரொனா- பசி ஆகிய இரு கொல்லிகளும் ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்தி வருகின்றன. 

இந்தியாவில் "சமுக விலகல்" என்ற வார்த்தையே தீண்டாமையை நினைவூட்டுவதாகும்.  உலக சுகாதார அமைப்பு கொரொனாவுக்கு எதிரான வழிமுறையாக அதை அறிவித்த போது இங்கே அவ் வார்த்தை எத்தகைய உணர்வுகளை ஒவ்வொர் சமுக குழுக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கும் என்பது தனி ஆய்வு. 
"தனி மனித விலகல்" என்ற சொல்லாடலையே முற்போக்கு அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

பணக்கார இந்தியா "சமுக விலகலை" கடைப்பிடிக்கும் போது ஓர் பொறுப்புள்ள குடிமகனாக தன்னை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்து கொள்கிறது. மொத்தமாக அரிசி, பலசரக்கு, காய்கறிகளை வாங்கி குவித்துக் கொள்கிறது. புத்திசாலித் தனமாக அதை செய்து விடுவதை நினைத்து குதூகலம் அடைகிறது. "இல்லத்தில் இருந்தே பணி" என்பதில் செலவுகள் குறைவதை எண்ணி பூரிப்பும் கொள்கிறது. வீட்டிற்குள் கூட விலகி விலகி நடந்து ஒழுங்கை காட்ட இரண்டு, மூன்று அறை வீடுகள் விரிந்து கொடுக்கின்றன. இது கூட மிகுந்த உயர் வருமான பகுதியினர் அனுபவிப்பதே.

மத்திய தர ஊழியர்கள், இது போன்ற பாதுகாப்பை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. பஞ்சப்படி உயர்வு ரத்து,  ஊழியர் பயன்கள் வாபஸ், தனியார் நிறுவனங்களில் ஆட் குறைப்பு ஆகியன அச்சுறுத்துகின்றன. 

"பரிதவிக்கிற இந்தியா" என்ன செய்யும்? அன்றாடம் வேலை பார்த்தால்தான் சாப்பாடு என்று இருப்பவர்கள். அன்றாடம் காய்கறி, பலசரக்கு வாங்கியே காலம் ஓட்டியவர்கள். ஒரு ஹால், ஓரத்தில் அடுப்பு, திரை மறைத்த தனி அறை... இதில் ஐந்தாறு பேர் படுத்து உறங்கி பழகியவர்கள். எப்படி தனி மனித விலகல் விதிகளை கடைப்பிடிக்க முடியும்? ஒழுக்கமற்றவர்கள், நோய் பரப்புபவர்கள் என அவச் சொற்கள் வேறு வீசப்பட்டது அவர்கள் மீது. 

தாராவியில் பரவியவுடன் எதிர்பார்த்ததுதானே... என்று தங்களின் அறிவை மெச்சிக் கொண்டவர்கள் உண்டு. வட சென்னைக் காரர்கள் ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என துக்ளக் "ரமேஷ்" தொலைக் காட்சி பேட்டிகளில் அறிவுரை வழங்கினார். காசிமேடு மீன் சந்தை பற்றிய ஒவ்வாமை அவர் பேச்சில் வெளிப்பட்டது. 

விமானங்களில் வந்த நோய்க்காக அதை அண்ணாந்து பார்த்ததை தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத எங்களுக்கு ஏன் இவ்வளவு தண்டனை? என்று விவசாயத் தொழிலாளர்களும், அமைப்பு சாரா உழைப்பாளிகளும் கேட்கிறார்கள். 

*விரட்டுகிறது சாதியும் நோயும்*

புலம் பெயர் உழைப்பாளிகள் 13 கோடி பேர் மாநிலம் விட்டு மாநிலம், சொந்த மண்ணை மறந்து, உறவுகளைத் துறந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் வேலை இழந்து விட்டனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்த காட்சி "வல்லரசு கனவு" கொண்டிருந்த கண்கள் மீது வெந்நீர் ஊற்றியது போல இருந்தது. உலகமயம் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள ஏற்றத் தாழ்வான வளர்ச்சியின் விளைவை நாடு அதிர்ச்சியோடு தரிசித்தது. இவர்களில் பெரும் பகுதி சாதி அடுக்குகளில் நசுக்கப்படுபவர்களே. 

