Monday, March 5, 2018

ஆபாசப் படமில்லை. வலியின் வெளிப்பாடு



ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் பற்றி காலையில் எழுதிய பதிவிற்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருந்தன.

நீயும் ஆபாசப்படம் போட்டுள்ளாயே என்று ஒரு அனானி.

இப்படி ஆடைகள் இல்லாமல் அவர்களை போராடத் தூண்டியது எது என்று விளக்கம் கேட்டார் இன்னொரு அனானி.

இது ஆபாசமா என்பதை கடைசியில் சொல்கிறேன். 

இப்படி ஒரு போராட்டம் நடத்த அந்தப் பெண்கள் ஏன் தள்ளப்பட்டார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டியது அதை விட மிகவும் முக்கியம். அவருக்கு மட்டுமல்ல, அந்த சம்பவம் பற்றி தெரியாதவர்களுக்கும் கூட.

முதலில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

“வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை ஒடுக்க முதன் முதலாக பிரிட்டிஷ் அரசு 1942 ல் கொண்டு வந்த சட்டம் இது. இச்சட்டத்தின் படி எந்த ஒரு போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப் படும். அவர்களின் எந்த செயல் மீதும்  சட்டரீதியான விசாரணை செய்வதில் இருந்து ராணுவத்திற்கு பாதுகாப்பு அளிப்பதே இச்சட்டத்தின் நோக்கம். “எந்த செயல்” செய்தாலும் பாதுகாப்பு என்பதால் அந்த பாதுகாப்பு பயன்பட்டது ராணுவத்தின் அத்து மீறல்களுக்கே. பாலியல் வன் கொடுமைகள் என்பதே பிரதான அத்து மீறலாகவும் இருந்தது.

இந்தியா விடுதலை பெற்றதும் பதினோரு ஆண்டுகளுக்குப் பின்பு இச்சட்டம் 1958 ல் முதன் முதலில் ஒரு அவசரச்சட்டம் வாயிலாகவே நாகாலாந்து மாநிலத்தில் பிரயோகிக்கப்பட்டது. எந்த ஒரு பகுதியாவது “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதி (Disturbed Province)  என்று அறிவிக்கப்பட்டால் அப்பகுதிகளுக்கு  இச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என்று  கொண்டு வந்தார்கள்.

நாகாலாந்தில் தொடங்கியது மணிப்பூருக்கு பரவி பிறகு ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1970 ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் அமலாக்கப்பட்டது.

இச்சட்டம் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு உதவுவதற்குப் பதிலாக சாமானிய மக்களை ஒடுக்குவதற்கும் போலி எண்கவுண்டர்களை செய்வதற்கும் பாலியல் வன் கொடுமைகளை நிகழ்த்துவதற்கும் மட்டுமே அதிகமாக பயன்பட்டது. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைரியத்தை ராணுவத்தை தங்கள் மோசமான செயல்களுக்கு கேடயமாக பயன்படுத்திய தீயவர்களுக்கு அளித்தது.

ராணுவத்திற்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்ததுதான் இச்சட்டத்தின் சாதனை. அதனால்தான் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வட கிழக்கு மாநில மக்களும் காஷ்மீர் மாநில மக்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன் கொடுமைகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா குழு அளித்த பரிந்துரைகளில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையும் அடங்கும். அதனை மன்மோகன்சிங் அரசு ஏற்கவில்லை.

காஷ்மீர் பிரச்சினையில் அம்மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க செய்ய வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பல நிபுணர்கள் சொல்வதும் இச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதைச் செய்வது பற்றி யோசிக்கக்கூட மோடி அரசு தயாராக இல்லை.

இப்போது மணிப்பூர் பிரச்சினை பற்றி பார்ப்போம்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2010 ம் வருடம் ஜூலை மாதம் பத்தாம் நாள் தங்க்ஜம் மனோரமா என்ற  32 வயது பெண்மணி 22 அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்ற ராணுவப் பிரிவால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுகிறார்.

