Thursday, March 29, 2018

ஜெயமோகனைப் போட்டுத் தாக்கறாங்க!!!!




கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்து போராட்ட நாடக அரிதாரத்தை மீண்டும் பூசிக் கொண்டுள்ள அன்னா ஹசாராவுக்கு முட்டு கொடுத்து தமிழக இலக்கிய மாமேதை ஜெயமோகன் எழுதிய அற்புதமான (அற்பத்தனமான என்றுதான் எழுத வேண்டும். ஆனால் அப்படி எழுதினால் அழகியல் இருக்காது அல்லவா? எது எப்படி இருந்தாலும் அழகியல் அவருக்கு முக்கியமன்றோ?)  கட்டுரை படித்த போதே பதில் எழுத வேண்டும் என்று விரல்கள் துடித்தது.

வழக்கறிஞர் ராஜகோபால் சுப்ரமணியன் அந்த கட்டுரைக்கு ஒரு அற்புதமான (நிஜமாகவே அற்புதம்தான்) எதிர்வினை ஒன்றை முக நூலில் பதிவிட்டிருந்தார்.

வார்த்தைக்கு வார்த்தை போட்டுத்தாக்கி ஜெயமோகனை தோலுரித்து தொங்க விட்டுள்ளார்.

அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆனால் ஜெமோ இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டார். காவிகளுக்கும் வெட்கம், மானம், ரோஷம் என்பதெல்லாம் எப்படி கிடையாதோ, அவர்களின் ஊதுகுழலான ஜெமோவுக்கு கிடையாது.



பொதுவாக அதிஇலக்கியவாதிகளின் புனைவுகள் தான் சாமானியர்களுக்கு புரியாது என்று சொல்வார்கள். ஆனால், ஜெமோ அதிலும் வித்தியாசமானவர். புனைவுகள் எளிதாக இருக்கும். அரசியல் கட்டுரைகள் தான் புரியாது. ஆகவே, சாமானியர்களின் வசதிக்காக ஜெமோவின் கட்டுரைக்கு பொழிப்புரை எழுதும் பணியில் யாம் இறங்கினோம். படித்து தெளிவுறுக.

//அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனேகமாக தமிழ் ஊடகங்கள் அனைத்துமே அவரை புறக்கணித்துவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அவை இங்கே உருவாக்கும் அரசியல்களப் புனைவில் அப்போராட்டத்திற்கு இடமில்லை. மோடி X மோடி எதிர்ப்பு என்னும் ஒரு வரைவை அவை உருவாக்கி அனைவரையும் அதற்குள்ளாகவே சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கின்றன..//

ஏன்டா இப்படி மோடி மோடின்னு எதிர்த்துட்டு திரியுறீங்க..? கொஞ்சமாவது கேப் கொடுங்கடா...பாவம் இல்லியா அவர்..? அண்ணா ஹசாரேவை லைம் லைட்டுக்கு கொண்டு வந்து மோடியை விடுங்கடா...
-----
//மெய்யான காந்தியராக தன் கோரிக்கையில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார் அண்ணா ஹசாரே.எல்லா காந்தியப்போராட்டங்களையும்போல இதுவும் இரண்டு முகம் கொண்டது. ஒன்று நேரடியான நடைமுறைக் கோரிக்கை. லோக்பால் அமைப்பை உருவாக்கி ஊழலுக்கு எதிரான ஒரு சட்டபூர்வ அரணை உருவாக்குவது அது. இரண்டு, அக்கோரிக்கையின் குறியீட்டுத்தன்மை. ஊழலுக்கு எதிரான ஒரு அறைகூவலாக அது நிலைகொள்கிறது. நம் சமூகத்தின் முதன்மைப்பிரச்சினையே ஊழல் என்பதை விடாது நினைவூட்டிக்கொண்டிருக்கிறது//

காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் எதிர்ப்பை கையில் எடுத்த அண்ணா ஹசாரேவின் போராட்டம் பாஜகவுக்கு பெரிய அளவிற்கு உதவி புரிந்து ஆட்சிக்கு வருவதற்கு உதவியது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இந்து மத வெறியர்களின் சிறுபான்மை விரோத நடவடிக்கைகள், எழுத்தாளர்களின் கொலைகள், இந்தித்திணிப்பு போன்ற நடவடிக்கைகள், வங்கிகளின் பணத்தை தொழிலதிபர்களுக்கு வாரி வழங்கி நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அனுமதித்தது, கல்வி, சென்சார், பத்திரிகை, தொலைகாட்சி, நீதித்துறை, ராணுவம் என்று அனைத்து அமைப்புகளும் பாசிஸ்ட்களால் நிரப்பப்பட்டது அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. ஊழல் எதிர்ப்பு என்று ஆட்சியை பிடித்த பாஜக தான் அதானி, அம்பானி முதல் தொழிலதிபர்களிடம் அதிகம் "நன்கொடை" வாங்கிய கட்சி என்பதும் தெரியவந்திருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஒரு பலனும் இல்லை என்பதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்பதும் தான் உண்மை என்று பொருளாதார அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஜிஎஸ்டியின் மூலம் மாநிலங்களிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் இருந்து நிதி தன்னாட்சியும் பிடுங்கப்பட்டு விட்டதால், வளர்ந்த மாநிலங்களே நியாயமான நிதி ஒதுக்கீட்டுக்காக மத்திய அரசின் காலை பிடித்து கெஞ்ச வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று வெகுண்டு எழுந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் சமூக ஊடகங்களின் வலிமை காரணமாக மக்களிடம் சென்றடைய தொடங்கியிருக்கிறது.

பாஜகவின் ஊழல் எதிர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய மோசடி மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்தின் இருப்பிற்கும் பாஜக ஆட்சி விளைவித்த கேடுகளை மக்கள் உணர தொடங்கியிருப்பது இந்து ஞானமரபின் மைந்தர்களுக்கும், பாஜக ஆர் எஸ் எஸ் போன்ற தேசபக்தர்களுக்கும், வலதுசாரிகளுக்கும் பெரிய ஆபத்தில் முடியும்.
எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் அண்ணா ஹசாரே போன்ற காந்திய கோமாளியின் உண்ணாவிரதத்திற்கு முக்கியத்துவம் தந்து நம் பக்கம் இருக்கும் அனைத்து பெரும்பான்மை ஊடகங்களும் அங்கு கண்ணாடியை திருப்புங்கள்.
---------
//காந்தியப்போராட்டத்தின் வழியில் ஒவ்வொருமுறையும் பேச்சுவார்த்தைக்கு இடமளித்து, எதிர்த்தரப்புக்கு வாய்ப்பளித்து அண்ணா ஹசாரே போராடுகிறார். எதிர்தரப்பை நம்புவது காந்தியின் வழி. அந்நம்பிக்கை பொய்க்கையில் மீண்டும் எழுவது அவருடைய முறை. இப்போதைய அரசு அனைத்து வாக்குறுதிகளையும், வாய்ப்புகளையும் தவறவிட்டிருப்பதனால் அவர் களமிறங்கியாகவேண்டியிருக்கிறது.//

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நான்கு வருடங்கள் அவகாசம் கொடுத்து விட்டு விருப்பப்பட்டு கோமாவிற்கு சென்று விட்டார். அதனால், நாட்டில் நடந்த அத்தனை அநியாயங்களும் அராஜகங்களும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது தான் லோக்பால் அமைக்கப்படவில்லை என்பதை தெரிந்து கொண்டவுடன் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துவிட்டார். எனவே, மீண்டும் பாஜக அரசுக்கு அவகாசமும் வாய்ப்பும் அளிக்க வேண்டிய தேவை இருக்கிறது
---------
//ஆனால் அண்ணா ஹசாரே காந்தி அல்ல. காந்திக்கு உறுதியான நாடளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு அமைந்தது, ஆற்றலும் இருந்தது. அவ்வாறு ஓர் அமைப்பை உருவாக்கவியலாமல் போராடும்போது அண்ணா ஹசாரே தனிமைப்படுகிறார். முதுமை அவரை தளர்த்துகிறது. அனைத்துக்கும் மேலாக இருமுனைகொண்டு உச்ச உணர்ச்சிகள் குவிந்துள்ள அரசியல்சூழலில் அவருடைய குரல் தனித்தொலிக்கிறது//