மத்திய பிரதேசத்திற்கு திரும்பிய 7,30,000 பேர் பற்றிய இந்தியன் எக்ஸ்பிரஸ் (09.06.2020) செய்தி பாருங்கள். இவர்களில் 60 % பேர் பட்டியல் சாதியினர், பழங்குடியினர். 38 சதவீதம் பேர் இதர பிற்பட்ட சாதியினர். இப்படி புலம் பெயர் தொழிலாளர் மத்தியில் விரிவான சர்வே மற்ற மாநிலங்களில் நடந்தேறவில்லை. அம் மாநிலத்தில் 36 % தான் பட்டியல் சாதி, பழங்குடி மக்கள் தொகை. ஆனால் வாழ வழியற்று வேறு மாநிலம் தேடிப் போனவர்களில் பட்டியல் சாதி, பழங்குடியினர் 60% பேர். சாதி விரட்டியது அவர்களை. நோய் திருப்பி அனுப்பியுள்ளது மீண்டும். 

இவர்கள் எல்லாம் வெளி மாநிலங்களில் கட்டுமான சித்தாள், விவசாயக் கூலி, மர வேலை, காவல்காரர், கடைப் பையன், ஒட்டல்களில் க்ளீனர் ஆக வேலை பார்த்தவர்கள். அதுவும் பறி போயுள்ளது. 

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் புகலிடம் தேடுகிற மாநிலங்களும், வர்ணாசிரம வேலைப்பிரிவினையை தயாராக வைத்திருக்கின்றன. பட்டியல் சாதியினர்க்கு என்று உடல் உழைப்பு வேலைகள் காத்திருக்கின்றன. இவர்கள் தஞ்சம் புகுந்த முகாம்களில் கூட சாதிய பாரபட்சங்களை எதிர் கொண்டனர்.

இதோ அரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வின் முடிவு. கோவிட் நெருக்கடியின் போது உயர் சாதியினர்க்கு ஏற்பட்ட  வேலையிழப்புகளை விட பிற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் இரண்டு மடங்கு அதிகம். பட்டியல் சாதி தொழிலாளர்கள் மத்தியில் மூன்று மடங்கு அதிகம். 

கிராமங்களுக்கு திரும்பிய தலித் புலம் பெயர் தொழிலாளர்க்கு அரசின் கிராமப் புற வேலைத் திட்டங்களின் பலன் கிடைக்கவில்லை; கிராமத் தலைவர்கள் தங்கள் சொந்த சாதியையே கவனிக்கிறார்கள் என இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆகஸ்ட் 21, 2020) செய்திக் கட்டுரை தெரிவிக்கிறது. 

எல்லா சாதிகளிலும் ஏழைகள் இருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடியின் வலியை அனுபவிக்கிறார்கள்.  ஆனால் அடித்தள மக்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் யதார்த்தம். அவர்கள் இரட்டைத் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள். 

*20 லட்சம் கோடி யாருக்கு*

20 லட்சம் கோடி நிவாரணம் என்று மோடி அறிவித்தார். எல்லோருக்கும் ஆச்சரியம். ஏற்கனெவே பிப்ரவரி மாத பட்ஜெட்டில் 30 லட்சம் கோடி செல்வு என கூறப்பட்டுள்ளதே. இது கூடுதல் 20 லட்சம் கோடிகளா? என்றால் பதில் இல்லை. சரி. செலவுக்கு கணக்கு சொல்கிற நீங்கள் எங்கிருந்து வரவு வைப்பீர்கள் என்றால் அதற்கும் பதில் இல்லை. 

சாமானிய மக்கள் எல்லாம் சொந்த கிராமங்களுக்கு போய் இருக்கிறார்களே, அவர்களுக்கு கிராமப்புற வேலை உறுதி சட்டத்தில் வேலை தருவோம் என்கிறீர்களே,  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்தானே 100 நாள் வேலை, எப்படி இவர்களுக்கு கிடைக்கும் என்று கேட்டால் பதில் இல்லை. 

நகராட்சி பகுதிகளுக்கு திரும்பி இருக்கிற புலம் பெயர் தொழிலாளர்கள் அருகிலுள்ள கிராமங்களில் வேலை உறுதி சட்டத்தின் பயனாளிகளாக இருக்க இயலாதே, அவர்களுக்கு என்ன ஏற்பாடு என்றால் பதில் இல்லை. 

சொந்த ஊர் தொழிலாளர்கள் ஆட்டோ ஒட்ட முடியவில்லை, பிளம்பிங் வேலை செய்ய முடியவில்லை, எலெக்ட்ரீசியன் வேலை பார்க்க முடியவில்லை... இப்படி வாழ்க்கைக்கு வழியில்லாமல் நிற்கிறார்களே அவர்களுக்கு வாழ என்ன வழி என்று கேட்டால் பதில் இல்லை.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு இப்போது இவர்கள் எல்லாம் வேலை செய்யத் துவங்கியிருந்தாலும் கடன் வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

இத்தகைய உழைப்பாளி மக்களுக்கு  மாதம் ரூ 7500 ரொக்க உதவி ஏன் அளிக்க கூடாது என்றால் பதில் இல்லை.

இப்படி சாமானிய மக்களுக்கு மூச்சு திணறல் வருகிறது.  

காரணம் என்ன? இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் அரசு நவீன தாராள மயப் பாதையை விட்டு விலக தயாரில்லை. 

*வழி உண்டு மனம் இல்லை*

சென்ற ஆண்டு மட்டும் நிறுவன வரிகளில் தரப்பட்ட சலுகைகள் இரண்டரை லட்சம் கோடிகள். இதில் ரிலையன்ஸ் குழுமம் மட்டும் அடைந்த பயன் ரூ 13000 கோடி. டாட்டா 
ஸ்டீல்  மட்டும் பெற்ற பலன் ரூ 2500 கோடி. அம்பானி துணைவியார் நீடா அம்பானி நாங்கள் பசித்தவர்க்கு சாப்பாடு போடுவோம் என்கிறார். ரத்தன் டாட்டா ரூ 1500 கோடி நன்கொடை அறிவிக்கிறார். இதுவெல்லாம் யாருடைய பணம்? நாய் எலும்பை நாய்க்கே போடுவது போல இந்திய தொழிலதிபர்களின் நிவாரண அறிவிப்புகள் உள்ளன. அரசு தந்த வரிச் சலுகைகளில் இருந்து சிறு துண்டை எடுத்து வீசுகிறார்கள்.

இந்தியாவின் 63 பில்லியனர்களின் சொத்துக்கள் இந்திய பட்ஜெட் வருமானமான 24 லட்சம் கோடிகளுக்கு இணையானது. ஏன் அவர்கள் மீது செல்வ வரி போடக் கூடாது? 

ரூ 7500 ஐ மாதா மாதம் ஊரடங்கு காலத்தில் தருவது ஒன்றும் முடியாத காரியம் அல்ல. அதற்கு அரசியல் உறுதி வேண்டும். நவீன தாராள மயம் விட்டு வில்காமல் இது சாத்தியம் அல்ல. 

இழவு வீட்டில் பொணத்தின் நெத்திக் காசை திருடுவது போல கொரொனா நெருக்கடி காலத்தை பயன்படுத்தி அரசின் பொருளாதார முடிவுகள் திணிக்கப்படுகின்றன.

அரசு நிறுவனங்களின் தனியார் மயம், "ஆத்ம நிர்பர்" அதாவது சுய சார்பு பாரதம் என்ற பெயரில் அறிவிக்கப்படுகிறது. உலக நாடுகள் - அயர் லாந்து, ஸ்பெயின் -  தனியார் மருத்துவ மனைகளை அரசு எடுத்துக் கொள்ளும் என்று அறிவிக்கும் நிலையில் இங்கே தனியார் மயம் அறிவிக்கப்படுவது விசித்திரம்தான். ஏர் இந்தியா இல்லாவிட்டால் வெளி நாட்டில் சிக்கிய இந்தியர்கள் திரும்பி இருக்க முடியாது. ஏர் இந்தியா 18 ட்ரிப்புகள் அடித்தது. அரசு வங்கிகள் மக்களுக்கு நிவாரணத்தை கொண்டு போய் சேர்த்தன. ஆனாலும் தனியார் மயம் என்று பேசுகிற அரசை என்ன சொல்வது? தனியார் மயத்தின் முதல் இரை சமுக நீதியே. இட ஒதுக்கீடு பறிக்கப்படுவது நடந்தேறும். 

வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டிய நேரத்தில் 8 மணி நேர வேலை நாளை 12 மணி நேர வேலை நாளாக மாற்ற பல மாநிலங்களில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன். ஒரே அடியில் ஒரு ஷிப்ட் வேலைகள் காலியாகி விடுமே. 

*சாதீய வன்முறைகளாய்*

பொருளாதார தளத்தில் ஏற்படும் நெருக்கடிகள் சமுக ஒடுக்குமுறைகளாகவும் வெளிப்படுகின்றன. தமிழகத்தில் 100 க்கும் மேற்பட்ட வன் கொடுமைகள், தீண்டாமை குற்றங்கள் நடந்தேறியுள்ளன. சாதி ஆணவக் கொலைகள், கொலைகள், வன்முறைகள், சொத்து அப்கரிப்புகள், கந்து வட்டி தாக்குதல்கள், பொதுப் பயன்பாட்டிற்கான உரிமைகள் மறுப்பு... இப்படி நிறைய அநீதிகள் அரங்கேறியுள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் தலித்துகள் மீது கொடும் தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ரவீந்தரசிங் வார்த்தைகளில் " இன்றைய அரசின், அதன் உயர் மட்டங்களில் அமர்ந்திருப்பவர்களின் சிந்தனைகள் தலித் எதிர்ப்பு கண்ணோட்டம் உடையவை. இத்தகைய மனோபாவம் உடையவர்களே மாவட்ட ஆட்சியர்களாக, காவல்துறை கண்காணிப்பாளராக, காவல் நிலைய அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள் அவர்களைப் பொருத்தவரையில் தலித்துகள் மீதான வன்முறைகள் சாதாரணமானவை" இராமர் கோவில் எழுப்பப்படும் ஃபைசாபாத் மாவட்டமும் இத்தாக்குதல்களுக்கு விதி விலக்கு அல்ல. 

இப்படி நாடு முழுமையுமே சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 

பாலின வன்முறைகள், குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன. 

கொரொனா காலம் பெரிய சவாலை நம் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. குழந்தை திருமணங்கள் ஊரடங்கைப் பயன்படுத்தி நடந்தேறியுள்ளன. 

"நியூ நார்மல்" என்று பேசுகிறார்கள். ஆனால் வரலாற்று சக்கரத்தை பின் நோக்கி சுழற்ற முனைகிறார்கள். உலகம் முழுக்க "நியூ நார்மல்" என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதே நெருக்கடியின் சுமையை ஏற்றப் பார்க்கிறார்கள்.

"தயவு செய்யுங்கள்... மூச்சு திணறுகிறது" என்று கெஞ்சிய, முனகிய, கடைசியில் மௌனித்துப் போன கறுப்பர் ஜார்ஜ் பிலாய்டு கழுத்து மீது 5 நிமிடம் அசையாமல் அழுத்திய முழங்கால் ஓர் குறியீடே. 

அமெரிக்காவில் வெள்ளையர்களும் வீதிகளுக்கு வந்து கறுப்பர் உரிமைகளுக்காக கரம் கோர்த்தது நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது. 

வர்க்கங்களின் திரட்டல்கள் தேவைப்படுகின்றன. ஜனநாயகம், சமுக நீதி, பாலின நீதிக்கான குரல்கள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.

இத்தகைய எதிர் வினைகள்  அவசரமானது... அவசியமானது...

இதுவே கொரொனா உலகம் முழுவதற்கும் தந்துள்ள பாடம். 

*க.சுவாமிநாதன்*

Saturday, October 24, 2020

இந்த வருடம் உயிரோடு. போன வருடம் ????

 கடந்த இரு பதிவுகள் சூடாக இருந்ததால் சற்றே இளைப்பாற  . . .

ஒரு கடிதமும் பதிலும்



 
வாட்ஸப்பில் வந்த சுவாரஸ்யமான ஒரு பதிவை தமிழில் தந்துள்ளேன்.

 

ஒரு வங்கி மேலாளர் ஓய்வூதியருக்கு அனுப்பிய கடிதம் கீழே உள்ளது.

 

அன்புடையீர்,

 பென்ஷன் பெறுவதற்காக தாங்கள் இந்த ஆண்டு உயிரோடுதான் இருப்பதாக அளித்த சான்றிதழ் கிடைக்கப் பெற்றது. மிக்க நன்றி. தாங்கள் கடந்த வருடம் அளித்த சான்றிதழ் காணாமல் போய் விட்டது. அதனை இந்த வருடம் ஆய்வுக்கு வந்த அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்களிடம் கடந்த ஆண்டு நீங்கள் உயிரோடு இருந்ததற்காக அளித்த சான்றிதழின் நகல் இருந்தால் அனுப்பி வைக்கவும். அப்படி நகல் இல்லையேல் தாங்கள் கடந்த வருடம் உயிரோடுதான் இருந்தேன் என்பதற்கு ஒரு சுய அறிக்கை (Self Declaration) அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 ஓய்வூதியரின் பதில்

 

மதிப்பிற்குரிய ஐயா,

 நான் இந்த ஆண்டு உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்கான சான்றிதழ் கிடைக்கப் பெற்றதை உறுதிப்படுத்தியமைக்கு நன்றி. நான் கடந்த வருடம் உயிரோடுதான் இருந்தேன் என்பதற்கான சான்றிதழின் நகல் என்னிடம் இல்லை. கடந்த ஆண்டு நான் உயிரோடுதான் இருந்தேன் என்று ஒரு சுய அறிக்கை அளிக்குமாறு கேட்டிருந்தீர்கள். என்னுடைய கடுமையாக ஞாபக மறதி பிரச்சினை காரணமாக, நான் கடந்த ஆண்டு உயிரோடுதான் இருந்தேனா என்பதை எவ்வளவு முயற்சி செய்தும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. அதனால் என்னால் அவ்வாறு அறிக்கை தருவது இயலாமல் போய் விட்டது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகர்யத்திற்கு வருந்துகிறேன்.