அவர் மீண்டும் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவரது சடலம்தான் கிடைக்கிறது.

 மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டிருந்தார். 

இளகிய இதயம் உள்ளவர்கள் கீழேயுள்ள பத்தியை மட்டும் படிக்க வேண்டாம்.

அவரது பிறப்புறுப்பில் மட்டும் பதினாறு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. உடல் முழுதிலும் கொடூரமாக கடித்து குதறி இருந்தார்கள். பலர் கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்த பிறகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மனோரமாவின் கொடூர மரணம், அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை, மணிப்பூர் மக்களின் மனசாட்சியை உலுக்கியது. "Meira Baibi" (மணிப்பூரின் தாய்மார்கள்)  என்று அழைக்கப்பட்ட  பெண்களின் அமைப்பு மனோரமாவின் கொடுமைக்கு நியாயம் கேட்க யாருமே எதிர்பார்க்காத அந்த போராட்ட வழிமுறையை கையாண்டது. 

ராணுவத்திடமிருந்து பெண்களை பாதுகாக்க இரவு நேரங்களில் கையில் விளக்கோடு ரோந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. 1977 லிருந்து செயல்படுகிற அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் அஸ்ஸாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பாக திரண்டார்கள்.  ஆடைகளைக் களைந்து கையில் ஒரு பேனரோடு முழக்கமிட்டார்கள்.

மொத்தம் பனிரெண்டு பெண்கள், அனைவரும் இளம் பிராயத்தைக் கடந்த நடுத்தர வயதுப் பெண்கள். இந்த சூழல் நடந்தால் நாளை மனோரமாவிற்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும். அதற்கு இந்த நிலை எவ்வளவோ மேல் என்று போராட வந்ததாக அவர்கள் கூறினார்கள். 

போராட்டம் நடத்திய அவர்கள் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்களே தவிர மனோரமாவை சித்திரவதை செய்து கொன்றவர்கள் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. அதனால் அவர்கள் எந்த தண்டனையும் இன்றி சுகமாகவே உள்ளனர்.

அவர்களின் போராட்டப் படத்தை பகிர்ந்து கொள்வது ஆபாசப் படத்தை வெளியிட்டதாக கருதுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

உலக வரலாற்றில் மக்களின் மனசாட்சியை உலுக்கிய சில புகைப்படங்கள் உண்டு.

வியட்னாமில் இரசாயன ஆயுதத்தின் வெப்பம் தாங்காமல் ஓடி வந்த பெண்,

போபாலில் சவக்குழியில் புதைக்கப்பட குழந்தை.

பட்டினியில் வாடும் குழந்தை உயிர் துறக்க காத்திருக்கும் கழுகு 

போல இந்த படமும் 

வலியும் வேதனையும் நிரம்பியது. 



அதனை ஆபாசம் என்று சொல்வது பார்ப்பவர்களின் கண்களும் மனதும் பழுது பட்டது என்றுதான் சொல்ல முடியும்.



2 comments:

  1. மிகவும் .வலிக்கிறது. ஒரே ஒரு கேள்வி. இதில் மோடி மீது மட்டும் எப்படி குற்றம் சாட்டுகிறீர்கள்? அதுவும் இந்த சட்டம் அமலுக்கு வந்த போதும் நடந்த பெரும்பான்மை சம்பவங்களின் போதும் அவர் பதவியில் இல்லாத போது!

    ReplyDelete
    Replies
    1. முந்தைய பதிவின் தொடர்ச்சி இது.
      அஸ்ஸாமில் நீட்டித்ததும் நாளை திரிபுராவுக்கும் வர இருப்பதும் மோடியின் விளைவு.

      அடிப்படையில் இந்த பதிவு இச்சட்டத்தை கேடயமாக வைத்து அட்டூழியம் செய்யும் ராணுவத்தினருக்கு எதிரானது. இப்பதிவில் மோடியைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லையே.

      Delete