இருமுனை உச்ச உணர்ச்சிகள் என்றால் வேறு என்னவோ ஏதோ என்று நினைத்து விடாதீர்கள். மோடி அண்ட் மோடி எதிர்ப்பு மட்டுமே. எனவே, மோடி எதிர்ப்பை காங்கிரஸ், ஆர் ஜே டி, திமுக, இடதுசாரி எதிரிகள் அறுவடை செய்வதற்கு பதிலாக கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நேச சக்திகளை இந்திய அளவில் உருவாக்க வலிமை இல்லையே, முடியவில்லையே என்று நினைக்கும் போது தான் தனக்கு வயதானதும் தனிக்கட்டையாக இருப்பதும் புரிகிறது.
--------
//மேலும் ஊழலுக்கு எதிரான குரல் திட்டவட்டமான எதிரியைச் சுட்டிக்காட்டுதல்ல. வெறுப்பலைக்கு அதில் இடமில்லை. பெரும்பாலும் மக்களையே அது குற்றவாளிகளாக காட்டுகிறது. ஆகவே அதற்கு பெரிய ஆதரவும் இருக்க வாய்ப்பில்லை. முதல்முறை நாட்டை உலுக்கிய ஊழல்கள் வெளிவந்துகொண்டிருந்த காலம். ஆகவே எதிரி கண்ணுக்குத்தெரிந்தான். மக்களாதரவு எழுந்தது. இன்று அந்த எதிரிகள் ஒவ்வொருவராக சட்டத்திலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா கோருவது அதற்கு எதிரான அமைப்புகளைத்தான். ஆனால் அதை கவனிக்கச்செய்வது கடினம்//

2-ஜி, நிலக்கரி ஊழல் நடந்தவை காங்கிரஸ் திமுக ஆட்சியில் இருந்தார்கள் என்பதால் முதன்முறையாக எதிரிகளை "வெறுப்பு இல்லாமல்" சுட்டிக் காட்டினோம். தற்போது அவர்கள் நீதிமன்றத்தின் மூலம் குற்றமற்றவர்களாக வெளியே வந்துவிட்டார்கள். ரபேல் விமான ஊழல், வங்கிகளின் ஊழல்கள் தெரியவந்தாலும், தற்போது பாஜக ஆட்சியில் இருப்பதாலும், விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற 'தோல்வியுற்ற தொழில்முனைவோர்கள்' பாதுகாப்பாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாலும் திட்டவட்டமாக எதிரியை சுட்டிக்காட்டுவது நோக்கம் அல்ல. எனவே, ஊழல் எதிர்ப்பு என்பது எக்காலத்திலும் பாஜக எதிர்ப்பு வெறுப்பு அரசியலாக மலர்ந்துவிட கூடாது. எனவே, ஊழல் எதிர்ப்பு அமைப்புகளை பாஜக அமைக்கும் என்று நம்பி அவர்களுக்கு அவகாசம் அளிப்பதே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
--------
//ஆனால் எப்போதுமே காந்தியர்கள் தனித்துச்செயல்படத் தயங்கியவர்கள் அல்ல. அவர்களை சமகாலச்சூழல் கிறுக்கர்கள் என்றும் கோமாளிகள் என்றும் முத்திரை குத்துவதைப் பொருட்படுத்தியவர்களும் அல்ல. அவர்கள் நம் சமூக மனசாட்சியின் குரலென ஒலிப்பவர்கள். நம் கீழ்மைகளை, சுயநலங்களைக் கொண்டு அவர்களை நோக்கிக் கெக்கலி கொட்டும்போதும் அவர்களையே நம்பியிருக்கிறோம். அண்ணா வெல்லவேண்டும் என விழைகிறேன்//

தமிழ்நாட்டில் எச்.ராஜா எவ்வளவு கல்லடி படுகிறார், கோமாளியாக்கப்படுகிறார், விமர்சனம் செய்யப்படுகிறார். ஆனாலும் அவரின் வீரியம் குறைந்ததா? நமக்கு நோக்கம் தான் முக்கியம். எவ்வளவு தான் எச்சில் துப்பினாலும் துடைத்துப்போட்டு விட்டு மக்களை மொழி, மதம், பண்பாடு என வெறுப்பு அரசியலில் ஈடுபட செய்யும் நோக்கம் நிறைவேறியதா என்று தான் பார்க்கவேண்டும். இந்து ஞான மரபின் மைந்தர்களை எதிர்க்கும் கீழ்மையான எண்ணங்களையும், குறைந்த பட்ச ஜனநாயக விழுமியங்களை காப்பாற்ற கூடிய அரசுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சுயநலத்தையும் வீழ்த்த வேண்டுமென்றால் அது அண்ணா ஹசாரே போன்ற கிறுக்கர்களால் தான் முடியும். அவரிடம் இருந்து தான் கிரண் பேடிகளும், கேஜ்ரிவால்களும் உருவாவார்கள் என்பதால் அண்ணாவையே நம்பியிருக்கிறோம், அண்ணா மீண்டுமொரு முறை ஜெயிக்க வேண்டும்.
---------
//சில மாதங்களுக்கு முன் கேரளப் பொருளியலாளர் ஒருவர் சொன்னார், உலகிலேயே அதிகம் வரிவாங்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என. நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் ஊதியத்தில் கிட்டத்தட்ட பாதியை வரியாகக் கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே சாலைகள் தனியாரால் போடப்படுகின்றன, கட்டணம் பெறப்படுகிறது. துறைமுகங்கள், விமானநிலையங்கள் , கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் எல்லாமே தனியார். இத்தனை வரிகொடுத்தும் ஒரு நல்ல சாலைக்கு, குடிநீருக்கு, பொதுநீர்நிலைகள் பராமரிப்புக்கு, குப்பை அள்ளுவதற்கு நமக்கு அரசு இல்லை. நாம் திரும்பப்பெறுவது நூற்றுக்கு ஒரு ரூபாய்கூட இருக்காது//

அதே பொருளாதார அறிஞர் தான் காங்கிரஸ் காலத்தில் பெட்ரோல் விலை பேரல் 130 டாலராக இருந்த போது 60 ரூபாய்க்கு விற்றதையும் தற்போது 50-60 டாலராக இருக்கும் போது 78 ரூபாயாக இருப்பதன் முரணையும் சொன்னார். எவ்வளவு தான் ஊழல் இருந்தாலும் ஒப்பீட்டளவில் கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் முன்னேறி இருப்பதை ஆதாரங்கள் சுட்டுகின்றன என்றும் குறிப்பிட்டார். நோபல் பரிசு வாங்கிய அமர்த்தியா சென் எனும் பொருளாதார அறிஞரே கூட தமிழ்நாடு தனியாக இருந்திருந்தால் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கும் என்பதை தெரிவித்திருக்கிறார் . தற்போது கூட காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சியில் தான் தென்மாநிலங்கள் அளிக்கும் வருவாயில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகமாக செலவிடப்படுகின்றன என்பதையும் குறிப்பிட்டார். ஆனால், அவ்வாறெல்லாம் புள்ளிவிபரங்களை குறிப்பிட்டு சொல்வது மோடி அரசை விமர்சிக்கும் செயல் என்பதால் நடுநிலையாக பொதுவாக சொல்வதே வழக்கம்.
--------
//இந்தியாவின் உண்மையான பிரச்சினை இதுவே. பூட்டான் அல்லது ஸ்ரீலங்கா அல்லது நமீபியா போன்ற சிறிய நாடுகளைச் சென்று ஒருமுறை பார்த்துவந்தால்கூட நமக்கு இதுபுரியும். இதையன்றி அனைத்தையும் இங்கே அரசியலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. பலவகைகளில். அதற்குக் காரணம் ஊழல். அது இருக்கும் வரை எவர் அரசமைத்தாலும், எந்தக்கொள்கை பேசினாலும் இங்கே ஏதும் நிகழப்போவதில்லை.//

எனவே தாம் சொல்கிறோம், 'இந்து பாசிசம், மொழித்திணிப்பு, கூட்டாட்சிக்கு வேட்டு, சிறுபான்மை விரோதம், ஜனநாயக மறுப்பு, எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கியும்,வாங்காமலும் சட்டவிரோத ஆட்சிகளை நாடு முழுவதும் நடத்துவது, போன்றவை முக்கியமல்ல..ஊழல் தான் இந்த நாட்டின் முதன்மையான முக்கியமான பிரச்சினை.
------
//நாம் நம் ஊழல்மனநிலையால், வெவ்வேறு காழ்ப்புகளால், இனம் சாதி மதம் சார்ந்த பற்றுகளால் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறோம் என்பதனாலேயே நமக்கு ஊழலைப்பற்றிப் பேசுவது பிடிப்பதில்லை. அதை எதிர்ப்பது கோமாளித்தனமாகத் தெரிகிறது. ஆனால் அதுவே தலையாய பிரச்சினை என நம்மிடம் ஓயாது ஒருகுரல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது அவ்வகையில் அண்ணா ஹசாரேயின் போராட்டம் அதன் பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறது.//
எனவே பாஜக எதிர்ப்பு சக்திகளிடம் சென்று ஊழலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவிடாதீர்கள்...அண்ணாவை ஆதரியுங்கள்...அல்லது அண்ணா போல தோற்றமளிக்கும் சிஸ்டம் எஞ்சினியர் ரஜினி, மய்யவியலாளர் கமல் போன்ற கோமாளிகளை ஆதரியுங்கள்...

1 comment: